கரடி பொம்மை

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


யெஸ்.. நானேதான். இன்டியா முழுசும் தெரிஞ்ச சைல்ட் ஆர்ட்டிஸ்ட், ‘பிரியா தான் நான். இது ஸ்டில் இல்லை, நெஜமா நடந்துட்டுது. சித்தே முன்னே ட்ரிகர் இழுத்தது நிஜம், துப்பாக்கி முனை சிவந்து, புகைவந்ததும் நிஜம் ஆனா பானு மம்மியை நான் சுடல. வேற யாரு சுட்டிருப்பாங்க. குழப்பமாயிருக்குது. பானு மம்மி யாருண்ணு கேக்கறீங்களா ? கொஞ்சம் பொறுமையா இதைப் படிங்க புரியும். விருப்பம் இல்லாதவங்க சாயந்திர மாலை முரசுல எப்படியாவது மோப்பம் புடிச்சி எழுதியிருப்பாங்க. அதைப் படிச்சுக்குங்க.

தமிழ்ல, தெலுங்குல மலையாளத்துல, கன்னடத்துல, இந்தியில ஏன் ஒரியாவுல கூட ரொம்ப சமர்த்தா ஒரு சைல்ட் ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறேன்னா நானாகத்தானிருக்கும்.. நம்ம இன்டியாவிலேயே இன்கம்டாக்ஸ் கட்டற குழந்தை நட்சத்திரமும் நாந்தானாக்கும்.

ரஜனி அங்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் ஜானகி பாட்டியோட பாட்டுக்கு வாயசைச்ச்சிருக்கேன். ‘தேவி ‘ ‘ ஆண்ட்டி கூட சேர்ந்துகிட்டு ‘மாகாளி ‘ படத்துல தீ மிதிச்சிருக்கேன். இப்பக் கூட கிட்டத்துல அவங்ககூட ஒரு படம் பண்ணனே. என்ன பேரு ? ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே ‘ ங்கற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுண்ணு சொல்லி நிறைய ‘கின்டர் ‘ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய ‘ச்சூப்பா-ச்சப்ஸ் ‘ கொடுத்துட்டு, பக்கத்துல நிப்பாங்க. அதிலும், போன சனிக்கிழமை. கடைசி ஷாட்டின் போது நான் பாம்புப் புற்றுக்குள்ளக் கையைவிட்டு பாம்பைக் கையில் எடுக்க, தேவி ஆண்ட்டி ‘மை காட் ‘ ன்னு சொல்லி என்னை கட்டிப் புடிச்சுக்கிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது அந்தப் படத்தின் யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துக்கிட்டு நின்னுச்சி. இதெல்லாம் எதுக்கு சொல்றன்னா, ‘ ‘இந்த இந்திய சினிமால்லாம் பாக்கறது இல்லன்னு ‘ ‘ சொல்றவங்க இருப்பாங்க இல்ல, அவங்களுக்காக.

‘இவ்வளவு சமர்த்தா, புத்திசாலியாப் பேசற பின்னே ஏன் இந்தக் காரியம் பண்ண ‘ ன்னு கேக்கறீங்களா ? இந்தப் பொண்ேணோட தலையெழுத்து இப்படி ஆயிப்போச்சேன்னு உங்களுக்கு வருத்தமிருக்கா ? அப்ப உங்கக்கிட்ட நான் சொல்லியே ஆகணும்.

இதை நான் செய்யலை. இதைச் செஞ்சது என்னோட கரடி பொம்மைன்னு சொன்னா நம்பமாட்டாங்க இல்லை ? ‘நீ வெறும் அம்பு. உன்னை எய்தவன் யாருண்ணு தெரியும், ஓடிப்போ ‘ ன்னு ஒரு படத்துல ரஜனி அங்கிள் வில்லனோட ஆளுகிட்ட சொல்லுவார். அது மாதரி, நான் வெறும் அம்பு ன்னு சொல்றன். என்னோட டெடா பேர்- கரடி பொம்மைதான் எல்லாத்துக்கும் காரணம்.

எங்கிட்ட கொஞ்ச நாளா இந்த கரடி பொம்மை நிறையப் பேசுது. என்னைக் கூடவே வச்சுக்கணும்னு ஆரம்பத்துல வற்புறுத்திச்சு. நானும், பிரேக்பாஸ்ட், லன்ச், ஸ்கூல், டாய்லெட், பெட்டுன்னு சுமந்துக்கிட்டுத் திரிஞ்சேன். அதை ஒரு பேக்குல திணிச்சுவச்சு ஸ்கூலுக்குக் கொண்டுபோவேன். கிளாஸ்ல மேத்ஸ் டாச்சர் சீரியஸா லெக்ச்சர் கொடுப்பாங்க, அந்தச் சமயத்திலேகூட. நான் கரடி பொம்மையோட முனகலக் கேக்கணும். அதிலும் மேத்ஸ் டாச்சர் பிலோமினாமேல அதுக்கு என்ன வெறுப்போ மோசமா விமர்சனம் பண்ணும். ‘ராட்சசி ‘ ‘டிராகுலா ‘ன்னு கண்ட மேனிக்குப் பேர் வைக்கும். அதைக் கேட்டு நான் சிரிக்கணும். இல்லைன்னா என்னோட ‘டூ ‘தான். அப்புறம் சமாதானம் பண்ணணும்.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமா என்னை நிறையத் தப்புச் செய்ய சொல்லிச்சி. ஹோம் வொர்க் செய்யக்கூடாதாம், என் பிரண்ட்ஸ்களோட சண்டை போடணுமாம், அவங்களோட பொருள்கள எடுத்துவச்சுக்கிட்டு அவங்களை அழவைக்கணுமாம். இது கூட பரவாயில்லை என்னோட அப்பா அம்மா ரொம்பக் கெட்டவங்களாம். அவங்களை நம்பாதன்னு சொல்லுது. இந்தமாதிரி பொய்யெல்லாம் சொல்லாதேன்னும் சொல்லிப் பார்த்தேன். பொய்யில்லை நிஜம்னு சத்தியம் செய்யுது.

நீங்க என்ன நினைக்கிறீங்க ? இந்தப் பொண்ணு சரியான லூசு. ஏதோ உளறுதுங்கறீங்களா ? இல்லை. அப்படில்லாம் இல்லை. இதுவரைக்கும் எனக்கு ஒண்ணும் ஆகலை. இப்பவும் ஸ்கூல்ல, கேம்ஸ்ல, அப்புறம் ஸ்கூல் ட்ராமாவிலே என எல்லாத்திலும் இந்தக் காரியத்தைப் பண்ற வரைக்கும் நான் ரொம்ப சமர்த்தா, படு சுட்டியாத்தான் இருக்கிறேன். நிறையக் கேள்விகள் கேட்க்கிறேன், வயசுக்கு மீறிய காரியங்கள் செய்றேன். எனக்கு ஐ.க்யூ அதிகம்ன்னு எல்லாரும் சொல்றாங்க. எங்க டாக்டர் அங்கிள் கூட சொல்றார்.

இப்படி நான் கரடி பொம்மையோட பேசறது, பானு மம்மிக்குப் பிடிக்கலை. இப்படித்தான் ஒரு நாள் எனக்கும் கரடிபொம்மைக்கும் இரவு படுக்கையில சண்டை வந்துடுச்சி. மறுநாள் என் உடம்பைப் பார்த்த பானு மம்மி, உடம்பிலிருந்த கீறல்களைப் பார்த்துட்டு, என்ன நடந்துச்சிங்கிறா ?. எனக்கும் கரடி பொம்மைக்கும் நடந்த சண்டையைப்பத்திச் சொல்றன். என்னை ஒரு மாதரி பார்க்கறா. புரசவாக்கத்துல யாரோ அனந்தராமனாம், சைக்கியாற்றிஸ்டாம் அழைச்சுப்போறா. டாக்டர் அங்கிள் நிறையக் கேள்விகள் கேட்கிறார். கரடி பொம்மையைத் தொட்டு விசாரிக்கிறார். சிவப்பும், வெள்ளையுமா ஏதோ மாத்திரைகளைக் கொடுக்கிறார். என்னை வெளியே உட்காரச் சொல்லிட்டு பானு மம்மிக்கிட்ட பேசறார்.

நானும் கரடி பொம்மையும் வெளியே காத்திருக்கோம். ‘அவளை நம்பாதே ‘ ன்னுது. ‘யாரை ? ‘ ன்னு கேட்கிறேன். ‘டாக்டர்கிட்ட பேசறாளே அவளை ‘ ன்னுது. ‘பானு மம்மியையா ? ‘ சந்தேகத்தோடு கேக்கிறன். ‘ஆமாம், அவளைத்தான். அவ உனக்கு மம்மியேயில்ல, அவ உனக்கு மம்மியேயில்ல.. அவ உனக்கு மம்மியேயில்ல.. ‘ கரடி பொம்மை சத்தம் போடுது. எனக்குக் கோபம் வந்துடிச்சி. தூக்கி எறியறேன். டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்த மம்மி ‘என்ன ஆச்சுங்கிறா ? ‘. தூக்கி எறிஞ்சதுல கதவுல மோதிக் கீழே விழுந்த கரடி பொம்மையைப் பார்க்கிறேன். வலிச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஓடிப்போய்த் தூக்கி மடியில் வச்சுக்கிறேன்.

பானு மம்மி பார்க்கிறா. ‘வீட்டுக்குப் போனதும் அந்தச் சனியனைத் தலை முழுகு ‘ என்கிறாள். கரடி பொம்மை சிரிக்குது. ‘நாைளைக்கு அவளைத் தீர்த்துடுவோம்ன்னுது ‘. நான் ஏதோ சும்மாங்காட்டியும் சொல்லுதுன்னு நெனைச்சேன். நைட்டு, கரடி பொம்மையோட படுக்கப்போறேன். பானு மம்மி கரடிபொம்மையை வச்சுட்டுப் படுக்கப் போங்கிறா. என்னோட கரடிபொம்மை இல்லைன்னா எனக்கெப்படித் தூக்கம் வரும். புரண்டு புரண்டு படுக்கிறேன். ‘பிரியா. பிரியா.. ‘ கரடிபொம்மைதான் என்னைக் கூப்பிடுது. அதுக்கும் நானில்லாமல் தூக்கம் வராது.

கரடிபொம்மையை எடுக்க நைஸா வெளியே வரேன். பானுமம்மி யார்கூடவோ டெலிபோன்ல பேசறா.

‘எங்களுக்குப் பயமா இருக்குது. பிரியா நிதானத்துல இல்லை. தனக்குத்தானே பேசிக்கிறா கொஞ்ச நாளா. நாங்க அப்பா அம்மா இல்லங்கிறா..எப்படியோ உண்மை தெரிஞ்சு போச்சு. எப்படின்னுதான் தெரியலை. நாைளைக்கு நீங்க அவசியம்

வீட்டுக்கு வரணும். ஏதாவது செஞ்சாகணும். ‘

‘ இல்லை முடியாது. எப்படியாவது சமாளிங்க.. வெளியில மூச்சுவிடக் கூடாது. இன்னும் இரண்டு மூன்று வருஷத்துல ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யறேன். ‘ எதிர்த்த முனையில் தேவி ஆண்டியோட குரல். நான் கரடி பொம்மையை எடுத்துக் கொண்டு என்னோட பெட்ரூமுக்குள் நுழைஞ்சு கதவைச் சாத்திக்கிட்டேன்.

‘உனக்கு மம்மி வேணுமா ? வேணாமா ‘ கரடிபொம்மைதான் கேட்குது.

அப்ப பானு மம்மி ? கேள்வியைக் கேட்டுட்டுக்கரடி பொம்மையைப் பக்கத்தில் படுக்கவச்சுகிட்டேன்.

‘இவ இருக்கிற வரைக்கும் உன்னோட மம்மி உனக்குக் கிடைக்கமாட்டா.. ‘

‘அதற்கு என்ன செய்யலாம் ? ‘

‘அவ அைறையில இருக்கிற கப்போர்டுல, கிட்டத்துல லைசன்ஸ் எடுத்து ஒரு துப்பாக்கி வச்சிருக்கா. மீதியை விடிஞ்சு பாத்துக்கலாம் ‘

‘எனக்குப் பயமாயிருக்குது.. ‘

‘நல்ல சமர்த்துப் பொண்ணில்ல ‘..கரடி பொம்மை சிரிச்சுக்கொண்டே சொல்லுது.

******

அம்பலம் சிறப்பு சிறுகதை:1-6-03

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

கரடி பொம்மை

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

ஜெயந்தி சேது


என்றாவது தொட்டு பார்த்திட வேண்டும்
எசமானி வீட்டு கரடி பொம்மையை..
வெண்பஞ்சு பொதி ஒன்றை வெட்டி எடுத்தாற்போல
‘உசாலா போட்ருப்பாகளோ ‘ அப்பாவியாய் கேட்டிருக்கிறேன்..

வெள்ளை வெளேர் உடம்பும்
கறுப்புத் திராட்சை கண்களும்
முத்தமிட தோன்றும் மூக்கும்
சிவப்பு ரிப்பனுடன் கழுத்துமாய்
சிரித்துக் கொண்டே வருகிறது கனவில்
தொடத்தொட குறுகுறுத்து சிலிர்ப்புடன்
தூங்குவேன் மரப்பாச்சி பொம்மையுடன்..

விலை என்னவென்று ஒரு நாள் கேட்க
விட்டேத்தியாய் அம்மா சொன்னாள்
‘நம்ம ஒரு வருஷ கூலி என்று.. ‘
விலை தெரிந்தும் விடமுடியவில்லை..

வெள்ளை பொம்மையுடன் கலர் கனவில் இருந்தபோது
வெடியாய் கேட்டது அம்மாவின் அழுகை..
விதிர்விதிர்த்து விழித்துப் பார்க்க
விளக்கொளியில் வேரறுந்த மரமாய் அப்பா!
கதறியபடி அம்மா சொன்னாள்
‘ வெறகொடிக்க போனப்ப கரடி அடிச்சிடுச்சுனு… ‘

இப்பொதெல்லாம்
கரடி பொம்மை தொடும் நினைவு வருவதேயில்லை
கரடி தொட்ட அப்பாவை பார்த்ததனால்……

-jeyanthi
jsethu@qwest.com

Series Navigation

ஜெயந்தி சேது

ஜெயந்தி சேது