ஊனம்
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி

செவியாலும் விரல்களாலும்
பார்க்கிறான் அவன்
குருடனாய் நான்
விழிக்கிறேன் வழியறியாமல்
கட்செவியாலும் விழியாலும்
உணர்ந்து அவன்
யாரோ என்னை
அழைப்பதை உணர்த்துகிறான்
செவிடனாய் நான்
இன்னும் கேளாமல்
விழிகளாலும் விரல்களாலும்
பேசுகிறான் அவன்
ஊமையாய் மெளனிக்கிறேன்
பதிலுரைக்காமல்
ஒரு கால் குறைந்தும்
முயன்று தவழ்ந்து
பந்தயத்தில் ஆமையாய்
அவன் இயக்கத்தில்
மூன்று கால் முயலாய்
உடல் முடக்கி
நான் மயக்கத்தில்
என் ஊனம்
மிகப் பெரிது –
மனதில்.
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி
gk_aazhi@rediffmail.com