தூக்கம்
பிரியா ஆர்.சி.

மூடின கண்களை முதலீடாக்கி
உறக்கத்தை உழைப்பாக்கி
அமைதியைத் தேடும் ஆராய்ச்சி
வாழ்வில் மூன்றில் ஒருபங்கு
அனைவரும் செய்யத்தவறாத
ஓய்வைத் தேடும் ஓட்டம்
ஆசைகளை நிறைவேற்றி
உள்ளுணர்வை வெளிக்கொணர்ந்து
உண்மைகளை பிரதிபலிக்கும்
கனவுக் கண்ணாடிகள்
சாதி மத சச்சரவின்றி
இன மொழி பேதமின்றி
சமரசம் உலாவும் உன்னத தேசம்
நாள் தெரியாத அரங்கேற்றத்திற்கு
தினந்தோறும் தவறாமல் ஒத்திகை!
rcpriya@yahoo.com
தூக்கம்.
பா வீரராகவன்

அப்பா யின்னும் தூங்குறா
அம்மா ஏனோ வைய்யலை
என்னை யுமே தள்ளலை
எழுப்பித் தொலை சொல்லலை
நட்ட நடு ரூமுலே
நன் னாவே தூங்குறா
கிட்டப் போயி நின்னேனே
எட்டிப் போன்னு சொல்லலை
சுத்தி சுத்தி பெரியவா
எத் தனையோ பேசறா
சத்தம் மட்டும் கேக்கலை
அப்பா யின்னும் தூங்கறா
அத்தை எல்லாம் அழுவுறா
பாட்டி கூட கத்தறா
அம்மா மட்டும் என்னையே
சேத்துச் சேத்துக் கொள்ளறா
அப்பா யிப்போ சாமியாம்
சாமி எல்லாம் தூங்குமா
கண்ணை திறந்துப் பாக்குமே
காசு நிறைய கொடுக்குமே
அப்பா நல்ல அப்பா
சாமி நல்ல சாமி
அப்பா தானே சாமி
சாமி தானே அப்பா.