காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

சுப்ரபாரதிமணியன்



காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது.ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை , அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம். கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30 சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார்.தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.‌

வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன.சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது, தனக்கு பார்க்க கிடைக்கவில்லை, செய்தி தெரியவிலை என்றார்.

கேர‌ளா சர்வதேச திரைப்ப‌ட‌விழாவிற்கு தொட‌ர்ச்சியாக‌ச் செல்ப்வ‌ன் நான்.சென்ற‌ டிச‌ம்ப‌ரில் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்கு சென்ற‌ போது காஞ்சீவ‌ரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று‌ பார்த்தேன். அதிர்ச்சியாக‌ இருந்தது.எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன்.திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். த‌ளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.

முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான். ‌

=சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்