This entry is in the series 20040318_Issue

சேவியர்


0

பள்ளி ஆசிரியர்களை
எப்போது பார்த்தாலும்
தலை தாழ்த்தி வணங்குகிறேன்
பழக்கம் அப்படி.

கல்லூரி ஆசிரியர்களுக்கு
ஒரு கையை மட்டும்
வாயளவு தூக்கி
வணக்கம் சொல்கிறேன்.

நண்பர்கள் என்றால்
தலைக்கு மேல் கைதூக்கி
அசைப்பதோ,
அல்லது
சல்யூட் அடிப்பதோ வழக்கம்.

என்
கல்யாணத்தின் போது
காலில் விழுந்தும்
மரியாதை காண்பித்ததுண்டு.

எப்படியெனினும்
மனம் தான் தீர்மானிக்கிறது
வணக்கத்தில்
புன்னகை கலக்க வேண்டுமா
வேண்டாமா என்பதை.

கை கூப்பி
தலை தாழ்த்தி வணங்குதலே
உண்மையான வணக்கம்
மற்றதெல்லாம் போலி என
பலர்
என்னிடம் சொன்னார்கள்

உண்மையைச் சொல்வதெனில்,
நான்
வணங்காத பலரே
வணக்கத்துக்குரியவர்கள்
பெற்றோர் உட்பட.

0

சேவியர்

Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation