நாதப்பிரம்மம்
Published January 30, 2011 • By
ராஜா
ராஜா

தனிமையின் சன்னல்பரப்புகளில்
சுருக்கிட்டுத் தொங்கும் திரைச்சீலையின் கால்களை
ஆட்டிப் பார்க்கிறது காற்று
வெறுமை இறுகி
சுற்றிலும் சுவர்களாய்ச் சமைந்திருக்கும் இந்த அறைக்குள்
கூடிவிடுகிறது இருத்தலின் கனம்
தூங்கி விடு தூக்கம் விடுதலை
சாலையில் வண்டிச் சத்தங்கள்
செவிக்குள் புகுந்து மூளையைச் சிதறடிக்கும் இடி
ஜன்னலை இழுத்து மூடு கதவைச் சாத்து
சுவரில் உச்சுக் கொட்டுகிறது கடிகாரம்
நொடியின் மரணத்தில் ஜனிக்கும் ஓசை
காலத்தின் கடிகார இயக்கம்
எப்போது துவங்கியிருக்கும் எப்பொழுதில் நிற்கும்
நிறுத்துவது நீயாக இருக்கட்டும்
பேட்டரியை கழட்டி வை… ம்…
கதவடைத்தும் வாகன இரைச்சல் நின்றபாடில்லை காதடை
நாதம் நாதம் சர்வம் நாதம்
ஒலி புகா ஒரே இடம் அம்மா
நெஞ்சுக்கூடு தடதடக்கிறது
எப்போது கடக்கும் இந்த ரயில்
அம்மாவ பார்க்கணும்
மாரோடு சேர்த்து தலையணை அழுத்து
பஞ்சடைத்த வஸ்து வெடியடக்குமா
எதுக்கும் அம்மாட்ட ஒருதடவை பேசிடலாமா
வழியிருக்கிறது
ஒரத் தையல் பிரித்து துருத்திய பஞ்சுருட்டி
நாசித் துவாரங்களை அடைத்தான்
நுழை பிளந்தது நுரையீரல் ஆணைக்கு
உமிழ்ந்த உஷ்ணத்தில் சர்ப்பத்தின் அரவம் கேட்டான்
அரவத்தில் அமிழ மகுடிக்கு இசைந்தது பாம்பு
விழித்துக் கொண்டவன் ஒருபோதும் உறங்கவில்லை மீண்டும்.
________