இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

மஞ்சுளா நவநீதன்


மீண்டும் தஹல்கா

தஹல்கா பிரசினை தொடர்கதையாகிறது. காங்கிரஸ் செய்த சதி, ஐ எஸ் ஐ – சதி, வெளி நாட்டு சதி என்று புலம்பல்கள் ஆரம்பித்து விட்டன. ஐ எஸ் ஐ -சதிகள் செய்யாது என்பதல்ல. அந்தச் சதிகளை முறியடிக்க ஒரு திட்டமும் இல்லாமல் , கையாலாகாத அரசாக இந்த பா ஜ க அரசு இருந்து வருகிறது. இதற்கிடையில், தஹல்கா பற்றி இன்னொரு அவதூறு கிளப்பப் பட்டு விட்டது. அந்த தஹல்காவின் வலைத் தளத்தில் Erotica (இதற்கு தமிழ் மொழி பெயர்ப்பு என்னவென்று நண்பர்கள் சொல்லலாம் ) வெளியானது பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன தினகரன், பயனீர் போன்ற ஏடுகள். இதனால் இந்த வலைத் தளம் ஏதோ அசிங்கமான செயலில் ஈடு பட்டு வந்ததாய் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி இது. இலக்கியத்தில் Erotica-விற்கு ஒரு நிச்சயமான இடம் உண்டு.

இந்த முயற்சி எனக்கு வேறொரு செய்தியை நினைவு படுத்தியது. ரால்ஃப் நாடார் அமெரிக்காவில் அசுரர்களாய் வளர்ந்து விட்ட கார்க் கம்பெனிகளை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய போது அவர் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதை விட்டு விட்டு , அவர் எந்தப் பெண்ணுடன் சுற்றுகிறார் ஏதாவது அவருடைய வாழ்க்கையில் குளறுபடிகள் இருக்கிறதா என்று உளவு பார்க்கத் திட்டமிட்டன கார்க் கம்பெனிகள். அதில்லாமல் பெண்களை ஏவி அவரை வசப் படுத்தவும் முயற்சி நடந்தது. அவர் இதற்கெல்லாம் மசியாததால், இந்த விவரம் வெளியே தெரிய வந்து கார்க் கம்பெனிகள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.

தஹல்காவின் ஒளிப் பேழைகளில் உண்மை இருக்கிறதா என்று கண்டறிய முயற்சி செய்யாமல் அதனைப் பற்றிய அவதூறு பரப்புவது இது போன்ற ஒரு கேவலமான செயல்.

****

தஹல்காவின் பலி : ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்

ஜெயா ஜேத்லியும், பங்காரு லட்சுமணும் பதவி இறக்கப் பட்டது எனக்கு வருத்தமளிக்க வில்லை. ஆனால் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் பதவி இறக்கம் வருத்தம் தரும் விஷயம், கிருஷ்ண மேனனுக்குப் பிறகு இது போல் குற்றச் சாட்டால் பதவி இறக்கப் பட்ட ராணுவ அமைச்சர் இவர். இவர் மீது நேரடி குற்றச் சாட்டு எதுவுமில்லை. மம்தா இவரைச் சகியாமல், பா ஜ க மீது அழுத்தம் தந்து பதவி இறக்கச் செய்திருக்கிறார். இது தான் உண்மையான இழப்பு. போஃபர்ஸ் நாயகர்கள் கூட யாரும் பதவி இறங்க வில்லை என்பது இந்த நேரம் அவதானிக்கத் தக்கது.

****

ஒரு தமிழ்ப் படம் : நிலாக் காலம்.

தமிழில் நல்ல படங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் நிலாக் காலமும் சேர்கிறது. இரண்டு சிறுவர்களுக்கும், ஒரு சிறுமிக்கும் ஏற்படும் நட்பும் அதைப் புரிந்து கொள்ளாமல் சந்தர்ப்பவசத்தால் சிறுவர்கள் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுவதும் மிகச் சிறந்த முறையில் படமாக்கப் பட்டுள்ளது. மூன்று பேருமே அருமையாய் நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் சகல கலா வல்லமையோ, மரத்தைச் சுற்றிப் பாடும் டூயட்டுமோ எதுவும் இல்லாமல் படத்தின் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. சுஜாதாவின் கதை வசனம் பொருத்தமானது. நடிப்பும் குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பதை வலியுறுத்துவதாய் உள்ளது. ஏழ்மையே ஒரு குற்றமாய் மாறிப் போகும் நம் சூழல் தெளிவாய்க் காட்டப் பட்டுள்ளது. சட்டத்தின் பிளவுகளுக்குள் உதிர்ந்து நசுங்கிப் போகும் இளம் உயிர்களுக்கு இந்த இரண்டு சிறுவர்களும் உதாரணமாகி விடுகின்றனர். வணிகப் பத்திரிகைகளில் தரமான எழுத்தைக் கொண்டு வந்ததில் சுஜாதாவிற்கு பெரும் பங்கு உண்டு. அதே போல் தரமான படத்தையும் தமிழ்த் திரை உலகத்திற்கு அவர் தொடர்ந்து கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை இந்தப் படம் அளிக்கிறது.

******

சிதம்பரத்தின் கட்சி

சிதம்பரத்தின் கட்சி தி மு க கூட்டணியில் இணைந்து விட்டது. தி மு க கூட்டணியில் கு ப கிருஷ்ணன், கண்ணப்பன் போன்றோரின் ஊழல்-சாதிக் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரண்டு கூட்டணிகளுமே சாதிக் கட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை என்பது ஒரு வருத்தம் தரும் விஷயம்.. ஆனால் அதே சமயம், சாதிக் கட்சிகளும் கூடத் தனித்து இயங்க முடியாது என்பதை உணர்ந்துள்ளன. தேர்தல் முடிந்தபின்பு இந்தச் சம்ன்பாடுகள் எல்லாம் எப்படியெல்லாம் மாறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தஹல்கா -வின் பிரசினை நிச்சயம் தி மு க கூட்டணியைப் பாதிக்கும். சாதிக்கட்சிகளின் பின்னால் தான் மக்கள் போவார்கள் என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியாது. தேர்தல் கூத்து பல சுவாரஸ்யமான அதிர்ச்சிகளை அளிக்கும் என்று நினைக்கிறேன்.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

மஞ்சுளா நவநீதன்


பாரதிதாசன் பேரன் செய்த உருப்படியான காரியம்

முதலியார் சங்கம் பாரதிதாசனின் பெயரைப் பயன் படுத்தி, முதலியார் சங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ பாரதிதாசன் ஆசீர்வதித்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. உடனே பாரதிதாசனின் பேரன் இதனைக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகப் பாராட்ட வேண்டிய விஷயம். இது மாதிரி சாதிச் சங்கங்கள், சாதிக்கு அப்பாற்பட்ட முறையில் பணியாற்றியவர்களையும், தம் சாதியைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக , சொந்தம் கொண்டாடுவது மிக அசிங்கமான செயல். முதலியார் சங்கம் முன்பே திரு வி க என்ற அற்புதமான மனிதரைத் தனக்குச் சொந்தம் கொண்டாடியது மட்டுமல்லாமல் அவர் பெயரைச் சிதைத்து மணவழகனாராக அவரை ஆக்கிய கொடுமை பற்றியும் இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியம்.

அடுத்தது என்ன ? காமராஜ் , நாடார் சங்கத்தின் லெட்டர் பேடில் ஒளிப்படமாய் இடம் பெறப் போகிறாரா ? வ உ சி – கப்பலோட்டிய தமிழன் அல்ல , கப்பலை அல்ல எங்கள் சாதிக் கட்சியை ஓட்டப் போகிறார் என்று பிள்ளைமார்கள் சங்கம் அறிவிக்கப் போகிறதா ? நல்ல வேளை நாயக்கர் சங்கம் ஒன்று தொடங்கி ஈ வெ ரா-வை அதன் வழிகாட்டி என்று அறிவிக்கவில்லை – இந்த நிமிடம் வரையில் . ஆனால் தமிழர் பண்பாட்டில் எனக்கு அசாத்திய நம்பிக்கை. ஒரு மாதத்திற்குள் இதுவும் நடந்தாலும் வியப்பதற்கில்லை.

***

எம் ஐ டி உதவியுடன் ஆய்வு நிலையம்

மாசசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற அமைப்புடன் இணைந்து ஓர் ஆய்வு மையம், இந்தியாவில் தொடங்கப் படவிருக்கிறது. பத்து ஆண்டுகளில் 200 மிலியன் டாலர்கள் – கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய் – இந்திய அரசாங்கமும் இதில் முதலீடு செய்யும். இந்த ஆய்வு மையம் மோடோரோலா, லெகோ , இண்டெல் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடும் பெறும். அது எந்த நகரத்தில் நிறுவப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. சீனா போன்ற நாடுகள் இந்த ஆய்வு நிறுவனம் தம் நாட்டில் இயங்க வேண்டும் என்று முனைந்து செயல் பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியா முந்திக் கொண்டு தன் ஆதரவையும் பொருளாதாரப் பங்களிப்பையும் தெரிவித்ததால் இந்தியாவில் இது நிறுவப்படவிருக்கிறது.

இதன் முனைப்பு எந்த திசையில் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், தொழில் நுட்பம் சார்ந்த எந்த ஆய்வுமே வரவேற்கத்தக்கது. இந்தியா பற்றிய ஒரு நல்ல பிம்பத்தினை உலகெங்கும் உருவாக்க இது பயன் படும். இந்தியாவின் தேவைகளை ஒட்டிய ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடும் என்றால் இன்னமும் அது விசேஷம்.

***

வறுமை இருக்கும் போது எதற்கு தொழில் நுட்பம் ?

ஆனால் வழக்கம் போல இது பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. அரசாங்கம் இவ்வளவு பணத்தை இதில் போட வேண்டுமா ? அரசாங்கம் வறுமையைப் போக்க வேண்டாமா ? தொழில் நுட்பம் இந்தியாவிற்குப் பயன் படுமா ? அடிப்படைக் கல்வியே அனைவரையும் சென்றடையாத நிலையில் தொழில் நுட்ப ஆராய்ச்சி எதற்கு ? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதில் இரண்டு விதப் பார்வைகள் வெளிப்படுகின்றன. இடதுசாரிகளின் கோட்பாடை ஒட்டிய, பலதேசக் கம்பெனிகளைப் பற்றி நியாயமாகவே சந்தேகப் படுகின்ற சில பார்வைகள். (இதன் பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், ரஷ்யா வானவெளியில் துணைக் கோள்களைப் பறக்க விட்டபோது, இவர்கள் தொழிலாளிகளின் பிரசினைகளைத் தீர்க்காமல் , விண்வெளிப் பயணம் என்ன உனக்குக் கேடு என்று குரல் கொடுத்தவர்கள் அல்ல. சோஷலிசத்தின் பெரும் வெற்றி என்று அதனைப் பாராட்டியவர்கள்.)

சில பார்வைகள் வேறு மாதிரியானவை. இவர்கள் டைம் , கார்டியன் போன்ற பத்திரிகைகளில் இந்தியா பற்றி எழுதுகிற கனவான்கள், அல்லது குணவதிகள். இந்தியாவைப் பற்றி எழுதும்போது ஏழ்மையையும், மதக்கலவரங்களையும் தவறாமல் குறிப்பிடுகிறவர்கள். வெளிநாட்டினர் இந்தியர்கள் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணத்திற்கு – தவறான எண்ணம் என்று சொல்ல முடியாது ஆனால், நிச்சயம் ஒற்றைப்பரிமாணப் பார்வைக்கு — அனுசரணையாய் இவர்கள் எழுதித் தள்ளும் இந்தியா பற்றிய கட்டுரைகள் இவை.

அமெரிக்கா பற்றிக் குறிப்பிடும்போது இவர்களில் எவரும் 35 வருடம் முன்பு வரை கறுப்பர்களைத் தீண்டத்தகாதவர்களாய் வைத்திருந்த நாடு இது என்று எழுதுவதில்லை. ஜெர்மனியைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் , இவர்கள் ஹிட்லரின் ஆட்சியில் 60 லட்சம் யூதர்களைக் கொன்ற நாடு என்று குறிப்பிடுவதில்லை. இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் போது 300 ஆண்டு கால காலனியாதிக்க ஆட்சியில் இருந்த நாடு என்று குறிப்பிடுவது இன்னமும் பொருத்தமாய் இருக்கும். ஆனால் இவர்கள் இதைக் குறிப்பிடுவதே இல்லை.

வறுமை போக்கப் பட வேண்டியதும், அடிப்படைக் கல்வி மக்களுக்குக் கிடைப்பதும் மிக அத்தியாவசியமான ஒன்று தான். காங்கிரஸ் அரசும் சரி மற்ற அரசுகளும் சரி கவனம் செலுத்தாத இந்தப் புறக்கணிப்பு இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் – சோகம். ஆனால், அது இல்லாவிட்டால் இது என்ற நிலையில் அரசாங்கங்கள் இயங்கமுடியாது. தொழில் நுட்ப வளர்ச்சிக்குச் செலவிடும் தொகை ஒரு விதத்தில் வறுமைக் குறைப்புக்கான பாதை தான் — இதன் பலன் உடனடியாய் இல்லாவிட்டாலும் கூட. தொழில் நுட்ப ஆய்வில் பணம் போடாவிட்டால் அந்தப் பணம் உடனடியாய் மக்களுக்கு உணவளிக்கவும், கல்வியளிக்கவும் பயன் படும் என்பதும் தப்புக் கணக்கு. எதிர்காலம் அறிவின் யுகம் . அதன் பாதையில் போகாவிட்டால், நம் நாடு நிரந்தரமாய் அறியாமையிலும், வறுமையிலும் இருக்க வேண்டி வரும்.

***

ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் (United States of Africa)

சென்ற வெள்ளியன்று ஒரு நல்ல செய்தி படித்தேன். எத்தனை பேர் இந்த செய்தியை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்திய செய்திப் பத்திரிக்கைகளும் இந்த நல்லச் செய்தியை கவனிக்காமல் பால்கோ, தாலிபான், ஜெயலலிதா என்று மூழ்கி விட்டிருந்தன.

லிபியாவின் தலைநகரமான திரிபோலி நகரத்தில் 53 ஆப்பிரிக்க தேச ராஜாக்களும், பிரதமர்களும், ஜனாதிபதிகளும் கூடி ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் என்ற ஒன்றுபட்ட தேசமாக ஆப்பிரிக்காவை ஆக்க கையொப்பம் இட்டிருக்கிறார்கள். மனதார வாழ்த்துகிறேன்.

தெற்கே தென்னாப்பிரிக்காவிலிருந்து வடக்கே லிபியாவரை கிழக்கே ஜாம்பியாவிலிருந்து மேற்கே ஜைர் வரை இந்த தேசங்கள் ஒன்று பட்டு இந்த மாநாட்டில் பங்கு வகித்திருக்கின்றன. ஒரே பணம், ஒரே ராணுவம், ஒரே பொருளாதாரம் என்ற நோக்கில் இந்த கையொப்பம் இடப்பட்டிருக்கிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பது சிறுவர்களின் பள்ளிப்பாடமாக இருக்கலாம். ஆனால் அது பின்பற்றப்படாவிட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உள்நாட்டுக் கலவரங்களிலும், ஐரோப்பியர்கள் பண்ணிய கலாட்டாக்களிலும், அடிமைத்தனத்திலும், வைரத்துக்காக நடந்த போர்களிலும், வீணான இனக்கலவரங்களிலும் ஐரோப்பியர்களுக்கு ஆப்பிரிக்க செல்வம் தாரை வார்க்கப்படுவதை பட்டு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

புரிந்தாலும், இந்தியாவில் காந்தி போல, நேரு போல ஒரு தலைமை ஆப்பிரிக்காவில் உருவாவது கனவாக இருந்த சூழ்நிலை, நெல்சன் மாண்டெலா வந்ததும் மாறி இருக்கிறது. நெல்சன் மாண்டெலா ஒரு தார்மீக தலைமையை ஆப்பிரிக்காவுக்கு கொடுத்திருக்கிறார். கடாபி போன்ற எதேச்சதிகாரிகளையும் அணைத்து அவர்களை நல்ல நீண்ட வளமையான எதிர்காலத்துக்காக அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆப்பிரிக்காவில் எதேச்சதிகாரிகளுக்கும், ஐரோப்பிய காலடி வருடும் ராணுவத் தளபதிகளுக்கும் பஞ்சமில்லை. இருந்தும் இவ்வாறு அனைத்து ஆப்பிரிக்க தேசங்களுக்கும், ஒரு குறிக்கோளையும், வளமையான வாழ்வுக்காக ஒற்றுமையையும் ஆப்பிரிக்க தேசங்களுக்கு கொடுக்கும் மாண்டெலாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியா துண்டுதுண்டாக உடைய வேண்டும் என்று பாகிஸ்தானியர்களும், ஒரு வகை இடதுசாரிகளும், தமிழ் நாகாலாந்து அஸ்ஸாம் காஷ்மீர தீவிரவாதிகளும் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு ஒரு பக்கம் வரலாற்றாசிரியர்கள் ‘இந்தியா ஒரே தேசமாக எக்காலத்திலும் இருந்ததில்லை ‘ என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறார்கள். ஜிந்தாபாத்-வுக்கு முந்தைய கவிஞர் அமெரிக்கா வந்திருந்தபோது இந்தியா உடைய வேண்டும் எல்லா மாநிலங்களும் தனித்தனி தேசங்களாக உடைய வேண்டும் என்றும் பேசினார். இது போல இன்னும் பலர் இருக்கிறார்கள். இதில் யாருக்கு சந்தோஷம் என்பது வெள்ளிடை மலை. ஐரோப்பா ஒரு தேசமாக நெருங்கி வருகிறது. ஆப்பிரிக்கா ஒரு தேசமாக நெருங்கி வருகிறது. இந்தியா உடைவது மட்டும் இந்த அறிவுஜீவிகளுக்கு வேண்டும். இது அறிவுஜீவிகள் மத்தியில் மட்டும் இருந்தால் பரவாயில்லை, இவர்கள் ஊர் ஊராகச் சென்று நாடு நாடாகச் சென்று தங்கள் உளறலையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். பைத்தியக்காரனுக்கும் பத்துபேர் கூட்டம் என்பதுபோல இவர்களுக்கும் கொஞ்சம் கூட்டம் சேரும். அந்தக்கூட்டம் வீரப்பனின் பின்னால் அலையும். அதுதான் அவலம். மெத்தப்படித்த மூஞ்சூரு கழனிப்பானைக்குள் விழுந்ததாம் என்பதுதான் நம் ஊர் அறிவுஜீவிகளின் பெரும்பாலான வழியாக இருக்கிறது. (உதாரணத்துக்கு காஞ்சா ஐலய்யா, எஸ்.வி ராஜதுரை போன்றவர்கள்)

சொல்ல மறந்துவிட்டேன். வழக்கம் போல இந்திய ஏழ்மையை எழுதாமல் எந்த நல்ல செய்தியும் இந்தியாவைப்பற்றி வராதது போல, இந்த ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் பற்றிய செய்தியை எழுதும் ஆப்பிரிக்க பங்கஜ் மிஸ்ராக்கள் ‘இதுவெல்லாம் நடக்காத கதை, ஆப்பிரிக்காவில் வறுமை தாண்டவமாடும்போது இதெல்லாம் தேவைதானா ? கடாபியின் இன்னொரு கனவு, ‘ என்றே ‘செய்திகள் ‘ கொடுத்திருக்கிறார்கள். வேறு எதில் ? ராய்ட்டர்ஸ், ஏ பி போன்ற ‘செய்தி ‘ நிறுவனங்களில்தான்.

***

சிதம்பரம் மூப்பனார் சந்திப்பு

எந்தக் கட்சியிலாவது அதே கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் சந்தித்தால் இது போல தலைப்புச் செய்தி வருமா என்று தெரியவில்லை!

அதே போல வேறு எந்தக் கட்சியிலாவது, இன்னொரு கட்சியின் தலைவரை (சோனியா) தன் கட்சித் தலைவராக இன்னொரு கட்சித்தலைவர் சொல்வாரா என்றும் தெரியவில்லை!

***

திண்ணை ஆசிரியர் என்னை தாலிபானின் புத்தச்சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார். நான் எழுதவில்லை. திரு. சின்னக்கருப்பன் எழுதுவதாகவும் பின்னர் என்னிடம் ஆசிரியர் தெரிவித்ததால், நான் அவரது எழுத்தைப் படித்துவிட்டு எழுதுவதாக இருக்கிறேன்.

**

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 11 in the series 20010122_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜார்ஜ் புஷ் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்

நம் ஊரில் இந்த நாளுக்குள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அமெரிக்காவில் உண்டு போலும்.

நீதிபதிகள் ஓட்டு போதும் என்று மக்கள் போட்ட ஓட்டுக்களை எண்ணாமல் நிறுத்தி புஷ் ஜனாதிபதி ஆகிறார். (எதிர்வாதம் செய்ய ஒரு பெருங்கூட்டமே தயார்)

பதவிஏற்பு நாளன்று அழுகியகாய்கறிகளும் முட்டைகளும் ஜனாதிபதி காரின் மீது அள்ளி தெளிக்கப்பட்டன எதிர்ப்பாளர்களால். அவரது கார் கொஞ்சம் வேகமாக ஓட்டப்பட்டது.

எதிர்ப்பார்ப்புக்கு என்ன குறைச்சல் ? அவர் நல்லபடியாக ஆட்சி செலுத்துவார் என்றும் அவரது கட்சிக்குள் இருக்கும் மதத்தீவிரவாதிகளை கொஞ்சம் கட்டுக்குள் அடக்கி வைப்பார் என்றும் விரும்புவோம்.

**

இந்தியாவில் சீனப்பிரதமர் வருகை

எந்த அளவுக்கு நம் நண்பர்களை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவுக்காவது நம் எதிர்களாகக் கூடியவர்களை குறைத்துக் கொள்கிறோம்.

ஆனால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குள் நேபாள், மணிப்பூர் வழியாக கொட்டப்படும் சரக்குகள் இந்திய தொழிற்சாலைகளை வியாபாரத்திலிருந்து விரட்டுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த கொட்டலையும் தாண்டியேதான் இந்தியப் பொருள்கள் விலை மலிவாக தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும்.

விலை மலிவாக இல்லையென்றாலும் தரமிருந்தால் வாங்கத் தயாராக ஒரு மத்தியதர வர்க்கம் இந்தியாவில் உருவாகியிருக்கிறது. எனவே இந்தியத்தரம் உலகத்தரத்துக்கு மேல் இருக்க வேண்டிய கட்டாயம் உலக சந்தையில் நாம் சேர்வதால் வருகிறது.

**

மீண்டும் சாட்டிசிங்புரா

நியூயார்க் டைம்ஸ் இதழில் சாட்டிசிங்புரா குற்றவாளி ஒப்புதல்

ஒரு ஞாயிறு இதழில் ஜாவேத் என்னும் ஓரு காஷ்மீரப்போராளி தானும் இன்னும் சில நபர்களும் சேர்ந்து ஐஎஸ்ஐ சொன்னதால் சாட்டிஸிங்புரா கிராமத்தில் சீக்கியர்களை கொன்றதாக கூறியிருக்கிறார்.

வழக்கம்போல பாகிஸ்தானியர்களும், காஷ்மீரப் போராளிகளும், ஒரு சில இந்திய இடதுசாரி எழுத்தாளர்களும் இதை படித்ததாகவோ, தன் கருத்துக்களை மறுபரிசீலனை செய்வதாகவோ தெரியவில்லை. பங்கஜ் மிச்ராவிடமிருந்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு மறுப்புக் கடிதம் வந்ததா என்றும் தெரியவில்லை.

**

ஜெயலலிதா தானே முதலமைச்சர் என்று சொன்னதால் மூப்பனார் கோபம் என்று செய்தி படித்தேன்

நான் நம்பத் தயாராக இல்லை.

**

விளக்கு அமைப்பின் பரிசு நகுலனுக்கு

விளக்கு வருடா வருடம் அளிக்கும் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு 1999-வருடத்திற்கானது, எழுத்தாளர் நகுலனுக்கு வழங்கப் படுகிறது. நகுலன் க நா சு, சு ரா , மெளனி போன்றோரின் சமகாலத்தவர். எனினும் இன்றைய இளம் எழுத்தாளர்களையும் வெகுவாகப் பாதித்தவர். திருவனந்த புரத்தில் இருந்த பல எழுத்தாளர்களின் முகிழ்விற்குக் காரணமானவர். நவீன எழுத்தென, பல சோதனை முயற்சிகள் அவர் படைப்புகளில் உண்டு. தமிழின் பல சிறந்த சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்கும் ஆசிரியர். விளக்கு அமைப்பையும், நகுலனையும் பாராட்டுகிறோம்.

******

மீண்டும் சமுத்திரம்

இலக்கிய விஷயம் என்று வரும் போது சமீபத்தில் படித்த ஒரு மகா மேதாவி சமுத்திரத்தின் போக்கை விமரிசிக்காமல் இருக்க முடியவில்லை. கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் வழக்கம் போல சாகித்ய அகதமியின் போக்கை – சா கந்தசாமியின் தொகுப்பில் இவர் கதை இடம் பெற வில்லை என்கிற ஆதங்கம் இவருக்கு — விமர்சிப்பது மட்டுமல்லாமல், ஜெயகாந்தனையும் விமர்சித்திருக்கிறார். வெறுமே விமர்சனம் என்றால் அது அவர் கருத்து என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அவர் கருத்துகள் ஜெயகாந்தனின் மீது காழ்ப்பை வெளிப்படுத்துவதுடன் , வழக்கமான பிராமணியச் சதி என்று ஜெயகாந்தன் பற்றிய பார்வைகளைச் சொல்கிறது.

அக்கினிப் பிரவேசத்தால் பிராமணர்களால் பாராட்டப் பட்டதால், ஜெயகாந்தன் பெரும் கவனிப்பைப் பெற்று விட்டார் என்பது அவர் குற்றச் சாட்டு. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை எழுதியது நினைவிற்கு வருகிறது.

ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் பரிசு பெற்றது. இது அகில இந்திய அளவில் மூன்றாவது பரிசு பெற்றது. அந்தப் படத்துடன் பரிசுக்கு வந்த படங்களில் ஒன்று சத்யஜித் ரேயின் ‘சாருலதா ‘ . ஜெயகாந்தன் எழுதுகிறார் : ‘ முதல் பரிசுக்கும், மூன்றாம் பரிசுக்கும் சத்யஜித் ரேயின் ‘சாருலதா ‘ வும் ‘உன்னைப் போல் ஒருவன் ‘ படமும் போட்டியிட்டன. அந்தத் தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டு அளிக்கும் உரிமை தரப் பட்டிருந்தால் நானும் கூடச் சாருலதா படத்திற்குத் தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன். உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அல்ல ‘

இந்த வாசகங்களில் உள்ள உண்மையான கலையுள்ளத்தை உணர முடியும்போது தான் எப்படி, சக கலைஞனை , அவனுடைய சிறப்புகளை அங்கீகரிப்பதன் மூலம் , ஜெயகாந்தன் எவ்வளவு உயரத்தில் நிற்கிறார் என்பது புரியும். தமிழ் சினிமாவின் வேறு வியாபாரிகள் என்றால் ‘வட இந்தியரின் சதி. தமிழருக்கு எதிரான பிராமணீயச் சதி ‘ என்று புலம்பித் தள்ளியிருப்பார்கள். ஒரு கலைஞனால் தான் பிற கலைஞனின் சிறப்பை அறிய முடியும். எனில் சு சமுத்திரத்தின் அடையாளத்தைப் பிற கலைஞர்கள் பற்றிய அவர் பார்வையிலிருந்தே உணர முடியும்.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue



டிசம்பர் 3 2000

சின்னக் கருப்பன்

ராமதாஸ் குற்றச் சாட்டு

ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில்லாமல் தி மு க இது பற்றி மெளனமாய் இருப்பதால் அதுவும் கூடக் குற்றவாளியே என்றும், தன் கட்சியை அழிக்க திமுக முயல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டுவதும் கூட ஒரு குற்றம் தான். மற்றக் கட்சிகளை வாழ வைக்க வேண்டும் என்று எந்தக் கட்சிக்கும் அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியுமா என்ன ?

ஆனால் தலித் இயக்கத்தினைக் குற்றம் சாட்டுகிற போக்கிலேயே இவர் பேசி வருவது எனக்கு வேறொன்றை நினைவூட்டுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் ஒரு சாதியினரைக் குற்றப் பரம்பரை என்று அபாண்டமாய்க் குற்றம் சாட்டிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஏதும் குற்றம் நடந்தால் முதலில் அந்த இனத்தினரின் வீட்டைச் சோதனை செய்வது போன்றல்லாம் அக்கிரமங்கள் செய்தார்கள். அந்தச் சாதியினரின் பிரதி நிதிகள் அதனை எதிர்த்துப் போராடி இப்படிப் பட்ட கறுப்புச் சட்டங்களை எதிர்த்து இயக்கங்கள் நடத்தினர். வெற்றியும் பெற்றனர். ஜாதி சார்ந்த கட்சிகள் நடத்துவதில் உள்ள அபாயம் , ஒரு கட்சியைக் குற்றம் சாட்டுவது அந்தக் குறிப்பிட்ட சாதியினரைக் குற்றம் சாட்டுவதாய்ப் போய் முடியும். இது நல்லதல்ல.

***********

இந்தியாவில் இப்படி ஒன்று

சில சமயங்கள் இந்தியாவில் பிறக்க நேர்ந்ததற்காக வெட்கப் பட வேண்டியுள்ளது. சில சமயம் பெருமைப் பட வேண்டியும் உள்ளது. ஆனால் இந்த வாரம் என் பெருமை, தத்துவம் பற்றியதோ , புராணங்கள் பற்றியதோ அல்ல. ஆஷா தேவி என்கிற அமர்நாத் யாதவ் பற்றியது. இவர் ஒரு அலி. இவர் கோரக்பூர் நகரின் மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது ஒரு மிக முக்கிய நிகழ்வு என்று சொல்ல வேண்டும். ஒரு நாட்டின் கலாசாரம் மேன்மையானதா என்பதை, அந்தக் கலாசாரத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிற மக்களை அது எப்படி எதிர் கொள்கிறது என்பதை வைத்துத் தான் கூற முடியும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கப் போனால் நம் இந்தியக் கலாசாரம் பல விதங்களில் உயர்ந்தது என்று சொல்லலாம்.

இப்படி விஷப் பார்வையற்ற நிலையில் அலிகளை நோக்க நம் புராணங்களும் ஒரு வகையில் உதவியுள்ளன என்று சொல்ல வேண்டும் ராமாயணம், மகா பாரதம் போன்ற வற்றில் அலிகளின் இருப்பு அங்கீகரிக்கப் படுகிறது.

மக்களிடையே அலிகளைச் சற்றுத் தாழ்வாக நோக்கும் போக்கு இருந்தாலும், அவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் மிக மிகக் குறைவு., ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்விற்கு வழி செய்யும் வகையில் சில தொழில்களும் உள்ளன. அவர்களை மற்ற தொழில்களை நோக்கியும் நகர்த்துவதற்கு இது மாதிரி தேர்தல்கள் உதவக்கூடும்.

ஷப்னம் மெளஸி என்ற அலி ஒருவர் முன்னமே மத்தியப் பிரதேசத்தில் எம் எல் ஏ வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

********

காங்கிரஸில் ஜன நாயகம்

சூடான ஐஸ்கிரீம் மாதிரி இது. தேர்தல் கமிஷன் உத்தரவினால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸிற்கு. வழக்கமான அடிதடி, குத்து வெட்டு எல்லாம் நடந்த பின்பு என்ன செய்தார்கள் தமிழ் நாட்டின் காங்கிரஸ் காரர்கள் ? அம்மா தாயே சோனியா நீயே பார்த்து யாருக்காவது பதவிப் பிச்சை போட்டு விடு என்று சொல்லிவிட்டார்கள். ஆகா ஜன நாயகம்!

********

வீரப்பனைப் பிடிக்க (எதுவாய் முடியும் ?)

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை காட்டுக் குள்ளே போகிறது , இதோ சத்திய மங்கலத்தில் முகாம். இதோ இவர் தான் தலைவர். இதோ இங்கே தான் பயிற்சி எடுக்கிறார்கள் என்று தினமும் செய்தி வந்தவண்ணமாய் இருக்கிறது.

எனக்கு என்ன கேள்வி என்றால், தம்முடைய திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் பகிரங்கப் படுத்திவிட்டுத் தான் இவர்கள் வீரப்பனைப் பிடிக்கப் போகிறார்களா ? இல்லை பூச்சாண்டி காட்டி விட்டு, அடுத்த சூடான செய்தி வந்தவுடன் மறந்து விடுவார்களா ? இதற்கிடையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீரப்பனைப் பிடிக்கவெல்லாம் ராணுவத்தினை அனுப்ப முடியாது என்கிறார். என்ன தான் நடக்கிறது இங்கே ?

**********

உடையாதது : ஒரு படம்

சியாமளன் டைரக்ட் செய்த ‘Unbreakbale ‘ படம் யாரும் பார்த்தீர்களா ? சில விமர்சகர்களுக்குப் படம் பிடிக்க வில்லை. சிலர் ‘ஆறாவது புலன் ‘-ஐ விட இது சிறந்த படம் என்கிறார்கள். பார்த்தவர்கள் எழுதலாம்.

Series Navigation

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue



டிசம்பர் 3 2000

சின்னக் கருப்பன்

ராமதாஸ் குற்றச் சாட்டு

ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில்லாமல் தி மு க இது பற்றி மெளனமாய் இருப்பதால் அதுவும் கூடக் குற்றவாளியே என்றும், தன் கட்சியை அழிக்க திமுக முயல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டுவதும் கூட ஒரு குற்றம் தான். மற்றக் கட்சிகளை வாழ வைக்க வேண்டும் என்று எந்தக் கட்சிக்கும் அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியுமா என்ன ?

ஆனால் தலித் இயக்கத்தினைக் குற்றம் சாட்டுகிற போக்கிலேயே இவர் பேசி வருவது எனக்கு வேறொன்றை நினைவூட்டுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் ஒரு சாதியினரைக் குற்றப் பரம்பரை என்று அபாண்டமாய்க் குற்றம் சாட்டிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஏதும் குற்றம் நடந்தால் முதலில் அந்த இனத்தினரின் வீட்டைச் சோதனை செய்வது போன்றல்லாம் அக்கிரமங்கள் செய்தார்கள். அந்தச் சாதியினரின் பிரதி நிதிகள் அதனை எதிர்த்துப் போராடி இப்படிப் பட்ட கறுப்புச் சட்டங்களை எதிர்த்து இயக்கங்கள் நடத்தினர். வெற்றியும் பெற்றனர். ஜாதி சார்ந்த கட்சிகள் நடத்துவதில் உள்ள அபாயம் , ஒரு கட்சியைக் குற்றம் சாட்டுவது அந்தக் குறிப்பிட்ட சாதியினரைக் குற்றம் சாட்டுவதாய்ப் போய் முடியும். இது நல்லதல்ல.

***********

இந்தியாவில் இப்படி ஒன்று

சில சமயங்கள் இந்தியாவில் பிறக்க நேர்ந்ததற்காக வெட்கப் பட வேண்டியுள்ளது. சில சமயம் பெருமைப் பட வேண்டியும் உள்ளது. ஆனால் இந்த வாரம் என் பெருமை, தத்துவம் பற்றியதோ , புராணங்கள் பற்றியதோ அல்ல. ஆஷா தேவி என்கிற அமர்நாத் யாதவ் பற்றியது. இவர் ஒரு அலி. இவர் கோரக்பூர் நகரின் மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது ஒரு மிக முக்கிய நிகழ்வு என்று சொல்ல வேண்டும். ஒரு நாட்டின் கலாசாரம் மேன்மையானதா என்பதை, அந்தக் கலாசாரத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிற மக்களை அது எப்படி எதிர் கொள்கிறது என்பதை வைத்துத் தான் கூற முடியும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கப் போனால் நம் இந்தியக் கலாசாரம் பல விதங்களில் உயர்ந்தது என்று சொல்லலாம்.

இப்படி விஷப் பார்வையற்ற நிலையில் அலிகளை நோக்க நம் புராணங்களும் ஒரு வகையில் உதவியுள்ளன என்று சொல்ல வேண்டும் ராமாயணம், மகா பாரதம் போன்ற வற்றில் அலிகளின் இருப்பு அங்கீகரிக்கப் படுகிறது.

மக்களிடையே அலிகளைச் சற்றுத் தாழ்வாக நோக்கும் போக்கு இருந்தாலும், அவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் மிக மிகக் குறைவு., ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்விற்கு வழி செய்யும் வகையில் சில தொழில்களும் உள்ளன. அவர்களை மற்ற தொழில்களை நோக்கியும் நகர்த்துவதற்கு இது மாதிரி தேர்தல்கள் உதவக்கூடும்.

ஷப்னம் மெளஸி என்ற அலி ஒருவர் முன்னமே மத்தியப் பிரதேசத்தில் எம் எல் ஏ வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

********

காங்கிரஸில் ஜன நாயகம்

சூடான ஐஸ்கிரீம் மாதிரி இது. தேர்தல் கமிஷன் உத்தரவினால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸிற்கு. வழக்கமான அடிதடி, குத்து வெட்டு எல்லாம் நடந்த பின்பு என்ன செய்தார்கள் தமிழ் நாட்டின் காங்கிரஸ் காரர்கள் ? அம்மா தாயே சோனியா நீயே பார்த்து யாருக்காவது பதவிப் பிச்சை போட்டு விடு என்று சொல்லிவிட்டார்கள். ஆகா ஜன நாயகம்!

********

வீரப்பனைப் பிடிக்க (எதுவாய் முடியும் ?)

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை காட்டுக் குள்ளே போகிறது , இதோ சத்திய மங்கலத்தில் முகாம். இதோ இவர் தான் தலைவர். இதோ இங்கே தான் பயிற்சி எடுக்கிறார்கள் என்று தினமும் செய்தி வந்தவண்ணமாய் இருக்கிறது.

எனக்கு என்ன கேள்வி என்றால், தம்முடைய திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் பகிரங்கப் படுத்திவிட்டுத் தான் இவர்கள் வீரப்பனைப் பிடிக்கப் போகிறார்களா ? இல்லை பூச்சாண்டி காட்டி விட்டு, அடுத்த சூடான செய்தி வந்தவுடன் மறந்து விடுவார்களா ? இதற்கிடையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீரப்பனைப் பிடிக்கவெல்லாம் ராணுவத்தினை அனுப்ப முடியாது என்கிறார். என்ன தான் நடக்கிறது இங்கே ?

**********

உடையாதது : ஒரு படம்

சியாமளன் டைரக்ட் செய்த ‘Unbreakbale ‘ படம் யாரும் பார்த்தீர்களா ? சில விமர்சகர்களுக்குப் படம் பிடிக்க வில்லை. சிலர் ‘ஆறாவது புலன் ‘-ஐ விட இது சிறந்த படம் என்கிறார்கள். பார்த்தவர்கள் எழுதலாம்.

Series Navigation

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 7 in the series 20001126_Issue

மஞ்சுளா நவநீதன்


கிரிக்கெட் கலாட்டா

ஒரு வழியாக கிரிக்கெட் கலாட்டா ஒரு கட்டத்தைத் தாண்டி, யார் யார் லஞ்சம் வாங்கிக் கொண்டு பந்தயங்களைக் கவிழ்த்தார்கள் என்று செய்திகள் வந்திருக்கின்றன. கபில் தேவ் பெயர் பந்தயங்களைக் கவிழ்த்தவர்களின் பட்டியலில் இல்லை என்று பெருமூச்சு விட்ட ரசிகர்கள் பலர். ஆனால், இது இத்துடன் நிற்க வேண்டிய விஷயம் அல்ல. இதையும் தாண்டி உண்மைகள் வெளிப் பட வேண்டும் இந்த அலை ஓரளவு தெளிவு பெறும் வரையில், கிரிக்கெட் பந்தயங்கள் ஓரங்கடி வைக்கப் பட்டால் கூட நல்லது தான்.

முழுமையான அறிக்கை இன்னமும் முழு அளவில் வெளிப்படவில்லை. இதன் பொறுப்பாளர் மாதவன் அறிக்கையைச் சமர்த்தித்து இருக்கிறார். அதன் முழு விவரங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், அதன் குற்றவாளிகளைத் தண்டனைக்கும் உட்படுத்த வேண்டும். வெறும் விளையாட்டு விவகாரமல்ல இது.

*******

காஷ்மீரில் போர் நிறுத்தம்

வாஜ்பாய் தானாக முன் வந்து காஷ்மீரில் போர் நிறுத்தம் ரம்ஜானின் பொழுது அமல் படுத்தப் படும் என்று அறிவித்திருக்கிறார். உடனே அதை எதிர்த்து சிவ சேனா வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல், தேசீய ஜனநாயக முன்னணியிலிருந்தும் வெளியேறுவோம் என்று அமளி கிளப்பியுள்ளது. முதலில் இந்த அறிவிப்பை வரவேற்ற ஹரியத் அமைப்பு — பாகிஸ்தானின் உத்தரவின் பேரிலோ என்னவோ — ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளி வேஷமென்று கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்திய அரசின் போர் நிறுத்த அறிக்கை ஒரு விதத்தில் இந்திய அரசின் அக்கறையை விளம்பரம் செய்வதற்காகப் பண்ணிய ஒரு தந்திரோபாயம் என்று தான் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் இந்த நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளாது என்பது அரசிற்குத் தெரியாததல்ல.

இந்த அறிக்கையின் மூலம் ஒரு விதமாய் காஷ்மீரில் நடப்பது போர் தான் என்று இந்திய அரசு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் இதற்குள்ளாக இந்து சீக்கிய டிரக் டிரைவர்கள் 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்து இந்துப் பயணிகள் கடத்திச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டிருக்கிறார்கள் (உண்மையிலேயே). இது பாகிஸ்தானிய லாஷ்கர் இ தோய்பா என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் கொஞ்சநாள் கழித்து இந்து சீக்கியர்களை கொலை செய்தது இந்திய அரசாங்கமே என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் பங்கஜ் குப்தா எழுத அதற்கு மறுப்பு இந்திய பத்திரிக்கைகளில் சிலர் எழுத ஆரம்பிப்பார்கள்.

*****

புஷ்ஷா கோரா ?

ஃப்ளோரிடாவில் நடக்கும் இழுபறி முடிந்த பாடில்லை. நம் இந்திய ஜன நாயக முறைக்குப் பழக்கப் பட்டவர்களுக்கு இந்தத் தேர்தல் வினோதமாய்த் தெரியும். Electoral college என்ற ஒரு அமைப்பு ஃப்ளோரிடாவின் வெற்றி பெற்ற கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப் படும் இந்த college-உறுப்பினர்கள் தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புஷ் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஒரு வினோதமான் செயலாய் அது இருக்கும். கோர் புஷ்ஷை விட அதிக வாக்குகள் பெற்று விட்ட போதிலும், இந்த Electoral College தரும் வசதியால் புஷ் ஜனாதிபதியாகி விடுவார்.

இந்தத் தேர்வு முறை கொண்டு வந்த போது சிறிய மானிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொண்டு வருவதற்கு இதுவே வழி என்று இந்த வழிமுறை சட்டமாக்கப் பட்டது. இப்போது இதன் பிரசினைகள் பெரிதாய் இருப்பதால், பெரும் வாக்குகள் பெற்றவர்களை ஜனாதிபதியாக்கச் சட்டம் இயற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

******

வியத் நாமில் கிளிண்டன்

வியத் நாம் போர் நின்று 25 வருடங்கள் ஆகின்றன. முதல் முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வியத் நாமில் அமெரிக்கா செய்த கொடுமைகளூக்கு மன்னிப்புக் கேட்க வில்லை. இதன் காரணம் அமெரிக்காவின் உள்ளூர் அரசியல். இப்படிச் செய்வது அமெரிக்காவில் உயிரிழந்த அமெரிக்கர்கள் நினைவை அவமதிப்பதாகும் என்று குடியரசுக் கட்சி – கிளிண்டனின் எதிர்க் கட்சி – பிரசாரம் செய்யக் கூடும் என்று பயந்து மன்னிப்புக் கேட்கவில்லை என்று சொல்கிறார்கள்.

வியத் நாமியர்கள் அமெரிக்கா மீது பெருங் கோபம் கொள்ளக் காரணம் இருக்கிறது. போர் வியத் நாம் மண்ணில் நடந்தது. போர் இன்னமும் முடியவில்லை.எட்டு லட்சம் டன்கள் வெடி மருந்தும் , 35 லட்சம் கண்ணி வெடிகளும் இன்னமும் வியத் நாம் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன.இதனால் தினமும் கிட்டத் தட்ட மூன்று அல்லது நான்கு பேர்கள் ஊனமுறுவது நடக்கிறது. வியத் நாமிற்கு போன வருடம் வெறும் முப்பது லட்சம் டாலர்கள் மட்டுமே அமெரிக்கா உதவிப் பணம் அளித்தது. அமெரிக்கா இதற்கு இன்னமும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் எனக் கருத்துகள் வெளீயாகின்றன. வியத் நாமிய மக்களுக்கும், தலைவர்களுக்கும் நாம் தலை வணங்க வேண்டும். துயரத்திலே தோய்ந்த வரலாறு அவர்களது. இரண்டு பெரு சக்திகள் தம் வலுவைச் சோதிக்க வியத் நாமின் மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் பயன் படுத்தின. போர் முடிந்த பின்பு ரஷ்யாவும் உதவி புரியவில்லை. அமெரிக்கவும் உதவி புரிய வில்லை. ஆனால், அமெரிக்காவிற்கு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

காட்டு மரங்களின் இலைகளை கொட்ட வைக்க ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற வேதிப்பொருளை டன் கணக்கில் வியத்நாம் காடுகளில் கொட்டியது அமெரிக்க அரசாங்கம். அதன் விளைவுகள் இன்றும் வியத்நாம் குழந்தைகள் மேல்.

*********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 12 in the series 20001112_Issue

மஞ்சுளா நவநீதன்


ராஜ்குமார் விடுதலை

ராஜ்குமார் விடுதலை ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் . இதற்கு உதவி செய்த பழ. நெடுமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராஜ் குமார் பழ. நெடுமாறனை மிகவும் புகழ்ந்திருக்கிறார். யோகி என்றும், சிறந்த மனிதாபிமானி என்றும் சொல்லியுள்ளார். அந்தப் புகழ்ச்சிக்கு அவர் மிகவும் தகுதியானவரே. ஆனால், தனிப் பட்ட முறையில் ஒரு மனிதரின் தகுதி அவருடைய அரசியல் நிலைபாடுகளை நியாயப் படுத்தவும், சமனப் படுத்தவும் பயன் படுவது மிக ஆபத்தான விஷயம். ஆர் எஸ் எஸ் ‘சமூக சேவை ‘ புரிகிறது, அத்வானி லஞ்சம் வாங்காதவர் என்று புகழுரைகள் சொல்லப் பட்டு கூடவே அவர்கள் இந்துத்துவா விஷமும் அதனால் ‘நல்லது ‘ தான் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒப்பானது இது.

ஹிட்லர் கூட இந்த விதமாய்ப் பார்க்கப் போனால் ‘நல்லவன் ‘ தான். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் மாமிசம் கூடச் சாப்பிடாதவன். சொந்த நலனுக்காக, பணம் சேர்க்காதவன் தான்., அந்த ஒருவன் தான் யூதப் பேரழிவிற்குக் காரணமாய் ஒருந்தவன். தமிழ் ஃபாஸிஸத்திற்கும், தமிழ் நாட்டில் வாழ்கிற மற்ற இனங்களின் மீதும் வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற ஒரு இயக்கத்தின் தலைவர் நெடுமாறன் என்பது மறக்கப் பட்டுவிடக் கூடாது.

வீரப்பன் நடத்திய இந்த நூறு நாள் நாடகத்தின் பின்பாவது, அரசாங்கங்கள் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது. கிரிமினல்களை வளர விடுவதும், அதற்குச் சாதகமான, அரசியல், போலிஸ் மற்றும் ஊழல் அதிகார வர்க்கம் தப்பிப்பதும், தடா போன்ற குரூரமான சட்டங்களின் போர்வையில் நீதித் துறையின் பொறுப்பை அரசாங்கம் கையில் எடுத்துக் கொள்வதும் நிற்க வேண்டும். வீரப்பனை அப்ரூவராய் ஏற்றுக் கொண்டு, அவன் காட்டித் தரும் அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டிப்பது தான் இது போல் இனி நிகழாமல் இருக்கத் துணையாகிற ஒரு நடவடிக்கையாய் இருக்க முடியும்.

***********

திருட்டு விடியோவை எதிர்த்து, திருட்டு கமல் ஹாசன், திருட்டு கிரேஸி மோகன்.

ஒரே ஒரு ஊரிலே ஒரு மனநோயாளி இருந்தான் . அவனைக் கண்டாலே மன நோய் மருத்துவர்களுக்கு ஒரே நடுக்கம். மருத்துவர்களுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டு அவர்களைப் பைத்தியமாய் அடிக்கிற மன நோயாளி அவன். அவனுக்குக் கிடைக்கிற ஒரு மருத்துவரின் தங்கையையும். குடும்பத்தையும் அவன் கவர்ந்து விட அவனைக் கொல்வதற்கு அந்த மருத்துவர் முயல்கிறார். ஆனால் அந்தக் கொலை முயற்சிகள் தன்னைக் குணப் படுத்த மருத்துவர் நடத்தும் நன் முயற்சிகள் எனப் பாராட்டி அந்த நோயாளி மருத்துவரை இன்னமும் எரிச்சல் ஊட்டுகிறான். கடைசியில் நோயாளி மருத்துவரின் தங்கையை மணந்து கொள்ள, மருத்துவர் பைத்தியமாகிறார்.

‘தெனாலி ‘ கதையைச் சொல்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு மார்க் பூஜ்யம். ரிச்சர்ட் ட்ரைஃபஸ் மருத்துவராகவும், பில் மர்ரே நோயாளியாகவும் நடித்த ‘வாட் அபெளட் பாப் ? ‘ என்ற படத்தின் கதை இது. தெனாலி கதையை தெனாலி படத்துக்குப் பத்து வருடம் முன்னாலேயே திருடிவிட்டது ஹாலிவுட். திருட்டு விடியோவை எதிர்க்கிறோமாக்கும் என்று மகாசூரர்கள் கிளம்பினால், அவர்களிடம், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களிடம் ‘அவ்வை சண்முகி ‘, ‘மகளிர் மட்டும் ‘, ‘தெனாலி ‘ இதற்கெல்லாம் அனுமதி வாங்கிவிட்டார்களா என்று கேட்கலாம். உங்கள் திருட்டு சினிமாவைத் தானே நாங்கள் திருடி வி சி டி போடுகிறோம் என்று கேட்க வேண்டும்

****

ஜோதி பாசு ஓய்வு பெறுகிறார்.

ஜோதி பாசு வங்காள முதலமைச்சராய் இருந்து ஓய்வு பெறுகிறார். ஜோதி பாசு எந்த அளவு கம்யூனிஸ்டாய்ச் செயல் பட்டார், எந்த அளவு வர்க்கப் போராட்டத்தில் வெற்றி பெற்றார் என்றெல்லாம் எச்சக் கச்சமாய் கேள்வி கேட்கப் படாத வரையில் அவர் முதல்வர் என்ற முறையில் நன்றாய்த் தான் ஆட்சி நடத்தினார்.

அவர் முதல்வராய் ஆவதற்கு முன்பு போலிஸ் அமைச்சராய், வங்காளக் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் செயல் பட்ட விதம் பல விதங்களில் கண்டனம் செய்யப் பட்டதும் உண்மை தான். எனினும், கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் ஜாதிக் கட்சிகள் மாதிரி குட்டிக் குட்டி இடது சாரிக் கட்சிகளை சமாளித்து ஒரே அணியில் நிறுத்தி, ஆட்சி செய்த விதமே பாராட்டத் தக்கது தான், ஆனால் வங்காளம் மற்ற மானிலங்களில் நடந்த அளவு சிறப்பான தொழில் வளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை என்பதும் உண்மைதான்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக சுற்றுப் பயணம் செய்து, வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவர் பதவி விலகினார் என்பதில் எந்த அளவு உண்மை என்று போகப் போகத் தான் தெரியும்.

*****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue

சின்னக் கருப்பன்


தமிழ் நாட்டின் அரசைப் பாராட்ட மூன்று காரணங்கள்.

இந்த வாரம் தமிழ் நாடின் அரசாங்கம் பாராட்டுப் பெறும் படியாய் மூன்று காரியங்களைச் செய்துள்ளது. ‘பாரதி ‘ படத்திற்கு வரி விலக்கு. சாமி சிதம்பரனார் நூல்கள் 10 லட்சம் அவர் குடும்பத்திற்கு அளித்து நாட்டுடமையாக்கப் படுதல். அதே போல் மயிலை சீனி வெங்கட சாமியின் நூல்களும் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. தமிழ் அறிஞர் என்ற வார்த்தையையே அசிங்கம் என்று அறிவிக்கும் அளிவிக்கும் அளவிற்கு தமிழ் நாட்டில் தடுக்கி விழுந்தால் தமிழ் அறிஞர் என்று சொல்லிக் கொள்பவர்கள் மீது தான் விழ வேண்டும் என்ற நிலையில், இவர்கள் இருவரும் உண்மையான தமிழ் அறிஞர்கள். நான்காவதான இன்னொன்றிற்கு அரசைப் பாராட்டுவதா வழக்கமான கோணல் என்று முகம்சுளிப்பதா என்று தெரியரவில்லை. முடியரசன் என்ற ஒருவர் நூல்களூம் நாட்டுடைமைப் பட்டுள்ளன. தி மு க விசுவாசி ஒருவரைக் கெளரவிக்க வேண்டும் என்றால் அதற்கு திமுக-வின் கருவூலத்திலிருந்து தான் பணம் அளிக்க வேண்டுமே அல்லாது, அசின் கருவூலத்திலிருந்து அல்ல. இவருடைய தகுதி பற்றித் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நம் தமிழ் நாட்டில் இருந்த பலவித சமூகக் குழுக்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்து, பல சிறப்பான கட்டுரைகள் மூலம் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த பிலோ இருதயநாத் அவர்களின் படைப்புகளும் இன்றைய தலைமுறைக்குத் தெரிய ஏற்பாடு செய்தால் நல்லது.

*****

புனிதர் பிஸினஸ்

கத்தோலிக்க மதத்தில் புனிதர் பட்டம் அளிப்பது என்பது ஒரு பெரிய கெளரவம் . அது கெளரவம் மட்டுமல்ல, அரசியலும் கூட. புனிதர் பட்டம் பெறுவதற்கு அவர் மூன்று ‘அற்புதங்களை ‘ நிகழ்த்தியிருக்க வேண்டும். சாதாரணமாக போப் ஆண்டவர் ஏதாவது ஒரு நாட்டுக்கு வருகை புரிந்தாரென்றால் அந்த நாட்டு ஆள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம். இப்போது தெரஸாவிற்குப் புனிதர் பட்டம் வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நல்ல விஷயம் தான். ஆனால் சிக்கல் என்னவென்றால், தெரஸா என்ன ‘அற்புதங்கள் ‘ நிகழ்த்தினார் என்று பதிவு செய்ய வேண்டும். ஆயிரமாயிரம் நோயாளிகளூக்கு ஆறுதலும் மன்நிம்மதியும் தருவது ‘அற்புதம் ‘ அல்ல. அது இயற்கைக்கு மீறிய செயலாகவும் இருக்க ஏண்டும். எப்படி இதை நிரூபிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

******

காங்கிரஸ் தலைவர் ‘தேர்தல் ‘

காங்கிரஸைப் பொறுத்த வரையில் தேர்தலே கேலிக்கூத்து. சோனியா காந்தியை எதிர்ப்பின்றித் தேர்ந்தெடுக்க முடியாமல் உத்தரப் பிரதேச ஆள் ஜிதேந்திரப் பிரசாத் முட்டுக் கட்டை போடுகிறார். உ.பியில் யார் யார் வாக்களிக்க முடியும் என்று பட்டியலைக் கேட்டு தகராறு செய்கிறார்.

உம். பார்க்கலாம் , சோனியாவை எதிர்ப்பதன் மூலம் , காங்கிரஸில் தீண்டத் தகாதவராய் ஆகப் போகும் இவர் கதி என்னவென்று.

*****

கல்வியில் ஒரு சோதனை முயற்சி

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சில சோதனை முயற்சிகள் பாராட்டத் தக்கன. சிறைக்கைதிகளுக்குக் கல்வியைக் கொண்டு செல்லும் முயற்சி அத்தகைய ஒன்று. இப்போது, பள்ளிக் கூடங்களில் உள்ள வசதிகளைப் பயன் படுத்திக் கொண்டு கல்லூரிக் கல்வியை இன்னும் பரவலாக்க முயல்கிறார்கள். இதன் துணை வேந்தர் க.ப.அறவாணனின் இந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும். ஆனால் சுய நிதிக் கல்லூரிகள் இந்த முயற்சிக்குத் தடை போட முயல்வதாய் அறிந்து வருந்துகிறேன்.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

இந்த வாரம் இப்படி

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

சின்னக்கருப்பன்


மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சியா ?

மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சி என்று தேர்தல் கமிஷனால் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது. உடனே பலரும் இதைக் கண்டனம் செய்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சி இந்தப் போக்கைக் கண்டித்து இருக்கிறது. இந்த அங்கீகாரம் அளிக்கப் படுவது தேர்தல் சின்னங்களுக்கான சட்டப் பிரிவையொட்டிச் செய்யப் பட்டுள்ளது.

இந்தச் சட்டப் பிரிவைப் பயன் படுத்தி ஏற்கனவே ஜனதா கட்சி போன்ற சில கட்சிகளின் சின்னங்களைப் பறித்துள்ளது தேர்தல் கமிஷன். அப்போது இது குறித்து எந்த மறுப்பும் சொல்லாத மார்க்ஸிஸ்ட் கட்சி இப்போது புலம்புவதில் அர்த்தமேயில்லை.. இப்போதும் கூட இந்த விதிகளின் அர்த்தமின்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. தனக்கு 33 சீட்டுகள் நாடாளுமன்றத்தில் உள்ளதைக் காரணம் காட்டி விதிகளை மாற்றச் சொல்கிறது. அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள எம் பி சீட்டுகளையும் பிராந்தியக் கட்சி என்று தீர்மானிப்பதில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. அது தவறொன்றுமில்லை. ஆனால், தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும் என்பது போல, தனக்கு பிராந்திய கட்சி என்ற முத்திரை வரும்போதுதான் சத்தம்போடுவேன் என்பது ஒரு தேசீய கட்சி எடுக்கும் நிலை போல தெரியவில்லை. அப்படியென்றால், தெலுகுதேச கட்சி 33 இடங்களுக்கு மேல் இருந்தால் அவர்களுக்கும் தேசீய கட்சி அந்தஸ்து கொடுக்க வேண்டுமல்லவா ? (அவர்களுக்கு ஆந்திரா தவிர வேறு எந்த இடத்திலும் போட்டி இட எண்ணமே இல்லாதிருந்தாலும்..)

இதற்கு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாள்பத்திரிக்கையான ‘இந்து ‘வும் தலையங்கமும், உரத்த சிந்தனை கட்டுரைகளையும் வெளியிட்டு ஆதரவு தேடுகிறது. பீப்பில்ஸ் டெமாக்ரஸி ‘ என்னும் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள அதே விஷயங்கள் அதே வரிகளில் இந்த இந்து கட்டுரையிலும் எழுதப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவே – பிராந்தியக் கட்சி, தேசீயக் கட்சி – அர்த்தமில்லாத ஒன்று. எது பிராந்தியக் கட்சி எது தேசீயக் கட்சி என்று மக்கள் தாம் தீர்மானிக்க வேண்டும்., தேர்தல் கமிஷன் அல்ல. இந்தப் பிரிவு தேவைப் படுகிற அபத்தமான காரணம் என்னவென்றால் , மக்களுக்குப் படிக்கத் தெரியாது அவர்களுக்குத் தேர்தல் சின்னங்கள் தான் தெரியும். அரிவாள் சுத்தியல் சின்னம் வேறு வேறு மானிலங்களில் வேறு வேறு கட்சிகளுக்குக் கிடைக்கலாம் என்பது தான்., மார்க்ஸிஸ்ட் கட்சியின் முக்கியமான கவலை. அதில்லாமல் வானொலி, தொலைக் காட்சியில் தேர்தல் பிரசாரத்திற்கு அளிக்கப் படுகிற நேரம், முக்கியத்துவம் இவற்றையும் இது பாதிக்கும். சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் படிப்பறிவின்மையை நீக்கிட முடியவில்லை நம்மால் என்பது குறித்து யாரும் வெட்கப் படக் காணோம்.

***

சுதர்சனம் : இந்திய ஏசு சேவக் சங்கத்தின் தலைவர் ? ?

ஆர் எஸ் எஸ்-இன் தலைவர் சுதர்சனம், கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆதியில் இந்துக்களாய் இருந்தவர்கள் தான் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் இந்திய சர்ச் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்தியாவில் ஏற்கெனவே இந்திய கிறிஸ்தவ சர்ச்சுகள் இருக்கின்றன. உதாரணமாக சிரியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் முழுக்க முழுக்க இந்திய சர்ச். அவரது பேச்சு கத்தோலிக்கர்களையும் பாப்டிஸ்டுகளுக்கும் எதிரானது. இதற்கு பதிலலித்த சகோதரி நிர்மலா ‘கத்தோலிக்க சர்ச் ஒரு தேசத்துக்கு சொந்தமானதல்ல, அது அனைத்துலகையும் தழுவியது ‘ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

சுதர்சனம் அவர்களே. கிறுஸ்தவர்கள் ஆதியில் இந்துவாய் இருந்தார்கள். அதற்கு முன்னால் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள். அதற்கு முன்னால் சிம்பன்ஸியாய் இருந்தார்கள்,. அதற்கு முன்பு ஒரு செல் உயிரினங்களாய் இருந்தார்கள். இதையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் நல்லது.

முஸ்லீம்களாக இருப்பதானாலே அவர்கள் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்று அவர்களைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதுபோலவே இன்று கிறிஸ்தவர்களை முத்திரை குத்த முயல்வதுதான் இந்தப்பேச்சின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகிறது.

உங்களின் தேசபக்தியையும்., சர்ச்சை இந்திய மயமாக்கும் எண்ணத்தையும் பாராட்டுகிறேன். இந்தியா ஜன நாயக நாடு. எனவே, எல்லோருக்கும் வழிகாட்டும் முகமாக, நீங்களும் ஆர் எஸ் எஸ் ஆட்களும் கூண்டோடு, கிறுஸ்தவர்களாவதற்கோ, இந்திய சர்ச் ஒன்றைத் துவக்குவதற்கோ ஒரு தடையுமில்லை. செய்யுங்கள்.

****

பாரதி படம் :

பாரதி படம் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் குப்பைகளைத் தான் விரும்புகிறார்கள் அதனால் தான் குப்பைக் கூடையைத் தலையில் சுமந்து நாங்கள் செலுலாய்டில் அளிக்கிறோம் என்று பிரகடனம் செய்து கொண்டிருக்கும் பட அதிபர் பண மூட்டைகளுக்கு இது ஒரு பாடமாய் அமைந்தால் நல்லது.

ஞான ராஜசேகரனின் ‘பாரதி ‘யை நான் பார்க்க வில்லை. ஆனால், முந்திய படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘மோக முள் ‘ என்னை அவ்வளவாய் ஈர்க்கவில்லை. அதில் சில நல்ல காட்சிகள் உண்டு. வெண்ணிற ஆடை மூர்த்தி கூட தன் வழக்கமான கோணங்கிகள் இல்லாமல் நன்றாக சில காட்சிகளில் வந்தார். ஆனால் முழுமையான படம் திருப்திகரமாய் இல்லை.

அவருடைய ‘முகம் ‘ படத்தை நான் ரசித்தேன். நல்ல திரைக்கதை உரையாடல். சினிமாவின் மொழி அறிந்தவர் அவர் என்பதை உணர்த்தும்படி பல காட்சிகள் அமைந்திருந்தன. ‘வித்தியாசமான கதையமைப்பு ‘ என்பதே அதை நான் ரசித்ததற்கு இன்னொரு காரணம். ‘ சினிமாவுக்குப் போன சித்தாளு ‘வின் பாதிப்பைத் தவிர்த்திருக்கலாம். – அந்தக் காட்சிகள் நன்றாய் எடுக்கப் பட்டிருந்த போதும். மற்ற படி, படம் ஒரு கவனிக்கப் பட வேண்டிய படமே.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்