பூஜ்ஜியத்தின் கால்வாசி!
Published March 13, 2011 • By
ரசிகன்
ரசிகன்

மௌனங்கள்
என்னை அறைகிற போதெல்லாம்
என் கோவத்தை
சுவரில் முட்டியோ
யாருமற்ற அறையில் கத்தியோ
தணிந்து விடுகிறேன்!
நீங்கள்
எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு
என் வீட்டு கெவுளியும்
பக்கத்து வீட்டு குடும்ப சண்டையும்
தற்காலிக சிநேகம்!
பூஜ்ஜியத்தில்
அர்த்தப்படுகிற என் வெற்றிடத்தை
எதை கொண்டு நிரப்ப?
விண்ணளவு காகிதத்தில்
கடலளவு மை கொண்டு
எழுதி கிழித்துவிடலாம்
ஒற்றை இரவில்….
எழுத எடுத்த பேனாவின்
கருங்குப்பியினுள்
உறைந்து கிடக்கும்
தனி”மை”யின் நாற்றம்
ஒரு வித
போதையினை திணித்து விட
இன்றெழுத விட்டதை
நாளை எழுதிக்கொள்கிறேன்!
– ரசிகன்