This entry is in the series 20101227_Issue

கோமதி நடராஜன்


அடுத்த விடியலைக்
காண இல்லாமல்
சொடுக்கும் நொடிக்குள்
காணாமல் போகும்
நல்ல ஆத்மாக்களே!
நீங்கள் விட்டுச் சென்றது
தங்கமென்றால் தலை தெரிக்க
ஓடி வந்து தட்டிச் செல்வோம்
வெள்ளியென்றால் வெறி நாயெனப்
பாய்ந்து வந்து வெட்டிக் கொள்வோம்,
கத்தைப் பணமென்றால்
அஸ்தி கரையும் முன்
அள்ளிச் செல்வோம்,
மாறாக
நீங்கள் விட்டுச் சென்றது
சிரித்த முகமென்றால்
சீந்த ஆள் இருக்காது ,
பரந்த மனமென்றால்
பங்கு போட ஆள் வராது ,
அழியும் சொத்துக்களைச்
சாத்தான் கூடத் தருவான்
தந்த வேகத்திலேயே
திருப்பியும் எடுப்பான்,
அவற்றை நாம் மாண்டால்
விட்டுச் செல்லலாம்
மீண்டால் மீட்டுக் கொள்ளலாம் ,

ஆனால் உம் போல்
நல்ல ஆத்மா தேடி
ஆண்டவன் ஆசியுடன்
அளித்த நற்குணங்களை
இனி எடுக்கும்
ஜென்மங்களுக்காக
எடுத்துச் செல்வீர் உம்மோடு
அவற்றை
விட்டுச் செல்லாதீர் மண்ணிலே,
அவை
வீணாய்ப் போகும் மண்ணிலே.

Series Navigation