சமுகத் தளங்களின் வளர்ச்சியும், பங்கேற்போரினன் உளவியலும், தமிழ்ப் பயன்பாட்டின் தரமும்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

முனைவர் மு. பழனியப்பன்


முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை

தற்போது சமுகத் தளங்கள் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றன. இவற்றின் முலம் நண்பர்களை, பின்பற்றுநர்களை உருவாக்கி சமுக ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இத்தளங்களின் வரவால் இணையதளத்தை நிர்வகித்தல், வலைப் பூக்களை நிர்வகித்தல் போன்ற நிகழ்வுகள் பின்தள்ளப் பெற்று இணையத்தின் கருத்துப் பரிமாற்றம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.

இந்த அடுத்த கட்ட வளர்ச்சி மொழி சார்ந்த, விருப்பம் சார்ந்த குழுக்களை உருவாக்கிக் கொள்ளமுடிகின்றது. இந்தக் குழுக்கள் வாயிலாக ஓருணர்வுபட்டோரை ஒருங்கிணைக்க முடியும்.

குழு மின்னஞ்சலின் பரிமாண வளர்ச்சிதான் தற்போது டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் வருகையாகும். இதற்கு முன் ஹை. 5 போன்ற தளங்கள் இதே அடிப்படையில் நண்பர்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துவந்தன. தற்போது நண்பர்களைப் பரிமாரிக்கொள்ளும் வசதியைக் கூடுதலாக இவை தருகின்றன. இவற்றின் வளர்ச்சி, இவற்றைப் பயன்படுத்துவோரின் உளவியல் போன்றனவையும் கணக்கில் கொள்ளப்பெற்றால் இவற்றின் வருகையில் நிகழ்ந்த மாற்றங்களை அறிந்து கொள்ளமுடியும்.

டிவிட்டர் ஓர் அறிமுகம்
நூற்று நாற்பது எழுத்துக்களில் எழுதப்படும் ஒரு செய்திச்சேவை டிவிட்டர் ஆகும். தமிழில் இதனைக் குறுஞ்செய்தி என்று கொள்ளுகின்றனர். சிட்டுக் குருவியின் படத்தோடு அறிமுகமாகும் இந்த டிவிட்டர் என்ற அமைப்பு மைக்ரோ வலைப்பதிவுச்சேவையாகும்.

இதன்முலம் செய்தியை அனுப்பவும், செய்தியைப் பெறவும் முடியும். மேலும் அபேசிகளின் வழியாகவும் இந்தக் குறுஞ்செய்திகளைப் பெற இயலும்.

அடிப்படையில் ஒரே கேள்வியில் இந்த டிவிட்டர் இயங்குகிறது. அதாவது இந்த நொடியில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் அந்த அடிப்படை கேள்வி. இந்தக் கேள்வியின் தாக்கத்தில் எழுத்தப்படும் செய்திகளை குறிப்பிட்டச் சிலருக்கு மட்டுமோ அல்லது அனைத்துத் தொடர்பாளர்களுக்கும் அனுப்ப இயலும். அவர்கள் இதில் பதிலளக்க வாய்ப்புண்டு.

இதுதவிர படங்கள், படக்காட்சிகள் போன்றனவற்றைக் கூட அனுப்ப இயலும். இதனுள் இணைப்பிழையை இட்டு அதன்வழியாக இணையதளத்திற்கு, வலைப் பூவிற்கு வரச்செய்யலாம்.

மொத்தத்தில் இந்த குறுஞ்செய்தியை அனுப்புவோர் நிலையில இருந்து ஆய்வு செய்தால் பின்வரும் காரணங்களுக்காக இது அனுப்பப்படுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.

செய்திகள், ஸ்பேம், சுயவெளிப்பாடு, அர்த்தமில்லாத எழுத்துக்கள், முக்கியச் செய்திகள் என்ற வகைகளில் டிவிட்டரில் செய்திகள் பரிமாறப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அர்த்தமில்லாத செய்திகள் அதிகம் இடம் பெறுவதால் இந்த டிவிட்டரின் பயன்பாடு மலினப்படுத்தப் பெற்றுள்ளது.

மேலும் டிவிட்டரைப் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பலரும் இதனைப் பயன்படுத்தி வருவதால் இதன்மதிப்பு உயர்ந்து வருகிறது.

டிவிட்டரைப் பயன்படுத்துவதில் மொழித்தடைகள் ஏதும் இல்லை என்பது வரவேற்பிற்குரியது. நீங்கள் தமிழில் அச்சிட்டு தமிழிலேயே பதிலைப் பெறலாம் என்பது பெரும் வசதியாகும். இருப்பினும் டிவிட்டர தளம் ஆங்கில வடிவமைப்பினது என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

டிவிட்டரில் புரபைல் என்ற பகுதியில் டிவிட்டருக்கு உரியவரின் புகைப்படம், அவர் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருப்பதும் ஒரு நல்ல செய்தி. இங்குப் பெரும்பாலும் உண்மைத்தகவல்களை வெளியிடும் போக்கு பதிவர்களிடம் காணப்படுகிறது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் டிவிட்டரின் பயன்பாடு நாகரீகத்தோடு செயல்பட்டுவருகிறது என்பதும் ஒத்துக் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

தமிழக அளவில் டிவிட்டர் பயன்பாடு என்பது மெல்ல மேம்பட்டு வருகிறது. இருப்பினும் இலங்கைத் தமிழர்தம் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருகிறது.

அவர்களின் அரசியல், தாய்மண்தாகம் போன்றவற்றின் எழுச்சிச் செய்திகளின் களமாகத் தற்போது டிவிட்டர் விளங்கி வருகிறது. இந்தச் சூழலில் இலங்கைத் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்துக் கொள்ள டிவிட்டர் களம் உதவி வருகிறது.

இவற்றைத் தாண்டி தமிழ்ச்சமுகம் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள் குறித்து டிவிட்டர் பதிவர்கள் சிந்திக்க வேண்டும். இதுபோன்று டிவிட்டர் தமிழ்ச்செய்திகளை ஒருங்கிணைக்கும் அக்ரிகேட்டர் களங்களும் தேவை.

அதிக அளவில் செய்திகளைச் சுமந்து வரும் டிவிட்டர்களைக் காண்பதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திட அவற்றை பொருளடிப்படையில் பிரித்துக் கொள்ளும் வகையில் தனித்த தலைப்புகளை அளிக்கும் வாய்ப்பினை டிவிட்டர் வழங்கலாம்.

பேஸ்புக்
டிவிட்டருக்கு இணையான போட்டியாக விளங்குவது பேஸ்புக் ஆகும். இதுவும் ஒரு சமுதாய இணைப்புக்களமாகும். ஒரு மனிதனின் வாழ்வில் பிற நண்பர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்புடைய தளமாக இத்தளம் விளங்குகிறது.

டிவிட்டரில் இல்லாத பல வசதிகளை உடையதாக இது விளங்குகிறது. இதற்கும் செய்தி அளவின் வரையறை உண்டு. அதிக அளவிலான செய்திகளை இவை ஏற்பதில்லை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் முறையில் இதுவும் செயல்படுகிறது.

இதனுள் புரபைல் பாட்ஜ், லைக் பாட்ஜ், போட்டோ பாட்ஜ், பேஜ் பாட்ஜ், பைண்ட் பிரண்ட்ஸ் போன்ற அமைப்புகள் உள்ளன. தன்விபரக்குறிப்புகளை அறிய புரபைல் பாட்ஜ் பயன்படுகிறது. விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள லைக் பாட்ஜ் பயன்படுகிறது. போட்டோ பாட்ஜ் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. பேஜ பாட்ஜ் என்பது பக்கங்களை அறிமுகப்படுத்த உதவுகின்றது. இதுதவிர நண்பர்களைத் தேடும் வசதியும் இதனுள் உள்ளது.

பேஸ் புக் அமைப்பினைப் பொறுத்தவரை நண்பர்கள் பலரை அறிமுகப்படுத்தும் வசதியை அது செய்துகொண்டே இருக்கின்றது. குறிப்பிட்ட இடத்தில் பேஸ் புக்கில் இணைந்தவர்களை அது அறிமுகம் செய்து கொண்டிருப்பதால் அவர்களுடன் தொடர்புகளை உருகாக்கிக் கொள்ளமுடிகின்றது. தன் விருப்பக் கடிதங்களை அளித்தால் அவர்கள் அதனை ஏற்றால் அவர்களும் நாமும் ஒரு கட்டுக்குள் வந்துவிடமுடியும். நம் நண்பர்களும் அவரின் நண்பர்களும் இணைந்து கொள்ளமுடியும். மேலும் ஒரு நண்பரின் தளத்தினை ஒரு சொடுக்கில் அடைந்து விடுகிற வசதியையும் இது தருகிறது.

பேஸ்புக்கிற்குள் ஒரு குழுவைக் கூட உருவாக்கிக் கொள்ள இயலும். இந்தக் குழு குழுவாகவே தனித்து இயங்கமுடியும்.

பொதுத்தன்மைகள்
டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றின் வருகை தனிமனித மின்னஞ்சல் தொடர்புகளை சமுகத் தொடர்புகளாக வளர்ச்சியடையச் செய்துள்ளன.

பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை என்பது இவையிரண்டிற்கும் மிகத் தேவையானதாகும்.

பின்பற்றுபவர்களின் வாயிலாக ஒரு ஊரிலோயோ அல்லது ஒரு நாட்டிலேயே உள்ளவர்கள் ஒருங்கிணைய இயலும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.
ஒரு நகரத்திற்குள் உள்ளவர்கள் இந்தச் செய்திகள் வாயிலாக அவரவர் இடத்திற்கு வருகின்றபோது அவரவரின் முகவரிகளை, இட வழிகாட்டுதல்களைக் கூட இவற்றின் வாயிலாகப் பெற இயலும்.

இவை அஞ்சல் போல செயல்படுவதால இணைப்பு இல்லாத நேரங்களிலும் இவை அனுப்பப்பட்ட செய்திகளாகக் கணக்கில் கொள்ளப்பட்டு இணைப்பு வந்தவுடன் சேரவேண்டியவருக்குச் சென்று சேர்கின்றன.

மேலும் இவற்றின் தகவல்களை எளிதாக கணினி இணைப்பு தவிர்ந்த நிலையில் அலைபேசிகளின் வழியாகப் பெற இயலும்.

இதுபோன்ற பல காரணங்களால் தமிழ் சமுகத்தினர் இந்த வசதியைப் பெற்று சமுதாய நிலையில் ஒன்றிணைய இயலும்.

உளவியல் அடிப்படையில் சமுகத்தளங்கள்
பெரும்பாலோனோர் சுய தகவல்களை உண்மை நிலையிலேயே அளிப்பதன் வாயிலாக இந்தத்தளங்களில் நாகதரீகத்தன்மை பேணப்பெற்று வருகின்றது.

எந்த நிலையிலும் இதன் வாயிலாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்போது சுயவிபரம், சுயபுகைப்படம் ஆகியன அடையாளங்களாக அறிவிக்கப்படுவதால் உண்மைத்தன்மையுடன் இதன் பதிவர்கள் விளங்கவேண்டி இருக்கிறது.

பின்பற்றுநர்களின் மன அளவையும் புரிந்து கொண்டுப் பதிவர்கள் செயல்பட வேண்டி உள்ளது. இணையதளங்களை நிர்வகிப்பதில் இத்தகைய நிலை தேவையில்லை.

குறிப்பாக இதனைப் பயன்படுத்துவோர் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதை விட தன் கருத்துக்களில் உறுதியாக இருக்கின்றனர்.

ஆண், பெண் பாலின அடிப்படையில் பின்தொடர்வாளர்கள் பெண்களின் பக்கங்களில் அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது.

தேவையற்ற செய்திகளை அதிக அளவில் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக அவர்களின் வெறுமைத் தன்மை வெளிப்பட்டு விடுகின்றது. நேரக்கழிப்பிற்கான நிலையில் டிவிட்டரை, பேஸ்புக்கைப் பயன்படுத்தினாலும், அதனைத் தெளிவாக டிவிட்டர் செய்திகள், பேஸ் புக் செய்திகள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.

பிரபலமானவர்களின் கருத்துக்களை உடன் அறிந்து கொள்வதன் வாயிலாக மிகக் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவதற்குக் கூட இதனுள் வாய்ப்புகள் உள்ளன.

இவ்வளவில் மேற்கண்ட சமுகத்தளங்களில் இணைவது என்பது மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் செயல்பட வேண்டி உள்ளது என்பது மட்டும் உறுதி. அதனை நிர்வகிப்பது இன்னும் கடுமையானது என்பதும் உண்மை.

தனிமனிதரின் உளம் சார்ந்த அரசியல், சார்புடைய அரசியல், சாதியச்சூழல் போன்றன கூட இத்தளங்களின் வாயிலாக வெளிப்பட்டுவிடலாம்.

இணைய நிலையில் பேஸ்புக் தமிழ்த்தளத்தை உருவாக்கி வருவதாக அறியமுடிகிறது.அம்முயற்சி வெற்றி பெறவேண்டும். டிவிட்டரும் தமிழ்த்தளத்தை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்.

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்