பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

சுப்ரபாரதி மணியன்


சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும்.

’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.

இதன் மூலமான மதச்சார்பின்மை பற்றி கருத்து வலுப்பட்டு பிரதிபலிக்கிறது. மதக்கலவரங்களில் மக்கள் சிக்குண்டு வேதனைப்படுகிறார்கள். அவன் கழுத்தில் தொங்கும் ஏசுநாதர் இதெல்லாம் கண்டு அலறுவார் என்று ஒரு வாசகம் ஓரிடத்தில் வருகிறது. அவை ஏசுநாதர் மட்டுமல்ல, பல்வேறு மத தெய்வங்களின் அரற்றலாயும் இருக்கும். இதற்கெல்லாம் ஆறுதலாக அமைபவை இந்நாவலில் இடம்பெறும் மகான்களும், அவதார புருஷர்களும்தான். வைகுண்டசாமி, மீட் அய்யர், மார்த்தாண்ட வர்மா, பப்புத் தம்பி, ராமன் தம்பி, அயோத்திய தாசப் பண்டிதர், குன்றக்குடி அடிகளார், ஜீவா போன்றோரின் வாக்குகளும் செயல்பாடுகளுமே மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. இவர்களின் மூலம் சாதியத்திற்கும், அரசிற்கும், வைதீகத்திற்கும், எதிரான எதிர்ப்புக் குரலாக இந்த நாவலின் மையம் தன்னை கட்டமைத்துக் கொள்வது விசேஷமானது. விடுதலை பெற்ற உண்மைகள் மனிதனின் இறுக்கங்களை,அடிமைத்தனத்தை விடுதலை செய்யும் என்பது தெளிவாகிறது. “சேர்வைக்காரன் சாமிய சிவனாக்கியது எவ்வளவு பெரிய ஆன்மிகத் தொண்டு….. அப்ப கிருஷ்ணனை ஏசுவாக்கினா பாராட்டுவீங்களா…. ஏசுதானே சர்வ வல்லமையுள்ள சர்வதேசக் கடவுள். அது அன்னிய மதம்” என்று விவாதிக்கிறார்கள்.

இந்த ஆவணங்கள் சேதுமாதவன் பலரை சந்திக்கச் சென்று சேகரிக்கிற தரவுகள் மூலம் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. வெறும் ஆவணங்களின் தொகுப்பாகவும் பெரும்பான்மை நாவலின் பகுதிகள் அமைந்துவிட்ட பலவீனமும் இதனால் வெளிப்படுகிறது. இது ஒரு வகை நாவல் தன்மையாகவும் கணிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சி.ஆர். ரவீந்திரனின் ‘கண்ணில் மின்னல்’ என்ற நாவலில் திருப்பூர் பற்றிய செய்திகளும், ஆவணங்களும், பத்திரிக்கை விவரங்களும் அப்படியே தரப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நகரம் பற்றிய சித்தரிப்பு தரப்பட்டிருக்கிறது.அந்த வகையிலே பலவகை ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலின் பெரும்பகுதி அமைந்துவிட்டிருக்கிறது. இதில் உலாவும் மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த அலுவல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. முத்து என்ற பெண் கதாபாத்திரம் மட்டும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. திருமணமான உறவு சகிக்க முடியாத்தாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கிற அவளின் முயற்சிகள் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சாதனாதியாக இந்த நாவலில் நுழையும் சேதுமாதவன் வெளியே வர முத்து போன்ற பெண்களும், ஆவணப்பதிவுகளும் உதவுகின்றன. மற்றைய கதாபாத்திரங்கள் வெறும் தட்டையாகத்தான் பிரதிபலிக்கிறார்கள்.

ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவல் முழு வடிவம் எடுக்கிற முயற்சியிலிருந்து கன்னியாகுமரியின் தொன்மக் கதைகள், வெவ்வேறு குரல்களாய் மகான்கள் தென்படுவது, நாடகப் பணியிலான ஒரு பகுதி, உரையாடலாய் தனிப் பகுதிகள், தனி உரையாடல்கள் போன்றவை அமைந்து தப்பிக்க வைக்கிறது. 800 பக்க நாவலில் மனித ஆளுமையோடும், பலவீனங்களோடும் மிகச் சொற்பமாக கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது பலவீனமாகும். சமகால அரசியலை முன் வைக்கும் மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல் என்ற வகையில் அதன் குரல் கரவத்திற்குரியது.

( மறுபக்கம்: பொன்னீலனின் நாவல் , ரூ 350, என்சிபிஎச் வெளியீடு, சென்னை )

விமர்சனம் : சுப்ரபாரதிமணியன்

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்