ஐந்து குறுங்கவிதைகள்
தேனம்மை லஷ்மணன்
வெய்யில் தாளாமல்
வேர்வைத் துளிகளாய்
வடிந்து கொண்டிருந்தன இலைகள்..
************************************************
இரவுக் கம்மாய்க்குள்
குளித்துக் கொண்டிருந்தது
நிலவு.
********************************************************
அலகுகளும் கால்நகங்களும் நீண்ட
வல்லூறாய் நின்று கொண்டிருந்தது
மொட்டை மரம்.
************************************************************
அளவுகள் மாறிய
பேரிளம் பெண்ணாய்
விளைந்து கிடந்தது பலா
*****************************************************************
இருளையும் வெய்யிலையும்
உதறத் தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கிறது பூமி.