எங்கே போகிறேன் ?

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

கவிநயா


நில், நில், கொஞ்சம் பொறு
எங்கே ஓடுகிறாய் ?
என்னால் முடியவில்லை
என்றது மனசு
சற்றே நின்று உற்றுப் பார்த்தேன்
சுவாசம் ஒன்றை இழுத்து விட்டேன்
ஆடி காட்டிய உருவத்தில்
சிரமப்பட்டு என்னைத் தேடுகிறேன்
களைத்துப் பதைத்த முகத்தில்
வருடங்களின் பதிவு
நெற்றியில் வரிகளாய்
உப்புக் கரிக்காமல் மட்டும் இருந்திருந்தால்
தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்த்திருக்கும்
கண்ணீரின் ஓட்டம்
வற்றாத வாய்க்காலாய்
கையைக் காலை உதைத்துக் கொண்டு
கதறி அழுதாலும்
சீந்துவாரற்ற மனசு
அனாதைக் குழந்தையாய்
பின்னால் விடாமல் விரட்டி வரும்
துயரத்தின் வலிய கரங்கள்
முடிவில்லாமல் நீளமாய்
நிம்மதியும் புன்சிரிப்பும்
எட்டாமல் எங்கோ
தொலை தேசத்துக் கனவாய்
இதையெல்லாம்
நினைத்துப் பார்க்க நேரமின்றி
திரும்பிப் பார்க்கத் திராணியின்றி
நாளை என்ற நம்பிக்கை நோக்கி
நிற்காமல் ஓடுகிறேன்

–கவிநயா
meenavr@hotmail.com

Series Navigation

கவிநயா

கவிநயா