உலக சுகாதார தினம்
ப.குமார்

நேற்று ஈழம்
இன்று ஈராக்
குவியல் குவியலாய்ப் பிணங்கள்
மறுபக்கம் மருத்துவமனையில்
உறைந்த குருதிகளுடன்
கை கால் இழந்த குழந்தைகள்
இவை போலியோவால் அல்ல!
போரினால்.
சுதந்திரம்
என் பேச்சிற்கும் இல்லை
என் மூச்சிற்கும் இல்லை-இன்று
சல்லடை போட்டுச் சுவாசிக்கிறேன்
சார்ஸ் நோயாம்.
குப்பைத் தொட்டியில் வீசிய
உணவுப் பொட்டலத்திற்க்கு
உருண்டு புரண்டான் ஒருவன் நாயோடு!-அந்த
உணவை உண்ணும் போது நினைத்தான்-இன்று
உலக சுகாதார தினமென்று.
குண்டுகளின்
சத்தங்கள்
எங்கள் காதுகளைச் செவிடாக்கின.
புகைகள்
எங்கள் சுவாசத்தை வீணடித்தன.
அதன் சிதறல்கள்
எங்கள் கண்களைக் குருடாக்கின.
இவைகளின் ஒட்டுமொத்த
அவலங்களுக்குப் பதில்தான் என்ன ?
ஓ! இன்று உலக சுகாதார தினமல்லவா ?
நேற்று ஈழம்
இன்று ஈராக்
நாளை ?.
***
ப.குமார், ஆய்வாளர், தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
**kumsu_in@yahoo.com