சொல்ல முடியாத பாடல்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

சாந்தன்



அந்தப் பாட்டு, சொர்க்கத்திலிருப்பதான அவனது உணர்வை உறுதிப் படுத்துவதாயிருந்தது.

கீழே, இருள் நடுவில், கண்டிப் பெருநகர் அமைதியாகக் கிடந்தது; தன் ஆயிரமாயிரம் மின்னொளிக் கண்களை அகல விரித்தபடி.

அது உறங்கிக் கொண்டே விழித்திருக்கிறதா, விழித்துக்கொண்டே உறங்குகிறதா என வியந்தபடி நின்று கொண்டிருந்தான்.

மழை, சற்று முன்புதான் ஓய்ந்திருந்தது. சிலிர் நீர் சொட்டச் செய்யும் குளிர் காற்றின் மெல்லிய இரைச்சலை விட வேறொன்றுங் கேட்காத அமைதி.

நேரம் பதினொன்றைத் தாண்டியாயிற்று.

கரும் பட்டுத் துண்டில் வைர மணிகளைக் கொட்டிப் பரவி விட்டால் இப்படித்தானிருக்கும்.

இந்த உயரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டே, இந்தக் குளிரில் சுவறிச் சிலிர்த்தபடி, ஓட்டல் அறையின் இந்த பல்கனியில் இப்படியே நிழலுருவாய் உறைந்து விடலாம் போலிருந்தது.

அப்போதுதான் அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கிற்று. இந்த அமைதியின் அழகைக் குலைக்கப் போகிறதே என்ற அவன் பயத்தைப் பொய்யாக்கியவாறு, தானும் இச்சூழலின் அங்கமே என்பது போல் ஒலிக்கலாயிற்று, அது. அந்த அமைதியைப் பிசக்காத மென்மை, அதனோடிணைந்த, அதற்கு உயிர் கொடுப்பதே போன்ற இசைவு.

மனதை ஊடுருவும், உயிரின் மையத்தைத் தொட முயலும் ஒரு குரல். ஒற்றைத் தனிப் பெண் குரல்.

அப்படிப் பிழிவது சோகமா, விரகமா என்று புரிந்து கொள்ள இயலாதிருந்தது. இல்லை, அது ஏக்கம், ஏக்கந்தான். ஆனால், எதை நாடும் ஏக்கம்?

புரியாத மொழிதான். இந்தி என்பது மட்டும் புரிந்தது. இசைக்கு மொழி உண்டா என்ன?

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மலைகளிடை சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியின் குரலா இன்னமும் இங்கே இப்படி எதிரொலிக்கிறது? அல்லது, ஆண்டாண்டாய்த் தொடரும் தன் அவலமெண்ணி ஈழமண் எழுப்புங் குரலோ, இது ?

எதுவோ, சோகத்தின் பிழிவு இப்படி சொர்க்கத்தின் சாயலில் இசைவது சாத்தியமா, என்ன? அதிசயந்தான்.

சினமாப் பாடலாகத்தானிருக்கும் – வேறெதைப் போடச் சாத்தியம் இங்கே?- பின்னணி ஆர்ப்பாட்டமோ, பாடகியின் திறன் காட்டும் முனைப்போ இல்லாத இயல்பான வெளிப்பாடு, மாரி காலக் குயிலின் பாடல் போல். பாடும் அக்கணத்தின் இருப்பு வெளிப்பாடு போல்.

அவள் தனக்காகவேதான் பாடுகிறாள்! அதுதான் இத்தனை உயிர்ப்பு!

இல்லை, எனக்காகவும் என்று அடுத்த கணம் அவன் மனதில் பட்டது. இல்லாவிட்டால், ஏன் இந்த வேளை பார்த்து அது ஒலிக்கிறது?

ஓட்டலின் அடித்தளத்தில் எங்கோ ஓரிடத்திலிருந்து அந்த ரேடியோ ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். இரவு வேலையில் ஈடுபட்டுள்ள பணியாளர் எவரோ அல்லது தூக்கம் பிடிக்காமலிருக்கிற விருந்தினர் யாரோ அதைப் போட்டிருக்கலாம். எவராயினும், இங்கிதம் தெரிந்தவர், இரவின் இதம் குறையாத மாதிரி, பாடலின் உயிர் பதறாத மாதிரி, ஒலிக்க விட்டிருந்தார் தொனியை.

யாரென்று தெரியாத அந்த ஆளுக்கு தன்னுள்ளே நன்றி சொன்னான்.

அப்படியே மிதந்து போவதாய் அவனை ஆக்கிக்கொண்டிருந்தது, பாடல். மழையால் அலைப்புற்ற செவ்வந்திச் செடியின் வாசனையாயிருக்க வேண்டும், மெல்ல ஒரு இழையாய் புலனிற் புகுந்தது.

அவ்வேளை பார்த்து கீழே பள்ளத்தாக்கின் வலது மூலையில் விரிந்து கிடந்த வாவியின் மேலாய் நிலவு மெல்ல வெளிப்பட்டது. பௌர்ணமி கழித்த இரண்டாம் நாள் நிலவு. இன்னமும் முகில் திரை முழுதாய்க் கரையாததில் படர்ந்த சோகை.
நிலவு எப்படித் தெரிந்தாலும் அழகுதான்; சொர்க்கத்தின் ஒளியே அதுதானே.

இந்தக் கலவையை இப்படிக் கலந்தவன் யார்? இந்த இடம், இந்த அரை இருள், கசியும் இந்த ஒளி, இந்தக் காற்று, இந்தக் குளிர், இந்த உயரம், அந்த வாவி, அந்த வைரத் தூவல்கள், அந்த வான், அந்த நிலா, செவ்வந்தி வாசம்…

எல்லாம் அப்படி அந்தந்த அளவிற் கலக்க நிகழ்தகவு தானென்ன? கோடியில் ஒன்றாய் அதைக் கலந்து அக் கலவையின் உயிராய் இப் பாடலையுமொலிக்க விட்டது? இறைவனா?

அன்று பகல் அவனுக்கு ஒரு வெற்றிகரமான நாளாய் வேறு அமைந்திருந்தது; வந்த வேலையெல்லாம் வடிவாக முடித்திருந்தான். நாளைக்காலை ஊர் திரும்ப ஆயத்தம்.

பல்கனி மேகமாய் மாறியிருந்தது. கரைந்து கரைந்து மிதந்து கொண்டிருந்த போதில் புதிதாய் ஒரு பயம், பாட்டு முடிந்து விடுமே…

மிஞ்சி மிஞ்சிப் போனால் மூன்று நிமிஷம்! அதில் பாதி போயிருக்கும்…

இன்னொன்று தொடங்கி இச் சுவையைக் குழப்ப முதல், பத்திரமாய்க் காதைப் பொத்தியவன் போல் அறையுள் நுழைந்து அதன் கதவைத் தாழிட்டான்.

படுக்கையில் சரிந்தது தான் தாமதம், அவன் மனதிலிருந்தே அப்பாடல் மெல்லலையாய் மீண்டும் பரவலாயிற்று; அதனுள் புதைந்து அப்படியே உறங்கிப் போனான்.

)*(

பத்தாண்டுகளுக்கும் மேலே.

அந்தப்பாடலை அன்று கேட்டது எவ்வளவு அதிசயமோ, அதை விட அதிசயம், அதைப்பிறகு எப்போதுமே கேட்க முடியாமல் போனது.

ஆனால், அடிக்கடி மாறுகிற சூழல்களை; போர் கவிந்து, புறத் தொடர்பென்று எதுவுமே அற்று நீள்கிற வேளைகளை; வானொலி என்ன, வெளிச்சமேகூட இன்றிக் கழிக்கிற இரவுகளை யெல்லாம் எண்ணிப் பார்க்கிற போது, அப்படியொன்றும் அதிசயமாயுமில்லை, அது.

அப்பாடல் மாத்திரம் அவனுள் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது; நிலவினில் நனைகிற, கூதலில் குளிர்கிற, செவ்வந்தி வாசத்தைச் சுவாசிக்கிற போதுகளில் எல்லாம்.

அப்படி அடிக்கடி கேட்காமலிருப்பதுகூட நல்லதுதான் என்றுந் தோன்றும், அதன் சுவையும் அது தந்த அநுபவமும் நீர்த்து விடாமல்.

என்றாலும் ஏதோ ஒரு வடிவில் அப் பாட்டைப் பதிந்து வைத்திருக்க மனம் அவாவும், ஆண்டிற்கொரு முறையாவது அதைக் கேட்டு அதிற் சுவறி, அந்தச் சொர்க்கத்தை மீட்கலாமே…

எல்லாவற்றுக்கும் மேலாய், அப் பாட்டை வைத்திருக்கும் உணர்வே எவ்வளவு பெரிதாயிருக்கும்!

)*(

போர் சற்று ஓய்ந்த ஒரு புது இடைவெளி; எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற பயமிருந்தாலும்,

கிடைத்த வெளியில் புதுக் காற்றைச் சுவாசித்து மீளும் முனைப்பு.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு படியாய்க் கொழும்பு சென்று, அங்கிருந்து அடுத்த கட்டம் சென்னை என்று, அதுவே ஒருசாதனையாய்!

ஒரு வாரம் அங்கு தங்குகிற போதில் இதையும் தேடலாமேயென்பது, போகமுதல் ஒரு நாள் மனதில் பளிச்சிட்டது. நினைவாய்க் குறித்துக் கொண்டான்.
குறித்த பின்தான் அக் குழப்பம்!

என்னவென்று சொல்வது? பாட்டின் வரிகள் புரியாது, தொடக்கமே கூடத் தெரியாது! ஒன்றிரண்டு சொற்கள் மட்டும் உயிரைக் கொக்கி போட்டு இழுக்கிற அவற்றின் சகல உச்சரிப்பு சாத்தியங்களுடனும் அவனுள் சுழன்று கொண்டேயிருக்கிறதைத் தவிர:

‘பியார்…’
‘ஸ¥ரஜ்…’
‘மேரே…’

எப்படித் தேடுவது? அந்த இசை, அந்த மெட்டு என்னவோ, அவனுள் இணைந்து, அவனுள் இழைந்து கொண்டேதானிருந்தது எப்போதும், என்றாலும்…

‘ஹம்’ செய்து காட்ட முடிந்தால்?

முயன்றான், முயன்று பார்த்தான்; அபசுரமாய் வந்தது!

அன்றுதான் தன் குரலிலும் ஆத்திரம் வந்தது.
)*(


Series Navigation

சாந்தன்

சாந்தன்