தோட்டத்துப்பச்சிலை

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

அமைதிச்சாரல்


..

இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து மறுபடியும் அதன் இடத்திலேயே வைத்தான்.. இலக்கில்லாமல் எதிரிலிருந்த கணிணியை வெறித்துக்கொண்டிருந்தவன் தம்ளரின் மூடியை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு தண்ணீர் குடித்துக்கொண்டான். அப்படியே அழுந்த முகத்தைத்துடைத்துக்கொண்டு, நெற்றியில் கைகளை முட்டுக்கொடுத்து தாங்கிக்கொண்டு சிறிது நேரம் தலைகுனிந்து கண்மூடி அமர்ந்திருந்தான்… மனசு கொஞ்சம் கொஞ்சமாக ஒருநிலைப்படத்தொடங்கியது.

‘ச்சே… இந்த முறையும் தவறிப்போயிடுச்சே’.. சத்தமில்லாத வார்த்தைகள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. இந்த பதவி உயர்வை ரொம்பவே எதிர்பார்த்திருந்தான்.. நாலைந்து முறை அவனது பெயர் லிஸ்டில் வருவதும், சீனியாரிட்டி முறையில் மற்றவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுவதுமாக இருந்தது. இந்தமுறை அவனது பேட்ச்மேட் ப்ரேம்தான் அவனுக்கு போட்டியாக இருக்கப்போகிறான்,.. ஆகவே கேசவனுக்கு வாய்ப்பு உறுதி என்று தலைமையகத்தில், மேலதிகாரியின் அந்தரங்க உதவியாளராக இருக்கும் ஒரு நம்பகமான நண்பன் அடித்துச்சொல்லியிருந்தான். ஆகவே ரொம்பவே நம்பிக்கையோடிருந்தான்.

ஆனால், வந்த லிஸ்டைப்பார்த்ததும் நம்பமுடியாமல் தன்னுடைய நேரடி மேலதிகாரியிடம் விளக்கம் கேட்க ஓடினான் , அவர்தானே தலைமையகத்துக்கு சிபாரிசு செய்தது. ஆனால் இவனிடம் ஏதேதோ காரணங்களைக்கூறி சாக்குச்சொல்லிவிட்டார். ‘சார்.. உங்களுக்கே தெரியும், நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன்னு’ என்றவனிடம் ‘ என்னப்பா செய்யறது!! ப்ரேம்மாதிரி ஒரு ஹார்டுவொர்க்கர்தான் வேணும்ன்னு கேட்டப்ப என்னால தட்டமுடியல’ என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த ஃபைலில் முகத்தை புதைத்துக்கொண்டார். ‘நீங்க போகலாம்’என்பதற்கான மறைமுக உத்தரவு அது. தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கைக்கு திரும்பிவிட்டான்.

எல்லா எரிச்சலையும் சேர்த்துக்கொடுத்த உதையில் பைக் உடனே கிளம்பியது.. ட்ராபிக்கில் நீந்திவந்து வீட்டையடைந்ததும் சோபாவில் அமர்ந்தவன்,.. வழக்கம்போல ஷூக்களையும் காலுறைகளையும் மூலைக்கொன்றாக எறிந்தான். அவன் நீட்டிய ஃப்ரீப்கேசை வாங்கி டீபாயில் வைத்தவள், வழக்கம்போல ஷூக்களை அதற்கான அலமாரியில் வைத்துவிட்டு, காலுறைகளை அழுக்குத்துணிகளுடன் சேர்த்துப்போட்டாள்.

‘ஏங்க… காபி, டீ… என்ன கொண்டுவரட்டும்??’

‘காபி கொண்டுவா’

அவன் கொண்டு போயிருந்த டிபன் பாக்ஸை சிங்கில் கழுவப்போட்டபடி, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

‘மத்தியானம் வத்தக்குழம்பு நல்லாயிருந்ததா??’

‘வத்தக்குழம்புக்கென்ன?!!.. வத்தக்குழம்புமாதிரிதான் இருந்தது. ஒலகத்துலயே நீ ஒருத்திதான் அலுசமா குழம்பு செஞ்சுட்டியா??.. எங்கம்மா எவ்வளவு சூப்பரா பண்ணுவாங்க தெரியுமா!!’

பதில் பேசாமல் பாலை அடுப்பில் சுடவைத்தாள். காலையிலும் இப்படித்தான், பாத்ரூமிலிருந்து வந்தவன்.. அங்கிருந்தே குரலுயர்த்தி கத்தினான்.

‘என்னோட கைக்குட்டையை எங்கே?.. ஆபீசுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்ன்னு தெரியாது??’

சர்ர்ர்ர்ர்ர்ர்…ர்…ர்..ர் ஓடிக்கொண்டிருந்த மிக்ஸி நின்றது. ஈரக்கையை துடைத்துக்கொண்டு வெளிப்பட்டவள், ப்ரீப்கேசின் பின்புறம் சரிந்து விழுந்திருந்த கைக்குட்டையை எடுத்து அதன்மேல் வைத்துவிட்டு அரக்கப்பரக்க சமையலறைக்கு சென்று டிபன் செய்வதில் முனைந்தாள். நேரமாகிவிட்டதென்றால் சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிவிடுவானே. ஆனாலும் அன்று ‘அடையை இன்னும் கொஞ்சம் முறுகவிட்டிருக்கலாம்’ என்ற ‘அட்வைசுடன்’ சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

அவன் இப்படித்தான்.. அவள் செய்யும் எல்லாவற்றிலும் நொட்டை சொல்வான். அவனைப்பொறுத்தவரை அவளுக்கு சாமர்த்தியம் போதாது.. இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக அவளை நாம்தான் உருமாற்றவேண்டும் என்ற நினைப்புதான்… மற்றபடி மனைவியை கொடுமைப்படுத்தும் ரகமில்லை. ஆரம்பத்தில் இது அவளுக்கும் மனக்கஷ்டமாகத்தான் இருந்தது.. மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டாள். அவளும் படித்தவள்தான்.. நறுவிசாக காரியம் பார்ப்பவள்தான். ஆனாலும், என்ன செய்தாலும் திருப்தியில்லாமல் குற்றம் கண்டுபிடிப்பவனை, என்ன சொல்லி திருத்துவது!! என்று அவளுக்கும் புரியவில்லை.

டீயை கொண்டுவந்தவள் பக்கத்திலேயே ஸ்னாக்ஸ் தட்டையும் வைத்தாள்.

மெதுவாக விரல் நுனியால் தட்டை தன்னைவிட்டு நகர்த்தியபடி ‘இன்னிக்கும் அதே மெதுவடையா… இன்னிக்கு மத்தியானம், எங்க ஆபீஸ்ல சுப்பு சார் வீட்லேர்ந்து கேசரி செஞ்சு குடுத்துவிட்டிருந்தாங்க. அடடா… என்னருசி தெரியுமா??.. ஏதோ மாம்பழ கேசரியாம். நீயும் அதேமாதிரி வெரைட்டியா செய்ய கத்துக்க..’ என்றான்.

‘சரி.. கத்துக்கறேன்… ஏன் ஏதோ மாதிரியாயிருக்கீங்க?? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினையா!!’

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு,’ இந்தக்காலத்துல உழைக்கிறவனுக்கு ஏது மரியாதை.. எவ்வளவு உழைச்சாலும் மேலதிகாரிங்களுக்கு திருப்தி வரமாட்டேங்குது. எங்கிட்ட ஒரு வேலையை கொடுத்தா எவ்வளவு கஷ்டப்பட்டுன்னாலும் செஞ்சு முடிச்சிருக்கேனே தவிர, இன்னொருத்தர் கிட்ட அந்த வேலையை தள்ளிவிட்டதில்லை.. எவ்வளவுதான் மாங்குமாங்குன்னு உழைச்சாலும் அதுக்கொரு அங்கீகாரம் கிடைச்சாத்தானே நம்ம மனசுக்கும் ஒரு திருப்தி… ஹூம்!. இதெல்லாம் வீட்ல சொகுசா உக்காந்துக்கிட்டிருக்கிற உனக்கெங்கே புரியப்போவுது’ என்றான்.

‘ஏன் புரியாது??.. நல்லாவே புரியும்’ என்றபடி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, இரவுசமையலை கவனிக்க அடுக்களைக்குள் புகுந்தாள். தினமும் அவள், தன்னுள்ளே நினைத்து நினைத்து புழுங்கும் எண்ணங்கள், இன்று அவன் வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிப்பட்டிருப்பதை சொல்லிக்காட்ட அவளுக்கு நேரமில்லை.. விருப்பமுமில்லை. என்றாவது ஒரு நாள் காலம் அவனுக்கு அதை உணர்த்தட்டும், என்று நம்பிக்கையுடன் நினைத்துக்கொண்டபடி சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

டீபாயில் கிடந்த மாதப்பத்திரிக்கையில்,.. அவள் எழுதியனுப்பி முதல்பரிசு பெற்ற சமையல் குறிப்பான, ‘மாம்பழ கேசரி’ .. அச்சாகி வெளிவந்திருந்த பக்கம் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தப்புத்தகம் பழசாகி, பழையபேப்பர்காரரின் கைக்குப்போகிறவரை.. அதை அவன் கவனிக்கவேயில்லை.

Series Navigation

அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்