This entry is in the series 20110430_Issue

ந.மயூரரூபன்



நிறங்கருத்த குழிக்குள்
உங்கள் தலைகள் ஒளிந்திருக்க
குழிவிளிம்பின் நீற்றுப்படுகையில்
மோதியலைகின்றன சுயம்செத்த உடல்கள்.
ஆணவம் ஒழுகும் உங்கள் குழியால்
கருவனம் ஒன்று மிதக்க
தலைகள் ஆழ அமிழ்ந்துபோகின்றன.

கருவனக்குழிகள் நிறையும் பாதையே
என்கால்களின் கீழ் திறந்துகொள்கிறது.
மேலிமை மடல்களில்
தீவட்டியேதுமற்ற நீற்றுப்படுகையின்
துக்கவயிற்றுப்பாரம் ஏறிக்கொள்கிறது.

இருகைகளிலும்
குழந்தைகள் தொங்கிக்கொள்கிறார்கள்.
அந்தரத்திலாடும் கால்களை
கருவனத்தின் நாக்குகள் தீணடப்பாய்கின்றன.
காற்றெரிய குழந்தைகள் அலறுகின்றன.
அலறலின் வெந்த மணத்தில்
எனதுடல் மேலிமை நீற்றுப்படுகையில்
தலைசரியக் கவிழ்ந்துபோகிறது.

கருவனத்தின் இலைக்கடலில்
குழந்தைகள் தத்தளித்தபோது
எனது தலை
உங்கள் குழிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறது.
-ந.மயூரரூபன்

Series Navigation