வாழ்வுகள் வாழும்
திலகபாமா,சிவகாசி

வாழ்வுக்காய்
வலை பின்னிக் காத்திருந்த
வண்ணத்துப்பூச்சி
வானவில் வண்ணம் பெற்று
தொலைத்தது வாலிபப் பருவம்
சேகரிப்பே வாழ்வென்று
எறும்புகள் புற்றில் நெல்மணிகள்
மழையில் முளைத்து
பொய்யாக்கின வாழ்வை
பெருக்கங்களே வாழ்வென்று
அடைகாத்த குருவிகள்
காலங்களின் பருவங்கள் கடக்க
முளைத்த சிறகுகள் பறந்து விட
வெற்றுக் கூடுகளாய்
தொலைத்தன வாழ்வை
பிறப்பும் இறப்பும் ஒரே நாளெனினும்
வாழ்ந்து கொண்டிருந்தன வாழ்வை
ஈசல்கள்
பூக்களும் புயல்களையும்
தீர்மானிக்கும் மானிடர்
தீர்மானங்களுக்குள் சிக்காது
வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறது
mahend-2k@eth.net