மறுசிந்தனையில் ஸகாத்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறைசர்ந்த மக்கா நகர் குறைஷிகளுக்கும் வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையே பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும் பகைமையையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.

ஜகாத் என்பது ஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டுக் கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதி படைத்தோரை தாராள உள்ளத்துடன் உதவி செய்யத் தூண்டும் நடவடிக்கையாகும்..

மக்காவின் குரான் வசனங்கள் ஜகாத்தை ஒரு தர்மச் செயலாக அணுகுகிறது. மதிநாவில் நபிகள்நாயகம் (ஸல்)ஆட்சியமைப்பை ஏற்படுத்தியபின் அது கட்டாய கடமையாகிறது. அரசு நிர்வாக பிரதிகள் ஜகாத்தை வசூலிக்க நாடெங்கும் அனுப்பப்பட்டுள்ளனர் மதினாவில் இறங்கப்பட்ட குரான் வசனம் ஜகாத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லா ஏற்றுக் கொள்வதிலை என திட்டவட்டமாக அறிவித்தது.

நலிந்தவர்களையும் வறுமைப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கமே ஜகாதின் பிரதானமான நோக்கமாகும். இதற்கென வகுக்கப்பட்ட பொருளியல் திட்டமே வசதியுடையோர் தமது சொந்தநுகர்வு அடிப்படை தேவை போக தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து அனைத்திற்கும் ஜகாத் வழங்க வேண்டும் என்பதாகும்.

ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அவர் கட்டாய கடமையாக ஸகாத் என்னும் ஏழைவரியை குரான் சுட்டிக்காட்டும் வறியவர்கள் , ஏழைகள், உழைப்பவர்கள்,விடுதலைக்கான அடிமைகள் உள்ளிட்ட எட்டுவகைப் பிரிவினருக்கும் வழங்க வேண்டும்.

நிஸாப் எனும் சொல் நிர்ண்யிக்கப்பட்ட அள்வு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

செல்வம் என்பது மூலதனம்,முதலீடுகள்,உற்பத்தி, லாபம் என்பதான நான்குவகை பிரிவுகளையும் சேர்த்து குறிப்பதாகும்.

இது வீடு, நிலம்,தொழிற்சாலை,சேமிப்புகள், தங்கம் ,வெள்ளிஉள்ளிட்டவிலையுயர்பொருள் கள்,வாகனங்கள்,உற்பத்திகருவிகள் நிதிமூலதன்ம் உள்ளிட்ட வியாபார முதலீடுகள், ஆடு மாடு, ஒட்டகம் என தொடரும் கால்நடை சொத்துக்கள் விவசாய விளைபொருட்கள், தொழில் உற்பத்தி பொருட்கள் என் நிகழும் அனைத்து பொருளாதார அம்சங்களைச் சார்ந்ததாகும்

நிஸாப் – குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட அளவு என்பதன் கணக்கீடு சுத்த தங்கத்தின் மதிப்பீட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது. 85கிராம் தங்கம், அல்லது 595 கிராம் வெள்ளி மதிப்பை கடக்கும் நிலையில் அப் பொருளுக்கு 2.5 சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

தங்கம் வெள்ளி தவிர பிற சொத்துகளுக்கும் இம்மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இரண்டரை சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.இது விவசாய உற்பத்திபொருள் மற்றும் கால்நடை சொத்துகள் தவிர்த்த சொத்துக்களுக்கான அளவீடாகும்.

தனதுநிலத்தில் மதிப்புயர்ந்த கிரானைட் உள்ளிட்ட சுரங்க நில வளப் பொருட்கள் எண்ணெய் கிணறுகள், தங்கப் புதையல்களோ இருக்குமாயின் அவை தேசியமயமாக்கப் படாத சூழ்நிலையில் அச் சொத்துகளுக்கு இருபது சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஸகாத் விதி கால்நடை சொத்துக்களுக்கும் நிர்ண்யிக்கப்பட்டுள்ளது.ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் இருந்தால் அதற்கு ஒரு ஆடு ஸ்காத் ஆகும்.நாற்பது ஆடுகளுக்கு மேல் இருந்தாலும் ஒரு ஆடு ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

விவசாய நிலங்களுக்கு ஜகாத் இரு வேறுவிதமான அளவீட்டில் நிர்ணயிக்கப்படுள்ளது. விவசாய உற்பத்தி நிகழ்ந்து அறுவடையானவுடன்கிடைக்கும் விவசாயப் பொருள்களுக்கு விவசாயியின் சொந்த உழைப்பை அடிப்படை அலகாக கொண்டு இரண்டு வழிகளில் இந்த அளவீடு சொல்லப்படுகிறது.

உழைப்பு சக்தியை செலவழித்து அந்த விவசாயி நீரிறைத்து அப்பயிரை விளைவித்திருந்தால் நூற்றுக்கு ஐந்து சதவிகிதமும், நீர் இறைக்காமல் இயற்கை மழையினாலேயே விளைந்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவிகிதமும் ஜகாத் வழங்க வேண்டும். இதில் ஒரு வருடத்தில் அந்த நிலத்தில் மூன்று போகம் விளைந்தால் மூன்றுதடவையும் ஜகாத் கொடுக்க வேண்டும்.. தற்போதைய சூழலில் இது நெல் , வாழை, தென்னை,ரப்பர், கிராம்பு, தேயிலை, காப்பி உட்பட்ட அனைத்துவகை உணவுப்ப்யிர், பணப்பயிர், தோட்டப் பயிர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்த நீட்சியாகும்.

இந் நிலையில் ஜகாத் குறித்த வகாபியத்தின் தற்போதைய பார்வை என்பதே நவீன முதலாளிய நலன்கள் சார்ந்து மாறுபாடடைந்துள்ளது.ஒரு நபர் தனது சொத்துக்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதுமானது, ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டிய தேவையில்லை.ஏனெனில் ஜகாத் என்பது தூய்மைப்படுத்துதல் என்பதாகும். செல்வத்தை ஒருமுறை தூய்மைப்படுத்தினால் போதுமானது,ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதான விளக்கமாக இது மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய வகாபிய முதலாளியத்தின் இக்குரல் மிகத் தெளிவாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும், ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் வைரம்தொழில்களிலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும் லாபத்தையும் மூலதன பெருக்கத்தையும்,பாதுகாப்பதற்கா ன குரலாகவே இஸ்லாமியதளத்தில் ஒலிக்கிறது.இஸ்லாம் முன்வைத்த ஏழை எளிய நலிந்த மக்கள் பிரிவினரின் நலன்களை பாதுகாத்தல் என்கிற அறவியல் கோட்பாட்டிற்கே வகாபிசம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.
நன்றி

தமிழ்முஸ்லிம் சகோதரர்கள் குழுமம்(TMB)

செப்டம்பர் 7

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்