This entry is in the series 20110213_Issue

குமரி எஸ். நீலகண்டன்



கோடியைக் கொட்டி
புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி
பளபளக்கும் வீட்டில்
பவுசாக குடி
வந்தாகி விட்டது.

பழைய மேசை… நாற்காலி,
கடிகாரம், பக்கெட்,
மரப் பொருட்களென
பழையப் பழையப்
பொருட்களெல்லாம்
புதிய வீட்டைப்
பார்க்காமலேயே
வேலைக்காரி,
குப்பைப் பெட்டி,
பேப்பர்காரனென
பல திசைகளிலும்
பறந்து போய் விட்டன.

புத்தம் புதியப் பொருட்களுடன்
புத்தொளி வீசியப் புதிய வீட்டில்
ஐந்து வயது சுனந்தாவின்
அழகான அயல் நாட்டுப்
பைக்குள்ளிருந்து
ஒரு சிறு வெளி வழியாக
யாருக்கும் தெரியாமல்
மறைந்து பார்த்துக்
கொண்டிருந்தன
அந்த அழகான
பழைய மரப்பாச்சிப்
பொம்மையின்
திருட்டு விழிகள்
சுனந்தாவின் விழிகளோடு
போட்டி போட்டுக் கொண்டு.

Series Navigation