திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)

This entry is in the series 20080612_Issue

கே.பாலமுருகன்


தனேஸ்குமார்!
ஒரு நொடியில் வார்த்தைகள்
தடித்து
மறுமுனையில் தடுமாறும்!
திக்கு வாய்!
இல்லை!
அவன் வாய் திக்கி நான்
பார்த்ததில்லையே!
வார்த்தைகள்தான்!

கைகளிரண்டும்
உடலுக்குத் தொடர்பற்றதாய்
வீங்கிக் கிடக்கும்!
பின்தலையைச் சுரண்டிக்
கொண்டேதான் பேசுவான்!
வியர்வை நெடி சூழ்ந்திருக்கும்!

சாலையைக் கடக்கும்போது
பழைய இரும்பு கடையில்
அவனைப் பார்த்ததாக
நினைவு!
வியர்வை நெடியில்
அமிழ்ந்து போயிருப்பான்
அனேகமாக!

நட்பு பாராட்ட இயலாத
தொலைவில்
தனேஸ்குமார்!
எங்காவது பார்த்துவிடுவேனோ
என்ற அச்சம்!
குமட்டலைச் சகித்துக் கொண்டு
அவன் முன் பொய்யாக நிற்பதற்குப்
பதிலாகப் பார்க்காமலே
இருந்துவிடலாம்!


bala_barathi@hotmail.com

Series Navigation

About கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

View all 123 articles →

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)

This entry is in the series 20080612_Issue

கே.பாலமுருகன்



சிவகுமார்!
சிரிப்பதற்கென்றே நேரங்களைத்
தனியாகச் செலவிட விரும்பாதவன்!
சிரித்துக் கொண்டே
பேசிவிடுவான்!

அவனுக்கு
முகமெல்லாம் பற்கள்!
சிரித்துக் கொண்டுதான்
கோபப்படுவான்!
மௌனத்தைத் தொலைத்துவிட்டு
அலைபவன்!

மனிதர்களைச் சந்தித்துக் கொள்ளூம்
முதல் தருணத்திலேயே
சிரித்துதான் வைப்பான்!
ஏமாளியும்கூட!
கையிருப்பில் கிடக்கும்
எல்லாமும் சிரித்தே
பறிகொடுத்துவிட்டு
மீண்டும் சிரித்துக் கொண்டே
நிற்பான் பரிதாப ஏமாளி!

அவன் அழ வேண்டியதில்லை!
அவன் ஏமாந்த கதைகளையெல்லாம்
கேட்டு நான்தான் அழுது தீர்த்தேன்!
இப்பொழுது அவன் இங்கு இருப்பதாக
எந்தப் பதிவும் இல்லை!
யாராவது ஏமாந்தவர்களைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்கள் கலங்குகின்றன!


bala_barathi@hotmail.com

Series Navigation

About கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

View all 123 articles →

நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-1 (காளியப்பன்)

This entry is in the series 20080605_Issue

கே.பாலமுருகன்


காளியப்பன்!
நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்ட
முகத் தோற்றம்!
வெறுமனே உடலில்
அமர்ந்திருக்கும் சோம்பல்!
புருவமிரண்டும் எதையோ தாங்கி
பிடித்தப்படியாகவே மேலெழும்பி
நிற்கும்!

ஒட்டிய வயிறும்
தலையிலிருந்து விலகிப் பார்க்கும்
காதுகளும்!
மெலிந்த மார்பகம்!

கடைசியாக
கோவிலில் வைத்து
5வெள்ளி கிடைக்குமா
என்று அவன்
கேட்டுக் கொண்டிருந்தபோது
பார்த்தது!

கருணையை ஏந்தி
உடல் அசைவுகளில்
காட்டிக் கொண்டிருந்தான்!
5வெள்ளியை எடுத்து நீட்டியபோது
அதை வாங்கிப் பாக்கெட்டில்
செருகிக் கொண்டே
நடக்க தொடங்கினான்!
காளியப்பனா இது?
நிகழ்காலத்தை எங்கு
தொலைத்திருப்பான்?

முச்சந்தியில்
நின்று கொண்டு
வானத்தையே
அன்னாந்து
பார்த்துக் கொண்டிருந்தான்!
நட்சத்திரங்களற்ற வானம்
அவனுக்கு மேலே!


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

About கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

View all 123 articles →