தீர்வு ஞானம்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சோதிப் பிரகாசம்


பாண்டிச் சேரி முழுவதும் ஒரே பரபரப்பு!

அரசு அதிகாரிகள், காவல் துறைத் தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், என அனைவரும் பதைபதைப்புடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு கேள்விக் குறி!

மக்களின் முகங்களிலோ வியப்புக் குறிகள்!

வானத்தில் ஹெலிகாப்டர்கள் வட்டம் இட்டுக் கொண்டு இருந்தன. இடம் மாறிப் பறந்து போய்க் கொண்டு இருந்தன காக்கை-குருவிகள்!

சாலை ஓரங்களில் காவலர்களின் அணி வகுப்பு! அவர்களின் கைகளில் பல் வேறு வகையான துப்பாக்கிகள்!

பாண்டிச் சேரியின் பரபரப்பு சென்னையையும் விட்டு வைக்க வில்லை.

சென்னை வீதிகளிலும் காவல் துறையினர் அணி வகுத்து நின்று கொண்டு இருந்தனர்.

‘பாண்டிச் சேரியில் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டு விட்டதாம்! சென்னையில் என்ன செய்யலாம் ? ‘

அதிகாரிகளிடம் இருந்து முதலமைச்சருக்குக் கேள்விகள் வந்து கொண்டு இருந்தன.

‘ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எக் காரணத்தை முன்னிட்டும் விடுமுறை கிடையாது ‘

என்று முதலமைச்சர் கூறி விட்டாராம்! வதந்திகள் பரவின.

பாண்டிச் சேரியிலோ கெடுபிடிகள் அதிகமாகிக் கொண்டு வந்தன.

‘என்ன ஆயிற்று ? ‘

‘விண்ணில் இருந்து கற்கள் விழப் போகின்றனவா ? ‘

‘விண் கலம் எதுவும் பாண்டிச் சேரியில் தரை இறங்கப் போகிறதா ? ‘

பாண்டிச் சேரி மக்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.

தொலைக் காட்சியில் செய்தி ஏதேனும் வரலாம் என்று தொலைக் காட்சிப் பெட்டியின் முன் பலர் தவம் கிடந்து கொண்டு இருந்தார்கள்.

பாண்டிச் சேரியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து தில்லிக்குமாகத் தொலைத் தொடர்புகள் பறந்து கொண்டு இருந்தன.

‘விரைவில் வந்து விடுவார்கள் ‘

என்று தங்களுக்குள் உயர் அதிகாரிகள் கிசு-கிசுத்துக் கொண்டார்கள்.

பட்டாளப் பிரிவுகள் கூட தயார் நிலையில் வைக்கப் பட்டு இருந்தனவாம்!

‘உள்ளூர்த் தீவிர வாதிகள் நுழைந்து விடலாமோ ? ‘

என்னும் அச்சம் ஒரு பக்கம்!

‘விண் வழியாகவும் மண் வழியாகவும் வெளி நாடுகளில் இருந்து பயங்கர வாதிகள் ஊடுருவி வந்து விடலாமோ ? ‘

என்னும் பதற்றம் மறு பக்கம்!

தில்லியில் இருந்து பாண்டிச் சேரிக்குச் செய்திகள் வந்தன—-

‘இதோ வந்து கொண்டு இருக்கிறார்கள் ‘ என்று!

‘செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டாம் ‘

என்று மற்றும் ஒரு செய்தி.

ஆங்காங்கே போர் விமானங்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது.

பாண்டிச் சேரியில் நிலவரங்கள் பதற்றம் அடையத் தொடங்கின.

திடிரென்று ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

அதன் உள்ளிருந்து அமெரிக்கக் காவல் துறை அதிகாரிகளும் இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகளும் இறங்கி வந்தார்கள்.

ஒரு ஹெலிகாப்டர் புறப் பட்டதும் இன்னொரு ஹெலிகாப்டர், மற்றும் ஒரு ஹெலிகாப்டர், எனப் பல ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிக் கொண்டு இருந்தன.

இறுதியில், அமெரிக்கக் காவல் துறையினரும் இங்கிலாந்துக் காவல் துறையினரும் அணி வகுத்து நின்று கொண்டு இருந்த ஒரு வட்டத்துக்குள் சொகுசு ஹெலிகாப்டர் ஒன்று வந்து இறங்கியது.

‘வந்து இருப்பவர் யார் ? ‘

என்னும் பதைப்புடன் கூடி இருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.

உள்ளே இருந்து முதலில் ஒருவர் இறங்கினார்.

‘:புஷ்! :புஷ்! ‘

என்று கூட்டத்தினர் இடையே முணுமுணுப்புகள் எழுந்தன.

இன்னொருவர் இறங்கியதும்

‘:ப்ளேர்! :ப்ளேர்! ‘

என்று முணுமுணுப்புகள் எழுந்தன.

ஜார்ஜ் ட:பிள்யு :புஷ்!

டோனி :ப்ளேர்!

‘இவர்கள் ஏன் பாண்டிச் சேரிக்கு வந்தார்கள் ? ‘

‘இவ்வளவு அவசரமாக முன் அறிவிப்பு இன்றி இவர்கள் ஏன் இங்கு வர வேண்டும். ‘

தொலைக் காட்சியில் கேள்விகள் எழுப்பப் பட்டு வந்தன.

அவர்களைப் பேட்டி காண்பதற்குச் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப் பட வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுப்பப் பட்டு வந்தன.

செய்தியாளர்களைத் தவிர்த்திட முடியாது என்பதை அறிந்த அதிகாரிகள் தில்லிக்குச் செய்தி அனுப்ப, தில்லி அதிகாரிகளும் பாண்டிச் சேரி அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளைக் கேட்க, இறுதியில் ஒரு சில செய்தியாளர்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்.

‘கேள்விகள் வேண்டாம்! நானே சொல்லி விடுகிறேன் ‘

என்றார் :புஷ்.

செய்தியாளர்கள் விட வில்லை.

‘முன் அறிவிப்பு இல்லாமல் திடிரென்று பாண்டிச் சேரிக்கு நீங்கள் வந்த காரணம் என்ன ? ‘

:புஷ் கொஞ்சம் இழுத்தார். அதன் பின்னர் பேசினார்:

‘அவசரம், மிக மிக அவசரம்! பல மாதங்களாக எங்களுக்குத் தூக்கம் இல்லை; நிம்மதியும் இல்லை. அதனால்தான் முன் அறிவிப்பு இல்லாமல் திடும் என வந்தோம். ‘

‘என்ன ஆயிற்று உங்களுக்கு ? ‘

‘ஈராக் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று எங்களுக்குத் தெரிய வில்லை; நிம்மதியும் இல்லை! ‘

‘நிம்மதியைத் தேடி வந்தீர்களா ? ‘

‘இல்லை! இல்லை! தீர்வுகளைத் தேடி வந்தோம். ‘பிரச்சனைகள் இல்லை; தீர்வுகள் இருக்கின்றன ‘ என்று கூறுகின்ற ஞானி ஒருவர் பாண்டிச் சேரியில் இருப்பதாக நாங்கள் கேள்விப் பட்டோம். ‘

டோனி :ப்ளேர் இடை-மறித்தார்:

‘பிரச்சனைகளுக்குள் தீர்வுகள் என்றும் பிரச்சனை இல்லாத தீர்வுகள் என்றும் அவர் கூறி இருந்தது எங்களுக்குப் பிடித்து இருந்தது. ‘

செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டார்:

‘ஏதோ தவறு நடந்து இருக்கிறது. எதையோ தவறாக நீங்கள் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். ‘

‘இல்லை! இல்லை! ‘

டோனி :ப்ளேர் கூறினார்:

‘இதோ பாருங்கள்! ‘

ஒரு புத்தகத்தை அவர் காட்டினார். உடன் அழைத்து வந்து இருந்த தமிழர் ஒருவரிடம் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

புத்தகத்தை அவர் படித்தார்:

‘புத்தகத்தின் பெயர், பின்னை நவீனத்துவம்! விடியல் வெளியீடு! ‘

வாசகம் பின்வருமாறு:

‘தீர்வு ஒன்று இருக்கும் போது அங்கே உண்மையில் பிரச்சனை என எதுவும் இல்லை.

பதில் ஒன்று இருக்கும் போது அங்கே உண்மையில் கேள்வி எதுவும் இருப்பது இல்லை.

அந்தத் தருணத்தில், தீர்வின் பகுதியாக இருக்கிறது பிரச்சனை. கேள்வியின் பகுதியாக இருக்கிறது பதில்.

பிரச்சனைகள் இல்லாத தீர்வுகள், கேள்விகள் இல்லாத பதில்கள் தவிர வேறெதுவும் எஞ்சுவதில்லை.

பதில்களே இல்லாத கேள்விகளை, தீர்வுகளே இல்லாத பிரச்சனைகளை நாம் கொண்டிருக்கிற நாட்களே மகிழ்ச்சியானவை! ‘

செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டார்:

‘ஏதோ ஃப்ரான்ஸ் நாட்டுச் சிந்தனை போல் தெரிகிறதே! ‘

டோனி :ப்ளேர் கூறினார்:

‘இருக்கலாம். ஆனால், ஈராக் பிரச்சனையில் எங்களுக்கும் ஃப்ரான்ஸுக்கும் இடையே நல் உறவு இல்லை. அதனால்தான் இந்தக் கட்டுரையின் ஆசிரியரைத் தேடி இங்கே வந்தோம். ‘

‘இதை எழுதியவர் யார் தெரியுமா ? ‘

செய்தியாளர்களைக் கேட்டார் :புஷ்.

செய்தியாளர்கள் விழித்தார்கள்.

‘உங்கள் ஊரில் ஒரு ஞானி இருக்கிறார். தீர்வுகளை மட்டும் வைத்து இருக்கின்ற ஒரு ஞானி அவர். சுருக்கமாகச் சொல்வது என்றால் அவர்தான் தீர்வு ஞானி! உங்களுக்கு அவரைத் தெரியாமல் இருப்பது வியப்புதான்! ‘

:புஷ் தொடர்ந்தார்:

‘எந்த ஞானியையும் சொந்த ஊர்க் காரர்கள் ஏற்றுக் கொண்டது இல்லை என்று ஏசு கூறி இருந்தது சரிதான் போலும்! ‘

‘யார் அவர் ? யார் அவர் ? ‘

செய்தியாளர்கள் பதைபதைத்தார்கள்.

‘அவர்தான் ரவிக் குமார்! உங்களுக்குத் தெரியாதா ? ரவிக் குமார்! மிகப் பெரிய ஞானி அவர்! ‘

எல்லோரும் ரவிக் குமாரைத் தேடினார்கள்.

‘தீர்வு என்று இருக்கும் போது பிரச்சனை இல்லை என்றுதானே நான் கூறினேன் ‘

என்று முணுமுணுத்த ரவிக் குமார் கொல்லைப் புறம் வழியாக எங்கோ ஓடிக் கொண்டு இருந்தார்.

பாண்டிச் சேரியில் பரபரப்புத் தொடர்ந்து கொண்டு இருந்தது.

‘தீர்வு இருக்கிறது; பிரச்சனை இல்லை ‘

என்று உலகம் முழுவதும் முணுமுணுப்புகள் கேட்ட வண்ணம் இருந்தன.

திடிர் திடிர் என ஆங்காங்கே உலகில் தீர்வு ஞானிகள் பலர் தோன்றிக் கொண்டும் இருந்தனர்.

ரவிக் குமாரோ ஓடிக் கொண்டு இருந்தார். அவரது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டு இருந்தன:

‘பதில்களே இல்லாத கேள்விகளை, தீர்வுகளே இல்லாத பிரச்சனைகளை நாம் கொண்டிருக்கிற நாட்களே மகிழ்ச்சியானவை! ‘

21-10-2003

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்