கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இக்கட்டுரையை எழுதுவதற்கு நாம் ஒரு வாக்காளர் என்னும் ஒரே ஒரு தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் நமக்குக் கிடையாது என்பதை எடுத்த எடுப்பில் ஒப்புக்கொண்டு விடுகிறோம்! இக்கட்டுரையைப் படித்து முடித்த பின்னர் எந்த வாக்காளரும் அத் தகுதி தமக்கும் இருப்பதை நிச்சயம் உணர்வார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. (அதாவது, பொறுப்பு உணர்வுள்ள, இதுகாறும் வோட்டுப் போடத் தவறாத வாக்காளர்களைக் குறிப்பிடுகிறோம்.)

மதிப்புக்குரிய நம் குடியரசுத் தலைவர் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சில நாள்களுக்கு முன்னால் (பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தமக்குச் சொன்னதாய்க் கூறி) நமக்குச் சொன்ன கதை எல்லா இதழ்களிலும் வெளிவந்தது. தினமணி வாசகர்களும் அதைப் படித்திருப்பார்கள். ஆற்று மணலை எண்ணலாம், வானத்து விண்மீன்களையும் எண்ணலாம், ஆனால் நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை எண்ண முடியாது என்னும் கருத்தை வெளிப்படுத்திய நகைச்சுவைக் கதை அது என்பதை நாம் அறிவோம்.

மாநிலக் கட்சிகளின் தயவும் கூட்டும் இன்றி இனி மையத்தில் எந்தப் பெரிய அனைத்திந்திய அரசியல் கட்சியே யானாலும் கூட அது தனித்து நின்று வென்று ஆட்சி யமைக்க முடியாது என்பது மிக உறுதியாக வெளிப்பட்டுப் பல நாளாயிற்று. இதில் நிறையவே உண்மை இருப்பினும் தலைக்குத் தலை நாட்டாமை என்னும் தமிழ்ப் பழமொழிக்கேற்ப ஆயிரத்தெட்டு உதிரிக்கட்சிகள் முளைத்தெழுந்து அனைத்திந்தியத் தன்மையைக் குலைத்துவரும் அவக்கேட்டைத் தடுத்து நிறுதுவதற்கு ஒரு நிச்சயமான வழி இருக்கவே செய்கிறது. மாநில அளவிலான இவ்வுதிரிக் கட்சிகளால் மக்களின் வாக்குகள் சிதறிப் போவது ஒன்றுதான் நாம் காணும் பயனாக இது வரையில் இருந்து வந்துள்ளது. பதிவாகாத வாக்குகளுக்கு உரிய வாக்காளர்கள் யாரென்றால் மற்ற நேரங்களில் வாய் கிழிய அரசியல் பேசும் மகா மேதாவிகளான நடுத்தர, படித்த இனத்தினர்.

கூட்டணியே யானாலும் கூட நிலையான ஆட்சி அமைய அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது போல் வாக்குப் பதிவைக் கட்டாயமாக்குதல் ஒன்றே இதற்கு வழி. அங்கும் வேறு சில நாடுகளிலும், வாக்குச் சாவடிக்குப் போகாவிடில், தண்டம் என்னும் அபராதத் தொகை செலுத்தித் தப்பிவிட முடியாது. எப்பேர்ப்பட்ட பணக்காரராகவோ, செல்வாக்குப் படைத்தவராகவோ, மிகப் பெரும் புள்ளியாகவோ இருந்தாலுமே கூட அவர் கட்டாயமாய்க் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஒருவார காலத்துக்கு (நாட்டுக்கு நாடு இது வேறுபடக் கூடும்) அனுபவித்தே யாக வேண்டும்! இப்படி ஒரு சட்டம் நம் நாட்டிலும் இயற்றப் பட்டால் ஒருகால், நிலையான ஆட்சி அமையக் கூடும்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்று நாட்டிலிருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம். இன்றையத் தேதியில் நம் நாட்டில் மாபெரும் இரு கட்சிகள் பாரதிய ஜனதாவும் காங்கிரசும்தான். அடுத்த பெரும் கட்சியாகப் பொதுவுடமைக்

கட்சியைச் சொல்லலாம். மற்ற கட்சிகள் யாவும் மாநில அளவிலான உதிரிக் கட்சிகளே. “உதிரிக் கட்சிகள்” என்னும் சொல்லுக்கு விபரீதப் பொருள் கற்பித்துக்கொள்ள வேண்டாம். இவையும் தேசிய நீரோட்டத்தில் கலந்து விடுதல் நாட்டுக்கு நல்லது என்னும் பொருளில் மட்டுமே இந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், அதற்காக இவை தமது தனித்தன்மையை இழந்துவிட வேண்டும் என்பது பொருளன்று. மாநிலத் தேவைகளுக்கும் போராடும் தெசியப் பார்வை கொண்ட கட்சிகளாக இவை உருப் பெறுதல் நாடு முழுமைக்கும் நன்மை பயக்கும் என்கிற நோக்கில் மட்டுமே இவை சிறுகச் சிறுக ஒழிந்து இல்லாது போக வேண்டியதன் தேவை பற்றி இக்கட்டுரையில் நாம் கூறப் போகிறோம். மறுபடியும் சொல்லுகிறோம் – தேசியப் பெரும் கட்சிகளின் தாக்காத்தால் இவை காணாமற்போவது மாநிலங்களுக்குத் தீமை உண்டாக்கும் என்கிற அவசியமே கிடையாது. நிற்க.

கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம். ஒரு தேர்தல் நடந்து முடிந்ததும் கீழ்க்காணும் முடிவுகள் வெளிப்பட்டதாய் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுவோம்:

கட்சி “அ” – 40

கட்சி “ஆ” – 30

கட்சி “இ” – 10

கட்சி “ஈ” – 9

கட்சி “உ” – 5

கட்சி “ஊ” – 4

கட்சி “எ” – 2

இப்படி ஓர் இரண்டுங்கெட்டான் முடிவு தேர்தல் முடிவாக வெளிப்படும் போது அமையும் கூட்டணி அரசு என்று வேண்டுமானாலும் கவிழக்கூடிய அரசாகவே இருக்கும். எனவே, தேர்தல் முடிவு வெளிப்பட்ட ஒரு வாரத்துக்குள் முதல் இரு கட்சிகளுக்கிடையே மட்டும் மறுபடியும் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது கோடிக்கணக்கான செலவுக்கு வழி வகுக்கும்தான். ஆயினும் இதனால் ஏற்படும் பயன்களோ மிக அதிகம்.

1. கட்சிகளின் எண்ணிக்கை குறையும். உதிரிக்கட்சிகள் யாவும் தேசியக் கட்சிகளில் இணய வேண்டிய கட்டாயம் உருவாகும். தேசியக் கட்சிகளில் இருந்தபடியே அவரவர் சார்ந்த மாநிலங்களுக்காகப் பாடு படுவதற்கு இவற்றுக்கு எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப் பயன் மறு தேர்தலிலேயே ஏற்படாவிட்டாலும் கூட, போகப் போக நிச்சயமாய் ஏற்பட்டுவிடும். ஏற்பட்டே தீரும். (எனினும் முதல் தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றுத் தோற்ற கட்சிகள் இந்த 2 ஆம் தேர்தலின் போது போட்டியிடப் போகும் மாபெரும் இரு கட்சிகளில் எதனுடனும் கூட்டுச் சேரக் கூடாது.)

2. கூட்டணிக் கட்சிகளுக்கு அவ்வப்போது “வாய்க்கரிசி” தந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்து ஆட்சி யமைக்கும் தனிப் பெரும் கட்சி தப்பும். அதிருப்தி கொண்டு கூட்டணியிலிருந்து விலகி ஆட்சியைக் கவிழ்க்கும் கபட நாடகம் எடுபடாமற்போகும்.

3. ஆட்சிக்கு வரும் கட்சி என்று தன் ஆட்சிக்கு ஊறு விளையுமோ என்னும் கவலையிலும், அவ்வாறு நேராது தன்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்ககைகளிலேயே நேரத்தையும் சக்தியையும் செலவிட்டபடி நாட்டின் பிரச்சினைகளைக் கவனிக்காமல் இருப்பதிலும், காலத்தைக் கழிக்காமல் ஒழுங்காய்ச் செயல்பட இம்முறை வழி வகுக்கும்.

4. மாநிலங்களில் ஆட்சி யமைப்பதற்கு ஏற்றவை மாநிலக் கட்சிகள் என்னும் நிலை மாறப் போவதில்லை யாதலால், இக்கட்சிகள் தேசியக் கட்சிகளாய் மாற்றுருக் கொண்டாலும் மாநில ஆட்சியைப் பொறுத்த வரையில் இவற்றின் உரிமைகள் இவற்றிடமே இருக்கும் என்பதால் இவற்றுக்கு இழப்பு ஏதும் இல்லை.

நாட்டின் ஒட்டு மொத்த நலனை மனத்தில் கொண்டால் இரு தேர்தல்களை உடனுக்குடனாக நடத்துவதால் ஏற்படக் கூடிய செலவைப் பற்றி அரசு யோசிக்கக் கூடாது. அடிக்கடி அரசு கவிழ்தல், உரிய காலத்துக்கு முன்னதாய் மறு தேர்தல் என்பவற்றாலும் கூடத்தான் செலவு ஏற்படுகிறது. அதற்கு இது பரவாயில்லை என்பதோடு முழு நாடு தழுவிய, வருங்கால நலனை உத்தேசித்து இதற்கான விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

(பின் குறிப்பு – முதன் முதலாய்க் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இக் கருத்தை வலியுறுத்தி அவ்வப்போது பதவியில் இருந்து வந்துள்ள குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோர்க்கு “ஸ்பீட் போஸ்ட்” எனப்படும் அதிவிரைவு அஞ்சல் மூலமும், பேரவைத் தலைவர்கள், துணைப் பேரவைத் தலைவர்கள், தமிழகத்து முக்கிய அரசியல் தலைவர்கள், பாராளு மன்றத்தில் பிரபலமாக உள்ள உறுப்பினர்கள், சில அமைச்சர்கள், நாளிதழ்களின் ஆசிரியர்கள், புலனாய்வு இதழ்களின் ஆசிரியர்கள் ஆகியோர்க்கு அக்கடித நகல்களை அஞ்சல் வாயிலாகவும் நான் இது நாள் வரையில் அனுப்பி வந்துள்ளேன். ஒவ்வொரு தேர்தலின் போதும் இதற்குச் சில நூறு ரூபாய்கள் செலவு ஆவதுதான் மிச்சம். சில பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமே எனக்குப் பதில் எழுதியுள்ளனர். பெருந் தலைவர்களிடமிருந்து எந்த எதிரொலியும் இல்லை.

இம்முறை நம் குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையத் தலைவர், எதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்க்குத் தந்தி யனுப்பியுள்ளேன்.

மற்ற எவரும் இதில் அக்கறை காட்டப் போவதில்லை என்பதால் இக்கட்டுரையின் நகலை நம் குடியரசுத் தலைவர்க்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்க்கும் சில பத்திரிகைகளுக்கும் மட்டுமே இம்முறை அதி விரைவு அஞ்சலில் அனுப்ப எண்ணம். எது எதற்காக வெல்லாமோ உடனடியாய்ப் பாராளு மன்றத்தைக் கூட்டுகிறவர்களுக்கு இது பற்றிய அறிவுரையை நம் குடியரசுத் தலைவர் வழங்க மாட்டாரா என்ன ? அனைத்து உலகத்தையும் கவர்ந்து வரும் நாம் தேர்தல் ஆணையமும் தான் இந்த யோசனையைப் பரிசீலிக்காதா!)

***

jothigirija@hotmail.com

jothigirija@vsnal.net

***

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா