நாங்கள் பூக்களாக இருக்கிறோம்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கே.பாலமுருகன்


கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்
வாழ்ந்தே பழகிவிட்டோம்!
எங்கள் வீதிகளின்
மரங்களெல்லாம் பேசுகின்றன!
நாங்கள் நடந்து வருகையில்
கிளைகளால் உரசி
எங்களை தேற்றுகின்றன!

எங்கள் பறவைகள்
உறக்கத்திலும் சிறகுகளை
முடக்குவதில்லை!
சேற்றுக் குளங்கள்
எங்களின் தாய் பூமியாக
இருந்து வருகின்றன!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!

எங்கள் சாக்கடையிலும்
தங்க மீன்கள்தான்!
சிரிக்கின்றன பேசுகின்றன!
நாங்கள் கடவுள்களை
வணங்குவதில்லை. . .
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்
படையலுக்குச் சென்றதில்லை!

எங்கள் மரங்கள்
எங்களை உதிர்த்ததில்லை!
என்ன ஆச்சர்யம்?
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!

கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்