ஊழிற் பெருவலி யாதுள ?
சி. ஜெயபாரதன், கனடா
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
திருவள்ளுவர்
“ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”
கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)
இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். நமது பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.
ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டிருக்கிறார். மெய்யாக அது துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எப்போது ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மை யாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.
இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீன கணினி மேற்பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி •போர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? முதல் கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?
உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளையாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படையெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவாகிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.
மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப்பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானதில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.
மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூறா இயலாது. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.
மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்ப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP or Vista) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்ப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சி யத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.
உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிற தென்றும், மனிதன் இறக்கும் போது உயிர் எங்கே போகிற தென்பதும் இன்னும் எவருக்கும் தெரியாமல் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகிறது.
+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 8, 2011
http://jayabarathan.wordpress.com/
- ஐந்து குறுங்கவிதைகள்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- தாமிரபரணித் தண்ணீர்
- இரவின்மடியில்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- முன்னேற்பாடுகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- தோட்டத்துப்பச்சிலை
- வலை (2000) – 2
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- ஒரு கணக்கெடுப்பு
- ஊழிற் பெருவலி யாதுள ?
- நீ, நான் மற்றும் அவன்
- தண்ணீர்க் காட்டில் - 1
- நரம்பறுந்த நிலம்..
- ப.மதியழகன் கவிதைகள்
- இயல்பில் இருத்தல்
- ஆரம்பம்
- தியான மோனம்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- கூடா நட்பினால் விளைவது கேடே
- முடிவற்ற பயணம் …
- வரிசையின் முகம்
- இதய ஒலி.
- அப்பாபோல
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- நீ அறியும் பூவே
- போர்ப் பட்டாளங்கள்
- ஒரு ஊரையே
- கடன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- மனசாட்சி விற்பனைக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- வலை (2000) – 1