ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

இரா முருகன்


இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பழசு ஒரு புதுசு.

பழைய, செகண்ட் ஹாண்ட், கிடைத்தற்கரிய புத்தகங்களுக்காக ‘ரேர் புக்ஸ் ‘ என்று ஸ்டால் திறந்திருக்கிறார்கள்.

ஐம்பது வருடத்துக்கு முந்திய (1955) ‘மஞ்சரி ‘ bound volume ஒன்றும் 1966-ம் ஆண்டு குமுதம் தொடர்கதையைக் கிழித்துத் தைத்து அட்டை போட்ட

தொகுப்பும் இங்கே வாங்கினேன்.

இங்கே குமுதம் தொகுப்பு.

ஜ.ரா.சுந்தரேசனின் ‘பூங்காற்று ‘ தொடர்கதை அது. அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் புகழ் பாக்கியம் ராமசாமியும் அவரேதான்.

அது போல் வேறு நிறையத் தொகுப்புகள் இருந்தாலும் மனம் ஏனோ அதைத்தான் வாங்கு வாங்கு என்றது.

கதையைச் சாவகாசமாகப் படிக்க வேண்டும்.

1966 குமுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து படிக்க 1966-ல் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. வீட்டில் குமுதம் வாங்கமாட்டார்கள். கல்கியும் விகடனும் தான் பதிவு. கிட்டத்தட்ட நாற்பது வருடம் கழித்துத் திரும்ப 1966-ல் நுழையும் போது ஏற்படும் உணர்வே அலாதிதான்.

அந்தப் புத்தகத்தை மெல்லப் புரட்டியபோது –

துணுக்கு எழுத்தாளர்களின் முதல் தலைமுறையைத் துவக்கி வைத்த தஞ்சை குஞ்சிதபாதம் எழுதியிருக்கும் துணுக்கு –

****

‘ஹவுஸ் ஃபுல் என்று இரு ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக அழகாகத் தமிழில் ‘அவை நிறைந்து விட்டது ‘ என்ற அறிவிப்புப் பலகையை உபயோகிக்கும் சினிமாக் கொட்டகை ஒன்று சென்னையில் இருக்கிறது. எங்கே ? மயிலாப்பூரில்.

தியேட்டர் பெயர் கபாலி டாக்கீஸ்.

****

ஒரு விளம்பரம் :

மானையும் தேனையும் மதியையும் நதியையும்

மயிலையும் குயிலையும் மலரையும் மாதரையும்

பாடாத புலவனில்லை போற்றாத கவிஞனில்லை.

அன்பர்கள் ரத்தினம் பொடியை ரசித்து மகிழாத நேரமில்லை.

****

நிறையக் கோட்டோவியங்களோடு டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடி விளம்பரம். உரலில் உலக்கையால் பொடியை இடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் திடகாத்திரமான இளைஞன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறான். எஸ்.ஆர்.ஞானம் பொடியும் எமது தயாரிப்பே என்று விளம்பரம் முடிகிறது.

கால் பக்க விளம்பரமாக –

****

பெற்றோர்கள் மக்களுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய உன்னத உண்மை வரலாறு.

ஸபையர் – வீகம்ஸி தியேட்டரில் தினசரி மாலை 1:30, 5:30, 9:30க்கு

5 அகாடமி பரிசுகளைப் பெற்ற ‘தி ஸவுண்ட் ஆப்ஃ மியூஸிக் ‘

****

கருப்பு வெள்ளையில் இத்தணூண்டுக்கு ‘ஐயாம் சிக்ஸ்டான் கோயிங் ஆன் செவண்டான் ‘ என்று சதுரத்துக்குள் ஓடி வந்து கொண்டிருக்கும் ஜூலி ஆண்ட்ரூஸ் அங்கேயே இருக்கட்டும். சதுரத்தைத் தாண்டி ஓடி இங்கே வந்தால், சபையர் தியேட்டர் இருந்த கலகலப்பான இடம் வெறுமையாகக் கிடப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகும்.

இன்னொரு கால்பக்க விளம்பரம் சந்தனுவின் சித்திரக்கலை வித்யாலயத்திற்கு (ஸ்தாபிதம் 1957; போன் 82796)

****

இங்கிலாந்தில் நம் மாணவர்!

கலைகளுக்குப் பேர்போன இங்கிலாந்து தேசத்தில் ஹாலிபாக்ஸ் நகர், பெல்லன் லேன் 18/20 பென் தெருவில் வசிக்கும் திரு.கே.சேக் அப்துல் காதர் அவர்கள், நம் வித்தியாலயத்திலிருந்து விமானம் மூலம் பாடங்களைப் பெற்றுப் படிக்கிறார்.

இங்கிலாந்தில் இல்லாத படிப்பா என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆம்! ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலும் உள்ளவர்கள் புரிந்து பயனடையும்படி கற்றுக் கொடுக்கிறோம் நம்முடைய பாடங்களை.

****

சேக் அப்துல் காதர் அவர்களே, நலமா ? ஓவியராகி விட்டார்களா ? ஒரு வருடம் ஹாலிபாக்ஸில் இருந்தேனே. தெரிந்திருந்தால் தேடிக் கண்டுபிடித்து ஓடி வந்திருப்பேனே!

8 டிரான்ஸிஸ்டர் – 2 பாண்ட் – எக்ஸ்ட்ரா ஏரியல் மற்றும் பவரோடு ஷார்ப் ரேடியோ ரூ 225 முழுப் பக்க விளம்பரத்தில் பாப் செய்த கூந்தலோடு அழகாகச் சிரிக்கிற பெண்ணுக்கு இப்போது அறுபது சில்லரை வயதாகி இருக்கலாம். அவருக்குப் பக்கத்தில் பெரிய எழுத்தில் ‘90,00,000 செவிகள் கேட்டு ரசிப்பது ஷார்ப் ரேடியோ ‘.

இதில் எத்தனை செவிகள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரியாது. ஆனால் ஒரே ஒரு ஷார்ப் ரேடியோ எங்கேயாவது இன்னும் பாடிக் கொண்டிருக்கும் என்று தேசலாக ஒரு நம்பிக்கை.

நாயுடுஹால் அரைப்பக்க விளம்பரம் இப்படி முடிகிறது –

நாயுடு ஹால் பாடி என்று சில பாடிகளைக் கொடுத்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் ஏமாற்றுகிறார்கள். பாடிகளை வாங்கும்பொழுது ‘நாயுடுஹால் ‘ லேபிள் இருக்கிறதா என்று சரிபார்த்து எங்கள் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகளிடம் மட்டும் நம் தயாரிப்புகளை வாங்கிவரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

(ஷார்ப் ரேடியோவுக்கு எழுதிய கமெண்டை நினைவிலிருந்து அழித்துவிடவும்)

ஒரு சினிமா விமர்சனம் – இரண்டு பக்கத் திரைப்பட விமர்சனத்தில் முதல் பக்கம் இல்லாததால் (தொடர்கதைப் பக்கத்தொகுப்பு என்பதை நினைவு வைக்கவும்) திடாரென்று ஆரம்பிக்கிறது –

****

மகாகவி என்பதைக் காட்டிலும் மகா மாந்திரீகன் என்பதே பொருத்தம். வாதத்தில் விழுந்த தாயை ஒரு பாட்டால் எடுத்து நிறுத்தி விடுகிறானே!

அறிவொளி கிடைத்ததும் காளிதாசன் பாடத் தொடங்கும் திடார்த்தனம் – 1966ம் வருடத்துப் படமா இது ?

பொதுவாகவே அலுப்புத் தட்டினாலும், இடையில் கதையே சோம்பல் முறிப்பது தெரிகிறது.

துவக்கத்தில் மெய் சிலிர்க்க வைக்கிறார் காளி வேடத்தில் கே.பி.சுந்தராம்பாள். போகப்போக அவருக்கும் டிவாலியூஷன் தான்.

அரசிக்கும் காளிதாசனுக்கும் நட்பு என்று காளிதாசனின் காதலுக்கு ஏங்கிய ஒருத்தி கதை கட்டுகிறாள். சகுந்தலா தான் அரசி என்பது வெகு நேரத்துக்குத் தெரியவில்லை.

நாகேஷ். ஹூம்.

மொத்தத்தில் – வருந்துகிறோம்.

****

இது சிவாஜி கணேசன் நடித்த ‘மகாகவி காளிதாஸ் ‘ என்று ஊகிக்க முடிகிறது. சகுந்தலா ? சிவாஜி நாடக மன்றத்தின் ஆஸ்தான நடிகையாக இருந்த ஜி.சகுந்தலாவாக இருக்குமோ ?

மகாகவி காளிதாஸ் பட விமர்சனம் பற்றி அடுத்த வாரம் வந்த கடிதத்தில் கபிஸ்தலம் இர.சிவசுப்பிரமணி அங்கலாய்ப்பது இப்படி –

காளியை கே.பி.சுந்தராம்பாளாக விதவைக் கோலத்தில் காட்டியிருக்கிறார்கள். காளியம்மனுக்குக் குங்குமமும் பூவும்தானே சிறப்பு ? இதுபற்றி நீங்களாவது ஒரு வரி எழுதியிருக்கக் கூடாதா ?

ஆசிரியருக்குக் கடிதங்களில், முந்திய இதழில் வந்ததை விமர்சிக்கிற கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை அப்போதே குமுதம் தொடங்கிவிட்டிருக்கிறது.

போன இதழில் வெளியான ‘ ‘வேணு என்ன எழுதினான் ? ‘ என்ற சிறுகதையில் வரும் ராணுவக்காரனான தாமு, தன் இருபது நாள் லீவு முடிந்த பிறகு எப்படி நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம் செய்துகொண்டான் ? தன் இஷ்டப்படி எல்லாம் லீவை நீட்டிக்கொண்டுபோக ராணுவத்தில் முடியாது ஐயா! (உரத்தநாடு ஜே.பிரதாபன்).

15 பைசாவுக்கு எந்தக் காலத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் விற்றது என்று தெரிந்து கொள்ளவேண்டும். எங்கள் ஊரில் 10 பைசாவுக்குத்தான் விற்கிறது. வேண்டுமானால் கேளுங்கள். கொடுக்கிறேன். (கயத்தூர் எஸ்.சுவாமிநாதன்).

சுதர்சனின் ‘நகைச்சுவை ‘த் துணுக்குகள் எல்லாப் பக்கத்திலும் உண்டு.

****

அடடா என்னடா இது, காலிலே ரத்தம் ? பெரியவர் கேட்கிறார்.

சினிமாக் கவிஞர் மகன் சொல்கிறான் –

ஜின் ஜின் நா கடி

ஜின் ஜின் நா கடி

ஜின் ஜின் நாய்க்கடி

ஜின் ஜின்னா !

****

(எங்கே, எந்தப் பாட்டு, படம் சொல்லுங்கள் பார்ப்போம். க்ளூ- வருடப் பெயரும் ஒட்டிவரும் பாட்டு.)

மலையாளத்தில் ‘செம்மீன் ‘ திரைப்படமாகி உலக அரங்குக்குப் போன வருடம் அது. குமுதம் ஜோக்கில் ஆபீஸுக்கு முண்டும், பிளவுசுமாக வரும் ஸ்டெனோவிடம் மானேஜர் விசாரிக்கிறார் – ‘அட தெய்வமே இதென்ன டிரஸ் ? ‘

ஸ்டெனோ பதில் – செம்மீன் டிரஸ்.

1966-ம் ஆண்டு அரசியல் மற்ற நாட்டு நடப்பு நிகழ்ச்சிகள் தெரியாததால் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு துணுக்கு –

****

ஞாயிற்றுக்கிழமை கற்பனை வார இதழில்

இசை : டமாரம் அடிப்பது எப்படி – ஏ.வி.பி ஆசைத்தம்பி

மருத்துவம் : புத்தூர் வைத்தியத்திலுள்ள சிரமங்கள் – ஜ.ஜி. அருள்.

சிறுகதை : நெக்லஸ் (மாபஸான் தழுவல்) – ராம் மனோஹர் லோகியா.

சமையல் குறிப்பு : உருளைக்கிழங்கு பொடிமாஸ் – முன்னாள் உணவு மந்திரி ராமையா.

பாடல் : மை கியா கரூன் – வைஜயந்திமாலா

சொந்த அனுபவம் : கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன் – பாண்டிச்சேரி வரத பிள்ளை.

****

அரைப்பக்கம் மட்டும் மிச்சமிருக்கும் திரைப்பட விமர்சனம் இது –

தாய் தந்தையர் இன்னார் என்று தெரிந்த பிற்பாடு குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கக் கதாநாயகன் தயங்குகிறான் என்பது மட்டுமில்லை. அதைக் கொடுக்க மாட்டேன் என்று நீதிமன்றத்தில் வழக்காடும் அளவுக்குப் போய்விடுகிறான். ஆரூர்தாஸ் பாட்டால் ஆகிவிட்டார். குணசித்திரத்தில் இப்படியா தடம் புரள வேண்டும் ?

வில்லனாக ஆரம்பித்து நண்பனாக மாறி, துரோகியாகத் திரும்பித் தோல்வியுறும்

…. வை இத்தனை நாள் கழித்துச் சந்திக்கும்போது ஒரு திருப்தி உண்டாகிறது.

பொதுவாகவே வசனத்தில் சுவையுண்டு என்றாலும் அவர் பேசும்போது அது உயிர் பெறுகிறது. உதாரணம் ‘

‘உன் கல்யாணத்தை ஓஹோ என்று இல்லாவிட்டாலும் (இங்கே கொஞ்சம் இடைவிட்டு) ஆஹா என்றாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்படறேன் ‘.

(என்ன படம் தெரிகிறதா ? க்ளூ – தமிழக அரசியல் வரலாற்றின் திசையை மாற்றிய நிகழ்ச்சிகளுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு உண்டு. )

பின்குறிப்பு –

புத்தகத்தை வாங்கிக் கொண்டு கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் பேசிக் கொண்டிருந்தேன். மெல்ல நடந்து வந்த ஒரு பெரியவரை ராகவன் அறிமுகம் செய்து வைத்தார். சின்னதாக வியப்பு – ஜ.ரா.சுந்தரேசன்.

குமுதம் bound volume ‘பூங்காற்று ‘ உள் அட்டையில் ஜ.ரா.சு எழுதிக் கையெழுத்துப் போட்டது –

‘மிக்க அன்புடன். எதிர்பாராத மகிழ்ச்சி. ஜ.ரா.சுந்தரேசன் ‘

****

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்