கைகளிருந்தால்…

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

துவாரகன்



எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்

எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்

கைகளில்லாவிடில்
எல்லாவற்றுக்கும் எல்லாநேரமும்
யாரையும் எதிர்பார்க்கக்கூடும்

ஒரு பயணத்தில்
கையிரண்டும் இல்லாமல்
மிகப் பிரயத்தனப்பட்டாள் அவள்.
ஆனாலும்
அவள் சிரித்தாள்
நட்போடு உரையாடினாள்

மனிதராயிருக்கிற மனிதருக்கு மத்தியில்
இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆதலால்
அவள் உயிரோயிருக்கிறாள்.
03/2011

Series Navigation

துவாரகன்

துவாரகன்