குழந்தைமை..

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

தேனம்மை லஷ்மணன்


**********************

”வ வா . வெ. வில் பாடு.. “..

“வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா..”..

புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்..
இந்த ஜன்னலில் இரண்டு .. அந்த ஜன்னலில் இரண்டு..

”பாட்டுக்குப் பாட்டு..” பாடிக்கொண்டு..

அம்மாக்களும் குழந்தைகளுமாய் ஏதோ திருமணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்..

”காட்டாம வந்திருக்கு.. டா வில் பாடு ..” என ஒரு அனார்கலி சுடிதார் போட்ட பெண்ணிடம் இன்னொரு ஜீன்ஸ் பாண்ட் டீச ர்ட் போட்ட குழந்தை சொல்லியது.. அது துப்பட்டாவை தலையைச் சுற்றி வளைப்பதும்., கழுத்தைச் சுற்றி இழுப்பதுமாய் ஒரே குறும்பு.. இந்த ஜன்னலில் இருந்த இன்னொரு பெண்ணிடம் கேட்டது..

இந்தப் பக்கம் காக்ரா சோளி அணிந்த குழந்தை ஒன்று டாடி என்று அப்பாவையும் அம்மாவையும் காட்டியது..

உடனே ,” டாடி மம்மி வீட்டில் இல்லை.. விளையாட யாரும் இல்லை..” என அனார்கலி சூடிதார் போட்ட பெண் பாடியதும் அதன் அம்மா பட்டென்று வாயில் அடித்தாள்..

” என்ன பாட்டு பாடுறே நீயி ..” என்று.

அதுவரை கலகலப்பாக போய்க் கொண்டிருந்த இடம் இறுக்கமானது.. எல்லாம் ஒன்றை ஒன்று பயத்துடன் பார்த்தன.. அடிவாங்கிய பெண் அதிர்ந்தது .. ட்ரெயினில் எல்லாரையும் ஒரு முறை பார்த்தது.. கண்ணீர் தளும்பும் கண்களோடு குனிந்து துப்பட்டாவில் முகத்தை மூடி விசும்பியது..

எதிர் சீட்டில் இருந்த குழந்தை அதை ஆதரவாய் அதன் முதுகில் தட்டியது.. வயல்வெளிகளில் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் ரயில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.. எல்லாரும் அவரவர் இருக்கைகளில் எங்கோ பார்த்தபடி இருந்தார்கள்.. அடுத்த ஸ்டேஷன் வந்ததும் தள்ளியடித்து இறங்கினார்கள்.. முண்டியடித்து மக்கள் ஏறினார்கள்..

சிறிதுநேரம் கழித்து அடித்த பெண்ணின் அம்மா ஏதோ எடுத்து எல்லா குழந்தைகளுக்கும் தின்னக் கொடுத்தாள்.. அடி வாங்கிய குழந்தை வாங்க மறுத்து முகம் திருப்பி ஜன்னலில் இருளை வெறித்தது.. சரி போ என சொல்லி அவளே வாயில் போட்டுக் கொண்டாள்..

வருத்தம் கப்பிய முகத்தோடு திரும்ப குனிந்து கொண்டது குழந்தை..

தண்ணீர் குடித்து விட்டு திரும்ப குழந்தைகள் பாட ஆரம்பித்தார்கள்.. நாலைந்து பாட்டுக்கள் போய் இருக்கும்.. அடிவாங்கிய குழந்தையும் அழைத்தார்கள். மறுத்த அது சிறிது நேரத்தில் ஆவலாய் கவனிக்க ஆரம்பித்தது..

” த தா தீ யில் பாடு” என ஒன்று சொல்ல இது குறுக்கே புகுந்து “தீ தீ தீ.. ஜெகஜ்ஜோதி ஜோதி ஜோதி “ என பாடியது..

அதன் ஜிமிக்கிகளும் கண்ணீர் உறைந்து காய்ந்த கன்னங்களும் ட்ரெயினின் ஓட்டத்தில் விலகிச் சென்ற நியானில் பட்டு சிகப்பாய் ஜொலித்தது . அதன் அம்மா லேசாக குழந்தையின் கன்னத்திப் பிடித்து கொஞ்சினாள். புடவையில் அதன் மூக்கை துடைத்தாள்.. அவள் கையில் குழந்தை சாய்ந்து கொண்டது..குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்.. சட்டென்று மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது அவர்களால்.

வீட்டுக்கு வந்த பின்.. தோசை ஊற்றி சாப்பிடலாம் என ஊற்ற ஆரம்பித்தபோது தன்னையறியாமல் .,”வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. ”என பாடல் வாயில் வந்த போது குழந்தையானதாய் மெல்லிய புன்முறுவலும் பூத்துக் கிடந்தது..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்