வைரமுத்துக்களின் வானம்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

ருத்ரா


கவிப்பேரரசே!

பட்டாம்பூச்சிகள்

என்றாலே

கற்பனையை

தின்ன நினைக்கும்

பேனாவின் நாக்கில்

நீரூர வைக்கும்

வானத்து அல்வாத்துண்டுகள்

அல்லவா ?

இப்போது

பட்டாம்பூச்சிகளும்

வைரமுத்துகளும்

கொஞ்சம்

இடம் மாற்றிக்கொள்ளலாம்.

வாருங்கள் கவி குமாரரே!

ஸ்டியரிங்கை

நான் பிடிக்கிறேன்.

‘கொஞ்சம் புழு ..நிறைய ரெக்கை ‘

‘இன்னும் நிறையவே இழையாடும்

வர்ணப்பிழம்பு ‘

அது தானே

பட்டாம்பூச்சியைப்பற்றி

கவிதையில் எழுதும்

உங்கள் ‘ஈக்குவேஷன் ‘.

இப்போது

கார்க்கண்ணாடியில்

உரசி விழும்

அந்த பூச்சியே நீங்கள்.

நான்

ஸ்பீடாமீட்டரின்

வண்ண வண்ணமான

பூனைக்கண்களில்

என் வானவில்லை

தொப்பூள்கொடியாக்கி

சுற்றிகொண்டு

டயர்களின் வயிறு தேய்த்து

தார்க்கருப்பில்

ஒரு விடியல் தேடி

சிறகு துடிக்கிறேன்.

இந்த வானத்தையெல்லாம்

சுருட்டி

தூர எறிந்துவிட்டு

தூரத்தின்

மைல் கற்கள்தோறும்

எச்சில் தொட்டு

அடையாளம்

வைத்து விட்டுப்போகிறேன்.

உங்கள் எழுத்தாணிகளோடு

என்னைத்தொடந்து வாருங்கள்.

என் வர்ணச்சூரியன்கள்

உங்கள் மீது

சூடுபோடும்வரை

இந்த சினிமா இருட்டை

பிசைந்து தின்றுகொண்டே

என்னைத்தொடர்ந்து வாருங்கள்

ஈ மொய்த்த

சினிமா சந்தையில்

எந்த டியூனுக்கு

‘கொங்கு தேர் வாழ்க்கை

அஞ்சிறைத்தும்பியை ‘

பிய்த்து தின்று

தேனீர் குடித்துக்கொண்டிருக்கிறீர்களோ ?

சதையை கதையாக்கும்

எந்த சாக்கு மூட்டைகளின்

கோயம்பேட்டு

அழுகல் நாற்றத்தை

கலித்தொகை

ஆக்கிக்கொண்டிருக்கிறீர்களோ ?

இந்த தேசத்து

பதினாலு-பதினாறுகளின்

ஜீன்ஸ் குகைக்குள்

தீ மூட்டி

தேனூற்றியதில்

உங்கள் ‘பர்சுகள் ‘

கர்ப்பிணிகளின் வயிறுகளாய்

உப்பிப்போயிருக்கலாம்.

கன்னித்தமிழை

உன் கண்ணாடிச்சிமிழுக்குள்

காத்துகொண்டிருப்பதாய்

தவம் செய்து கொண்டிருப்பவரே.

இந்த விளம்பரவெறிகொண்ட

சினிமா மருத்துவச்சிகளின்

கையில்

கன்னிக்குடம் உடைத்தா

உங்கள் கவிதை

பிர ‘சவம் ‘ ஆகின்றது ?

சின்னப் பூவும்

கொலுசுமணிகளும்

கூட

தீப்பற்றி எரிந்த

சொக்கப்பனையில்

உங்கள் எழுத்துகளின்

முகங்கள்

சிவந்து ஜொலித்தன.

உங்கள் பேனாக்கள்

ஃப்ராய்டிசக் கூர்நகங்களின்

அம்பராத்தூணி ஆகிப்போனதில்

இந்த இளைஞர்களுக்கு

சினிமாப்பாட்டுகளின்

மராமரங்களிலிருந்து

வந்து துளைக்கும்

வதைப்படலங்கள் தான்

தினம் தினம் அரங்கேற்றம்.

எறும்புப்பந்தியில்

கரைந்து போகும்

என்னை

ஆயிரம் ஆயிரம்

கல்லறை தேடி

எனக்கு

உங்கள் கவிதையில்

மரண சாசனம் எழுதும்

கவிதை அரசரே!

இந்த இளஞ்சிட்டுகளின்

நெஞ்சுக்குள்

அக்கினிச் சொட்டுகளை

பாய்ச்சுவதே

இந்த பணம் காய்ச்சி

மரங்களுக்கு

கவிதையில்

நீங்கள் செய்யும் நீர்ப்பாசனம்.

அந்த மெல்லிய விபத்தில்

என் வர்ணங்கள் எல்லாம்

கூழாகிப்பொயிருக்குமோ ?

அந்தக்கூரிய வினாடிகளில்

தூரிகைகள் எல்லாம்

கழுவேறி

தற்கொலை

செய்து கொண்டிருக்குமோ

என்ற

உங்கள் நுண்ணிய கவலையில்

கவிச்சுவை அற்புதம்தான்.

ஜுராசிக் காலத்து

டைனோசார்

எலும்புக்கூட்டைச்

சுரண்டிப்பார்த்து

அதிலும்

சுந்தரக்காதலின்

சுவாசம்

இருப்பதாய்

ஃபிலிம் காட்டி

உங்கள் கிரீடத்தில்

பீலிகள் சூட்டிக்கொள்ளும்

கவிவேந்தரே!

உங்கள் வியாபாரம் செழிக்க

இந்த இளைஞர்களின்

முதுகு சொரிந்து

அதை

தீப்பெட்டியாக்கியா

உங்கள் தீக்குச்சிகளை

உரசிக்கொண்டிருப்பது ?

சூல் கொண்ட மதர்ப்போடு

கவிதை பாடுங்கள்.

அதற்காக

வசூல் குவிக்கும்

ஏ ஏரியா பி ஏரியா என்று

ஒரு புதிய யாப்பிலக்கணத்தை

எப்போது

உங்கள் கவிதைக்குள்

திணித்துவைத்தீர்கள் ?

செத்தகுயிலுக்கு

பஞ்சும் நாரும் அதோடு

கரன்சியும் அடைத்து

‘குயில் பாட்டு பாடும் ‘

உங்கள்

செப்படிவித்தைகள்

ஏராளம் ஏராளம்.

கல்லூரிவானங்களில்

காதலின்

கஞ்சாப் பொட்டலங்களாய்

உங்கள் கவிதைகள்

மழை தூவுகின்றன.

இளைஞர்களின்

21-ஆம் நூற்றாண்டை

கல்லறைத்தோட்டமாக்கிவிட

துடிக்கும்

‘கூல வாணிக ‘ப்புலவர்களே,

உங்கள் கூச்சல்களை

கொஞ்சம் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தேனீர்க்கோப்பைக்குள்

நிறைய வானத்தை

வடிகட்டவந்த வித்தகரே.

முதலில்

உங்கள் வானத்தை

செப்பனிட்டுக்கொள்ளுங்கள்.

க்ளாப் ஸ்டிக்குகளில்

கேட்கும்

ஜிகினா இதயங்களின்

துடிப்புகளுக்கு

எங்கள் வண்ணசிறகுகளை

சாமரங்களாக்கி

தூள்கிளப்பியது போதும்.

காதல் எனும்

மின்னல் கீற்றில்

ஓலைப்பந்தல் போட்டு

உங்கள் வானத்துக்கு

கூரை போட்டுக்கொள்வதில்

ஒன்றும் ஆட்சேபணையில்லை.

ஆனால்

காதலை குத்தீட்டியாக்கி

இளைஞர்களின்

இந்த அகன்ற வானத்தை

நீங்கள்

கந்தல் ஆக்கியதில் தான்

இந்த

உயிரெழுத்துக்கள்

உயிரிழந்து

இரத்தம் கசிகின்றன.

சினிமா எனும்

பளிங்கு சவப்பெட்டியில்

கூட்டுப்புழுவாய்

கிடந்துவிட்டு

அவ்வப்போது

அந்த பணவாசம் விட்டு

வனவாசம் வந்திருக்கும்

கவிஞர்களே!

இளசுகளின் சுவாசங்களை

வைத்து

தாஜ்மகால்கள் கட்டும்

இந்த சலவைக்கல்

கோலி விளையாட்டையும்

இனி நிறுத்திக்கொள்ளுங்கள்.

எப்போதுமே

‘கடலை போடும் ‘

விடலைகள் அல்ல

இவர்கள்.

வாழ்க்கைப் பெருங்கடலில்

வெறும் காதல்நுரைகளை

மட்டுமே கல்வெட்டுகள்

ஆக்கவந்த

அரைவேக்காடுகள் அல்ல

இவர்கள்.

‘குமுதத்தின் ‘ பக்கங்களில்

குறுகிப்போவதற்கு

அந்த வானம்

உங்கள் மூக்கு துடைக்கும்

கைக்குட்டைகள் அல்ல.

===ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா