பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

டெனிஸ் ஓவர்பை


வானவியல் துறை பெரும்பாலும் இருதயமற்ற ஒரு அறிவியல் துறையாகத் தான் இருந்து வந்தது. இதில் இருட்பொருள்களும் (dark matter) மனத்தால் அறிய முடியாத ஆழங்களும், அல்லது வெடிக்கும் நட்சத்திரங்களுமே இருந்துவந்தன. ஆனால், இன்றைக்கு வானவியலாளர்கள் காபி குடிக்கும் காலை நேரத்திலிருந்து இரவு உணவு அருந்தும் வரைக்கும் பேசும் எல்லா விஷயங்களும் மனிதர்களை அல்லது உயிர்களைப் பற்றியே இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு அறிவியல் மாநாட்டில், ‘வானவியலின் எதிர்காலம் ‘ என்ற தலைப்பில் மேற்கு ரிஸர்வ் பல்கலைக்கழகத்தில் இது பற்றி பேசப்பட்டது.

பெரும் விவாதத்துக்குரிய கருத்தான ‘மனிதக்கொள்கை ‘ (anthropic principle) என்ற கோட்பாட்டை அடிப்படையாய்க் கொண்டு பார்க்கும்போது, பிரபஞ்சதின் ஒரு சில குழப்படியான குணாம்சங்களைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால், அந்த சமன்பாடுகளுக்குள் மனிதர்களாகிய நம்மையும் இருத்திக்கொள்ளவேண்டும். இந்த பிரபஞ்சம் உயிர்வாழ வசதிகளைக் கொண்டது. இல்லையென்றால் நாம் இதனைப் பற்றி ஆச்சரியப்பட இருக்க மாட்டோம்.

இந்தக் கேள்விக்குக் காரணமான குணாம்சங்கள் என்பவை இயற்பியலிலும் வானவியலிலும் அடிக்கடி வரும் சில எண்கள். உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்த பொருள்களின் எடை , இந்த பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் ஆகியவை. இவைகளை எந்த ஒரு அறிந்த தேற்றத்தாலும், நிரூபிக்க முடியவில்லை. (இன்னும்). இவைகள் கடவுளின் கையில் இருக்கும் வண்டியோட்டும் சக்கரம் போன்று, ஆச்சரியகரமாக உயிர்வாழ அனுமதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

இன்றைக்கும் இருக்கும் இந்த எண்களை கொஞ்சம் அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் எந்த எண்ணிலாவது மாற்றினால், இந்த பிரபஞ்சம் ஒரு கருந்துளையாகவாவது அல்லது ஆவியாகவோ காணமால் போய்விடும். உயிரியல் என்ற ஒன்றே இருந்திருக்காது.

பிரபஞ்சம் என்பது ஒன்றே ஒன்று என்றால், ஏன் அது இப்படி அதிர்ஷ்டக்கார பிரபஞ்சமாய் இருக்கவேண்டும் என்று அறிவியலாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.

இந்த ‘மனிதக்கொள்கை ‘ இன் ஆதரவாளர்கள், நம் பிரபஞ்சம் போல பல கோடி பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்றும், பல பிரபஞ்சங்கள் அதனதன் தோற்றத்தின் போது ஒரு வாய்ப்பின் காரணமாக வெவ்வேறு முறையில் உருவாகலாம் என்றும் வாதிடுகிறார்கள். சமீபத்தில் பெரு வெடிப்பு சம்பந்தமான இன்னொரு தேற்றமான ஊதிப்பெருகும் கொள்கை inflation பல்லாயிரகோடி ஊதிப்பெருக்கங்களில் ஒரு ஊதிப்பெருக்கமே நம் பிரபஞ்சத்தில் நடந்த பெருவெடிப்பு என்றும், பிரபஞ்சங்கள் தோன்றும் கடலில் வெடிக்கும் ஒரு குமிழிகளில் ஒரு குமிழியே நம் பிரபஞ்சம் என்றும் கூறுகிறது. அதே போல ஸ்டிரிங் தியரி என்று அழைக்கப்படும் கயிறுக் கோட்பாடு (எல்லாவற்றையும் விளக்கக்கூடிய தேற்றமாக இதன் ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகிறது) அதனுள் எண்ணற்ற சமன்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் சமன்பாட்டின் ஒவ்வொரு விடையும் ஒரு பிரபஞ்சத்தை வெவ்வேறு பரிமாணங்களுடன் உருவாக்க வல்லது. அத்தனை சமன்பாட்டு விடைகளில் ஒரு விடையே நாம் வாழும் இந்த பிரபஞ்சம். விடைகளில் ஒரு சிலவற்றையே உயிர் வாழ வசதியோடு தோற்றுவிக்கும்.. அப்படிப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் நல்ல தட்பவெப்பம் கொண்ட பூமியில் நாம் இருக்கிறோம்.

.

பல அறிவியலாளர்கள் இப்படிப்பட்ட ‘மனிதக்கொள்கை ‘ பம்மாத்தானது அல்லது அலட்டலானது என்று கருதுகிறார்கள். இந்த கருத்து வெறும் தத்துவமே தவிர அறிவியலல்ல என்றும் வாதிடுகிறார்கள். பலர் இதனை, பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாவற்றையும் முன் கூட்டியே கண்டறியும் ஐன்ஸ்டானின் கனவுக்கு துரோகம் செய்வது என்றும் கருதுகிறார்கள்.

இஇந்தக் கோட்பாடு ஒரு விஷக்கிருமி என்றும் இதை விட்டொழிக்க வேண்டும் என்றும் டாக்டர் டேவிட் க்ராஸ் மாநாட்டிலேயே புகார் செய்தார்.

டாக்டர் குரோஸ் அவர்கள் கால்வி தியரட்டிகல் இயற்பியல் அமைப்பில் சாண்டா பார்பரா கலிபோர்னியாவில் இயக்குனராக இருக்கிறார். இவர் இந்த கொள்கையை ஆராய ஒரு கமிட்டி ஏற்படுத்தவும் அதன் தலைமையாளராக இருக்கவும் சம்மதித்தார்,

‘என்னைத் தேர்ந்தெடுக்க காரணம், நான் இந்த மனிதக்கொள்கையை வெறுக்கிறேன் என்பதால்தான் ‘ என்று வெளிப்படையாகக் கூறினார்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரான டாக்டர் ஸ்டாவன் வெயின்பர்க் அவர்கள், இந்த கமிட்டி முக்கியமான வேலை செய்ய இருக்கிறது என்று வாதிடுகிறார். 1977இல் இவர் எழுதிய ‘முதல் மூன்று நிமிடங்கள் ‘ என்ற புத்தகத்தின் காரணமாக மிகவும் புகழ் பெற்றவர். ‘இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளத் தொடங்கினால், இந்த பிரபஞ்சமே பொருளற்றதாக தோன்றுகிறது ‘ என்று கூறுகிறார். டாக்டர் வெயின்பர்க் அவர்கள் இந்த ஆன்த்ரோபிக் பிரின்ஸிபிள் என்னும் மனிதக்கொள்கையை அரைமனதாக ஏற்றுக்கொண்டபின்னர், இது ஒரு இந்த பிரச்னையை தீர்க்க ஒரு தயக்கத்துடன் ஒப்புக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்.

காஸ்மோலஜிகல் கான்ஸ்டண்ட் என்னும் (cosmological constant) பிரபஞ்ச நிலை எண், வெற்று வெளியில் (empty space) இருக்கும் சக்தி (energy) எவ்வளவு விலகும் அளவைக் (cosmic repulsion)கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. வெற்றுவெளியில் இப்படி சக்தி பொங்கிக்கொண்டிருக்கும் என்பதை குவாண்டம் தியரி ஏற்கெனவே கூறியிருக்கிறது. வானவியலாளர்கள் கடந்த சில வருடங்களில் இப்படிப்பட்ட விண்வெளி விலகுச் சக்தி பிரபஞ்சம் தோன்றியக் காலத்திலிருந்து இந்த பிரபஞ்சம் விரிவடைந்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த எண்ணை கணக்கிட தேற்ற வழியில் சென்றால், (லாம்ப்டா என அழைக்கப்படுகிறது இந்த எண்) அதன் மூலம் கிடைக்கும் எண், வானவியலாளர்கள் வானத்தை அளந்து கிடைக்கும் எண்ணை விட 10 power 60 (பத்துக்கு அருகில் 60 பூஜ்யங்கள்) அளவு அதிகமானதாக இருக்கிறது.

இதன் காரணமாக மகா வெறுப்படைந்த இயற்பியலாளர்களின் உதாரணமாக டாக்டர் வெயின்பர்க் அவர்கள் இனிமேல் நான் காஸ்மாலஜிகல் எண்ணைப் பற்றி எந்த விதமான கட்டுரையும் படிக்க மாட்டேன் என்று சிரிக்கிறார்.

1989இல் எந்த விதமான காஸ்மாலஜிகல் எண்ணும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், டாக்டர் வெயின்பர்க் அவர்கள் மனிதக்கொள்கையை கொண்டு இந்த எண்ணின் அதிகபட்ச அளவு` குறைந்தபட்ச அளவு இரண்டையும் குறித்திருந்தார். இது தேற்றத்தின் மூலமாக நிர்ணயம் செய்யப்படாமல், ஒவ்வொரு பிரபஞ்சத்துக்கும் ஒவ்வொரு எண் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியாயின் நமது பிரபஞ்சத்தின் எண் வெறும் சுற்றுச்சூழல் விளைவாக இருக்கலாம். ஆகவே இதனைக் கண்டுபிடிக்க கஷ்டபடுவது என்பது சென்னையில் இந்த மாதம் எவ்வளவு மழை பெய்யும் என்று நிர்ணயிக்க முயல்வது போலத்தான் என்று கூறுகிறார்.

டாக்டர் வெயின்பர்க் தன்னுடைய கட்டுரையில், லாம்ப்டா எண் (காஸ்மாலஜிகல் கான்ஸ்டண்ட்) மிகவும் பெரிய எண்ணாக இருக்க முடியாது என்றும், அப்படி இருந்தால், அண்டங்களும் பேரண்டங்களும் உருவாகியிருக்க முடியாது என்றும், நாம் இங்கே இருப்பதாலேயே அந்த எண் மிகவும் சிறியதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ல இருள்சக்தி (dark energy) நமது பிரபஞ்சத்தின் விரிவை டாக்டர் வெயின்பர்க் அவர்கள் சொன்ன வீச்சுக்குள் கட்டுப்படுத்துகிறது. இது ஓரளவுக்கு மனிதக்கொள்கையை வெற்றியடையச் செய்கிறது.

டாக்டர் வெயின்பர்க் அவர்கள் இந்த மனிதக்கொள்கை என்பது ‘வரலாற்றுரீதியான உணர்வு, நம் அறிவியலாளர்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய ஓர் உணர்வு ‘ என்று கூறுகிறார்.

‘நமது நம்பிக்கை எல்லாவற்றையும் விளக்குவது. அதில் முன்னேற்றதின் ஒரு படி, நாம் எதனை அடிப்படையாக விளக்கமுடியும் எதனை விளக்க முடியாது என்று கற்றுக்கொள்வது ‘ என்று கூறுகிறார்.

மற்ற அறிவியலாளர்கள், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் அலெக்ஸ் விலென்ஙின் அவர்கள் ஸ்டேடிஸ்டிக்ஸ் மற்றும் வாய்ப்புக்களை வானவியலுக்கு பொறுத்திப்பார்க்கும் ஒரு முறையே இந்த மனிதக்கொள்கை என்று கூறுகிறார். இந்த சமன்பாட்டுக்குள் மனிதர்களாகிய நம்மையும் கொண்டுவந்துவிடவேண்டும் என்றும் கூறுகிறார். இயற்பியலின் பின்னடைவு என்று பார்க்காமல் முன்னேற்றம் என்று இந்த மனிதக்கொள்கையை பார்க்கவேண்டும் என்று டாக்டர் ஜான் பீகாக் (எடின்பர்க் பல்கலைக்கழகம்) கூறுகிறார். ஆயிரக்கணக்கான பிரபஞ்சங்கள் தோன்றுவதற்கும் அவைகளுக்குள் வெவ்வேறு குணாம்சங்கள் இருப்பதற்கும், அடிப்படையில் ஒரு இயங்கி இருக்கவேண்டும் என்றும், அதனை காஸ்மிக் மரபணு செய்தியாக வகைப்படுத்தலாம் என்றும் கூறுகிறார்.

‘இன்னொரு புதிய இயற்பியல் உருவாகிறது ‘ என்று டாக்டர் பீகாக் கூறுகிறார்.

ஆனால் டாக்டர் குரோஸ் பேசும் முறை வரும்போது, இந்த மனிதக்கொள்கையின் சட்டதிட்டங்கள் வரைமுறைக்குள் அடங்காதவை என்று கேள்வி எழுப்பினார். எந்த குணாம்சங்கள் ஒரு பிரபஞ்சத்துக்கும் இன்னொரு பிரபஞ்சத்துக்கும் மாறக்கூடியவை ? எவை ஒரே நேரத்தில் மாறக்கூடியவை ? இவைகள் எந்த அளவுக்கு மாறக்கூடும் ? ‘உயிர் ‘க்கு எது தேவையானது ?

இந்த மனிதக்கொள்கையின் கணக்குக்கள் சமன்பாடுகள் அடிப்படையில் குழப்பமானவை மற்றும் நிச்சயமில்லாதவை என்றும் கூறினார். இதன் விளைவாக இந்த கொள்கையை தவறென்று நிரூபிப்பது கடினம் என்று கூறினார். அவரது முக்கியமான எதிர்ப்பு, ‘மிகவும் உணர்வுப்பூர்வமானது ‘ என்று வாதிட்டார். இயற்பியலின் சட்டங்களை வெறும் விண்ணின் தட்பவெப்பத்துக்கு தகுந்தாற்போல மாறுவது என்று குறிப்பிடுவது தோல்வியை ஒப்புக்கொள்வது என்றும், மிகவும் கடினமான கணிதத்தை எடுத்து பிரச்னைகளை தீர்ப்பதிலிருந்து மக்களை திசை திருப்புவது என்றும், இது மதவாதிகளின் நாற்றம் அடிப்பது என்றும் (கடவுளின்) புத்திசாலித்தனமான கட்டுமானக் கோட்பாட்டை(intelligent design) ஆதரிப்பது போலவும் உள்ளது என்றும் பலத்த கைதட்டலுக்கு இடையே கூறினார். வெறும் குருட்டாம்போக்கினால் மட்டுமே இப்படி ஒரு சிக்கலான பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கமுடியாது என்று கூறும் உருவாக்கத்தேற்றக்காரர்களை இதன் மூலம் குறிப்பிட்டார்.

கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் வானியல் இயற்பியலாளராக இருக்கும் டாக்டர் லாரன்ஸ் கிராஸ் அவர்கள் இந்த மாநாட்டை ஏற்படுத்தியவர். இந்த கமிட்டியை உருவாக்கியவர். அவர் இந்த மனிதக்கொள்கையை ‘இயற்பியலாளர்களுக்கு வேறு வேலை இல்லாதபோது பொழுதுப்போக்க உருவான வழி ‘ என்று குறிப்பிட்டார். ஒஹையோ மாநிலத்தில் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று கூறும் பாடப்புத்தகங்களை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்ற டாக்டர் கிராஸ், மனிதக்கொள்கையை கூறுபவர்கள் கடவுள் இந்த உலகத்தை நாம் இருக்கத் தகுதியானதாக இருக்கப்படைத்தார் என்று கூறுவது போல உள்ளது என்று கூறினார்.

டாக்டர் வெயின்பர்க் அவர்கள் பதில்சொல்லும்போது, இந்த மனிதக்கொள்கை உண்மையிலேயெ ஒரு அறிவியல் அல்லவென்றும், மாறாக, எதிர்கால அறிவியல் எப்படி இருக்கும் என்று ஊகம் செய்வது போன்றது என்றும் கூறினார்.

நம்மிடம் வினோதமான சில எண்கள், காஸ்மாலஜிகல் நிலை எண் போல இல்லாமல் இருந்திருந்தால் இதனைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம் ‘ என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமை நம்மை ஒரு சீட்டுக்கட்டு ஆட்டத்தில் துருப்புச் சீட்டு கிடைத்த ஒருவன் சிந்திப்பது போன்றது என்று கூறினார். இது வெறும் குருட்டாம்போக்காக இருக்கலாம். ஆனால், ‘ஒருவேளை இந்த சீட்டைக்கொடுத்த ஆள் நமக்கு நண்பனா ? ‘ என்று சிந்திப்பது போன்றது. இது நம்மை மதவிசாரங்களுக்கு கொண்டு சென்று விடுகிறது ‘ என்று பலத்த சிரிப்புக்கிடையே கூறினார்.

உண்மையில் இந்த மனிதக்கொள்கை ‘ இந்த பூமி ஏன் அழகாக இருக்கிறது என்பதற்கு ஒரு அழகான மதச்சம்பந்தமில்லாத விளக்கம் ‘ என்று இவர் கூறினார்.

பலர் முன்வந்து பேச வந்தனர். டாக்டர் குரோஸ் இந்த விவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்தார். ‘இங்கு பல மாறுபட்டக் கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் இந்த காஸ்மாலஜிகல் நிலை எண் மிகச்சிறியதாக இருப்பதால் மனிதக்கொள்கை மட்டுமே இதனை சரியாக எடுக்கும் என்று கூறினர். ஆனால் பழைய முறையில் இந்த காஸ்மாலஜிகல் நிலை எண்ணை விளக்க, கண்டறிய ஒரு வழி இருந்தால், இந்த மனிதக்கொள்கைக்கே நாம் வரவேண்டியதில்லை ‘

டாக்டர் வெயின்பர்க் அவர்கள் இறுதியாகப் பேசும்போது, அப்படிப்பட்ட ஒரு வழமையான முறையில் இந்த நிலை எண்ணை விளக்க கண்டறிய நேரம் கடந்துவிடவில்லை என்றும், நான் அப்படிப்பட்ட ஒரு வழிமுறை இருக்கும் என்ற நம்பிக்கையோடேயே இருக்கிறேன் என்றும் கூறினார். ஆனால், நேரம் செல்லச் செல்ல வெவ்வேறு சாத்தியங்களை நாம் ஆராய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட ஒரு சாத்தியக்கூறே இந்த மனிதக்கொள்கை என்றும் அவர் கூறினார்.

நன்றி – நியூயார்க் டைம்ஸ்

Series Navigation

டெனிஸ் ஓவர்பை

டெனிஸ் ஓவர்பை