This entry is in the series 20030302_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஒரு புராதன நகரம்
தோண்டி எடுக்கப்பட்டது
ஒரு மறைந்துபோன நதியை
கண்டுபிடித்தார்கள்
கடல் கொண்டிருக்கக்கூடும்
கொஞ்சம் பூமியையென்று அனுமானித்தார்கள்
கண்டெடுத்த எலும்புக்கூடுகளிலிருந்து
ஆற்றங்கரை நாகரிகம் அழிந்ததை முடிவு செய்தார்கள்
முதுமக்கல் தாழி என்றார்கள்
சிவனை வழிபட்டிருக்கலாம் என யூகித்தார்கள்
இன்றும்
என்னென்னவோ சொல்லிக்கொண்டே வருகிறார்கள்
காட்சி மாறுகிறது
கதை போல
உண்ணாவிரதம் இருக்கிறார்
ஒரு நடிகர்
உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்
ஒரு இயக்குனர்
பந்தாடுகிறார்கள் அரசியல்வாதிகள்
எல்லோரையும்
கானல் பரத்துகிறது
காவிரிச் சமவெளி
துக்கம் கொண்டாடுகிறான்
கவிஞன்.

***

Series Navigation