This entry is in the series 20040219_Issue

— பா.சத்தியமோகன்


அவள் முணுமுணுக்கும் பாடல் எது
செவி கொடுத்தாலும் உணர இயலாது வரிகள்
அவை அன்பின் வெதுவெதுப்பால் ஆனவை.
நிச்சயம் கூறலாம்
அச்சொற்கள் ஆனந்தம் எதிரொளிக்கும் கண்ணாடி
அவள் அடுக்கும் பொம்மைகள்
கரடியின் மேல் குதிரை
ஒட்டகச்சிவிங்கி மேல் பாயும் குதிரை
சீறும் சிங்கம் தாங்கிய எடை மிக்க யானை
படுத்துக் கிடக்கும் நரி
ஓயாமல்
அவள் செல்லோஃபனால் ஒட்டப் பார்ப்பது
சகல மிருகங்களையும்
பாடலின் நடுவே இத்தனை காரியங்களா
வியப்போம்
அவளோ
அன்னையின் உடுப்பு தரித்த சின்னஞ்சிறு மனுஷி
மழையின் மகிழ்ச்சிக்கு சமமானது
மிருகங்களுக்கு அவள் அளிக்கும் விளையாட்டும் பாடலும்
நான் அவள் ஆட்டம் கலைக்கா தகப்பன்
ஒரே ஒரு கவலை
இன்னும் சில நாளில் பள்ளி சேர்க்கப்படுவாள்.
****
cdl_lavi@sancharnet.in

Series Navigation