உள்ளபடி

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

எஸ்ஸார்சி



அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று யாரால் சொல்லமுடியும். ஒருகாலத்தில் பேருந்தே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிராமத்திலிருந்து தான் அவன் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் சென்று படித்தான். அன்றைய அந்த அண்ணாமலைப்பல்கலைக்கழகம் என்று சொன்னால் ரணப்பட்டுப்போன நல்ல மனதிற்குக்கொஞ்சம் ஆறுதலாக இருக்குமோ என்னவோ. எழுதவும் படிக்கவும் தெரியாத அவன் பெற்றோர் அவனை சிதம்பரம் போய்ப்படி என அனுப்பி வைத்தார்கள். புரட்சிக்காரன் நந்தன் காலடி பட்ட கந்தக பூமிதானே இந்த சிதம்பரம்..
தாய்மொழியில் முதுகலைவரைப்பட்டம் வரை அவன் அண்ணாமலையிலேயே பயின்றான். கல்லூரி மாணவர்களில் ஆசிரியர்களில் என்று எத்தனையோ நண்பர்கள் அவனுக்கு அங்கே ஆகிப்போனார்கள்.
தமிழ் நிலத்தில் இந்தி மொழியை வேண்டுமென்றே திணித்துத் தமிழுக்கு எதிராக வடக்கத்தியர்கள் வரட்டுத்தனமாக நின்றபோது மொழிக்காக ஒரு யுத்தமே இங்கே நிகழ்ந்துபோனது. அதனில் பலியாகிப்போனோர் ஏராளம். பாதிக்கப்பட்டோரும் உண்டு. ஒரு நுண் அரசியல் அது ஆம் அப்படி எல்லாம்தான்.
இந்தியைத்திணிக்கிறேன் பார் என்று சொல்லி அன்றைய டில்லி அரசாங்கம் இரண்டு மாங்காய்களை ஒருகல்லில் அடித்தது. . அதனில் ஒன்று, திராவிடம் திராவிடம் என்று சொல்லிக்கொள்வதும் அதற்காக வரிந்து கட்டிப் பேசுவதும் செய்கிறாயே இங்கே கண் முன்னால் உன் தமிழக எல்லையோடு அது சுருங்கிப்போவதைப்பார் என்கிறபடி, மற்றொன்று பொதுவுடமை பொதுவுடமை என்று ப்பேசித்திரியும் ஆந்திர மலையாள தமிழ்க்காரர்கள் ஒன்றாகி உருட்டிக்கொண்டு மேலே எழுந்து வந்து யாரும் இந்தப்பக்கத்தில் அரசியல் வியாபாரம் பண்ணாமல் தடுத்துவிடுவது.
அதுவும் மனிதருள் மாணிக்கத்தின் உழைப்பாயிற்றே. எப்படி வீணாய்ப்போகும். ஆமாம் ஆட்சி கிடைத்தது. யாருக்காக இருந்தால்தான் என்ன. எல்லாவற்றிற்கும் இங்கு ஒரு விலையொன்று உண்டு என்பார்கள். அது மட்டும் இல்லாமல் எப்படிப்போகும்.
பேரறிஞர் அந்த மார்க்சு சொன்னபடி மனித உழைப்பு மட்டும் எப்போதும் வீண்போவதில்லை. யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். மார்க்சீயம் அமுல் ஆகும் ஒரு நாட்டில் ஒரு சமூக சிந்தனையாளன் மீண்டும் அங்கே தோன்றிவிடத்தான் முடியுமா. அது நிற்க.
அண்ணாமலையில் பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மத்தியில் ஆள்வோரின் இந்தி மொழி த்திணிப்புக்கு எதிராகத்தான்.. நீக்குப் போக்கோடு நடந்து கொண்டிருந்தால் நமக்கு இந்தியும் தெரிந்திருக்கும் பெரியகட்சிக்காரர்களுக்கு ஆட்சியும் இங்கே இன்னும் கொஞ்சகாலம் கூடவே ஔடியிருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
மத்திய சர்க்காரின் ரயில் நிலையம் தபால் நிலையம் என்று பரிதாபமாய் இந்தியில் எழுதிக்கொண்டு தொங்கிய பலகைகள் எல்லாம் இலவசமாய்ச்சாலையிலே கிடைத்த கருப்புத் தாரைப் பூசிக்கொண்டன. அவரவர் சட்டைப்பையில் இந்தி எழுத்து அச்சடித்த ரூபாய் நோட்டுக்கள் மட்டும் பத்திரமாகத்தான் இருந்தன என்பது வேறு.
அண்ணாமலையில் போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த மாணவன் ராசேந்திரனை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். அந்த ராசேந்திரனின் சவ அடக்கம் பரங்கிப்பேட்டையில் நிகழ்ந்தபோது அதனில் உருக்கமாய் அஞ்சலி உரை ஆற்றினான். இரங்கல் கவிதையொன்றும் வாசித்தான். மொழிப்போரில் கருகிப்போன ராசேந்திரனின் ஆளுயர ச்சிலை இன்றைக்கும் அந்தக்கல்விக்கூட வளாக வாயிலின் துவக்கத்தில் நின்றுகொண்டு அன்று நிகழ்ந்துபோய்விட்ட வரலாறு சொல்வதை எல்லோரும் பார்த்தும் இருப்போம்.
கவிதை அவனுக்கு இயல்பாய் வந்தது. அதற்காக அவன் தன்னை வருத்திக்கொண்டதில்லை. தன் மக்கள் பேசும் மொழியில் அவன் கவிதை சொன்னான். கவிதையில் அது புதிய தடம் என்று வரவேற்பு பெற்றது. அவன் பெயராலேயே அதனை அழைத்தார்கள். தத்தம் சொந்த பந்தங்கள் எளிய மக்கள் பேசும் மொழியில் புதுக்கவிதை சொல்ல வந்த இந்நிலத்துக் கவிஞர்கள் எல்லோர்க்கும் அவன் முன்னோடி ஆனான்.
நாடே அவன் கவிதைப்பாணியை த்தெரிந்து போற்றியது. எங்கிருந்து எல்லோமோ அவனுக்கு அழைப்பு வந்தது. பாராட்டுக்கள் சேர்ந்தன. அவனை அழைத்த அந்நகருக்கெல்லாம் அவன் போய் வந்தான். நாடு முழுதும் சுற்றி வந்து புதுக்கவிதை சொல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியது.
கடல் கடந்து சிங்ப்பூருக்கும் கூடப் போய் வந்தான். அவனுக்கு நேர்மையாய்ப் புகழ்ச் சேர்ந்தது. பொருளுக்கு பஞ்சம் என்று வந்தது இல்லை.
தான் வாழும் நகரில் இலக்கிய பிரக்ஞைக்காய் இயக்கம் கட்டினான். கண்ணுக்குத்தெரிந்த படைப்பாளர்களையெல்லாம் மெய்யாகவே ஊக்கப்படுத்தினான். குழம்பிப்போய் நின்ற இளைஞர்கள் அவனால் பாதை தெரிந்துகொண்டார்கள்.
பாசம் பிணைப்பாகியது. படைப்பாளி என்போன் எங்கும் ஒரேசாதி என்று அவன் தோழர்கள் எல்லோர்க்கும் கற்பித்தான்.
அவன் செடியின் கொடையாய் மட்டுமே பூக்கும் அந்த மலரைப்பார்த்தவன், மலரைக்கொய்யாது அச் செடியிலே பறிக்காமல் இருக்க வைத்தும் அழகு பார்த்தவன். தன் வீட்டுத்தோட்டத்தில் வானத்துக்திரியும் குருவிகள் கூடி அமர்ந்து தாகம் தீர்த்துக்கொள்ளத் தண்ணீர்த் தொட்டியுங் கட்டி வைத்தவனவன்.
வடலூர் வள்ளல் ராமலிங்கர் வாழ்ந்து புழங்கிய மண் மீது தன் கால் பட்டு நடக்கக்கூசியதாய்ச்சேதி சொன்னான். தான் எப்போதும் அந்த மண்மீது நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க வேண்டும் என்று பேசுபவன் அவன் ..
தனக்கு வீடு கட்டிக்கொடுத்த கொத்தனாரை சித்தாளையும் தன் வீட்டுக்கல்வெட்டிலே எழுதி வைத்து அழகு பார்த்த பெரும் மனதுக்காரன்.
‘ நானும் நீயும் இன்றுதான் புத்தகம் தொட்டோம். ஆயிரம் ஆயிரமாண்டு காலமாக இருக்கின்ற எம் தமிழைக்காப்பாற்றி தந்தது எவன்’ என்று கேள்வி வைக்கும் ஆண்மை கொண்டவன் அவன்.
சுயமரியாதைக்காக இங்கே கடைசிவரை நின்ற ஈரோட்டுப் பெரியவருக்கு அவன் என்றும் சீடன். நச்சுப் பாம்பைப்போகவிடு அந்த இனத்தானை மட்டும் விடாதே அடி என்று ஒரு கோஷம் வந்தபோது அந்த வகையறாவை எல்லாம் அள்ளிக்கொண்டுபோய் வங்காள விரிகுடாக் கடலிலே கொட்டிவிட்டு வந்துவிடலாமா என்று எதிர் வினா வைத்தவன்..
பாரதியை ஒருவன் என்று என்ன இன்னும் எத்தனையோ பேர் அவன் ஒரு கிறுக்கன் பைத்தியக்காரன் என்று சொல்ல அதற்கென்ன உன் ஊனக்கண்ணுக்குப் மாகவி பாரதி அப்படித்தான் அகப்படுவான். மெய்யான ஒரு கவிஞன் அப்படித்தான் தெரிவான் திரிவான். நீ உன் வேலையைப் பார் என்று கோபித்துகொண்ட பெரிய மனங்கொண்டவன்.
ஒரு உயர்சாதிக்கார படைப்பாளியை சாதி பார்த்து மட்டுமே சக படைப்பாளிகள் சாடைமாடையாய் குறைத்துப்பேசியபோதெல்லாம் அவரே தன்னைக்கவிஞன் என்று உலகுக்கு அடையாளம் காட்டிய பேராசான் என்று மேடையில் முழங்கிய நேர்மையாளன்.
மாற்றுச்சட்டையொன்று இல்லா ஒரு ராமசாமி தன்னை ஒரு பழஞ்சட்டை க்கேட்டபோது அப்புறம் வாயேன் இப்போது நேரம் இல்லை என்று சொல்லி அவனைத் தன் ஊருக்கு அனுப்பிவைக்க அவன் ஊருக்குப் போய் அங்கே இறந்துபோகிறான். மாற்றுச்சட்டைக்கேட்டவன் தன் மெய்ச்சட்டையை வாழ்ந்த மண்ணில் விட்டுப்போனது எண்ணி எண்ணி வருந்தியவன் அவன்,
மாகவியை சொந்த சாதிக்காரர்கள் தொலைத்துவிடலாம் நாமுமா அப்படித் தொலைப்பது என அந்தப் பாவேந்தன் அன்று சண்டைக்கு நின்றான். அந்தப் பாவேந்தனைத்தான் இன்னும் ஒரு மாகவியாய் பார்க்கத் தமிழ்நிலம் கொடுத்து வைக்கவில்லை. மானிட சமுத்திரம் நான் என்று கூவு எனக் கொப்பளிக்கும் கவிதை சொன்ன அவனைத் தடம் இறக்கிப்பின் அதனையே கொண்டாடிய பாவிகள்தானோ நாம்.
ஞானபீடத்தில் ஒரு தமிழனை உட்காரவைக்க இங்கு எத்தனையோ தரகு வேலைகள் அரங்கேறின. தமிழ் மொழியை செம்மொழி நிலை என்னும் சொர்ண பீடம் ஏற்ற எத்தனை எத்தனை மோடிமஸ்தான் வேலைகள் செய்தோம். அது மறந்துங்கூடவா போகும்..
சரி சரி கதைக்கு வந்துவிடுவோம். எங்கே சுற்றினாலும் அந்த ரெங்கனை ச்சேவிக்க வேண்டும்தான்.
. அந்த அவன் ஒரு நாள் தன் சொந்தக் கிராமம் போய் தன் தமையனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். அவன் தமையனிடம் இப்படித்தான் ஆரம்பித்தான்.
‘ நம்ப அப்பன் நமக்கு க்கொடுத்துட்டுப்போன நீ குடியிருக்கிற வூட்டையும் சரி இந்த ஊருல சும்மா கெடக்குற ஒரு மனகட்டையும் சரி நெடுக்க ரெண்டா வகுந்து வகுந்து பாகம் போட்டுத்தான் உயில் எழுதி வச்சான். அப்பன் காலம் போச்சி. நாம அண்ணன் தம்பி ரெண்டு பேரு. நீ கிராமத்தோட இருக்குற அதனாலே குடியிருக்குற அந்த வூட்ட நீ முழுசாவே வெச்சுக. நான் சும்மா இருக்கிற அந்தக் காலி மனக்கட்டை என் பங்குக்குன்னு எடுத்துக்கறன். என்னா சொல்லுற. மண் அளவு நீளம் அகலங் கூட ரெண்டும் ஒண்ணு தான்’
‘ தம்பி நீ ஊரு சுத்தலாம் உலகம் சுத்தலாம் உன் கீழிட்டு புத்தி முழுசா எனக்குத்தான் தெரியும். ஆக நீ யாரு என்னா சேதிய சொல்லவரங்கிற வெஷயம் எனக்குத்தான் புரியும் போயி வேற எதனா சோலி இருந்தா பாரு’ அவன் தமையன் அவனிடம் சொன்ன பதில் இதுவாம்.
அவனே இதனைச் சொல்லி ஒருமுறை லேசாகச்சிரித்துக்கொண்டான்.
‘ஒரு வவுத்துல கெடந்து நம்மோட கூட பொறந்தவனே நம்பள இன்னும் நம்புல. நாம ஊர உலகத்த என்னுமா திருத்துறது பாயுற காவேரி பெரியாறு கிருஷ்ணான்னு கெளப்பி வுட்ட சண்டைவதான் பெறவு எப்படி ஆவுறது.’
அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் என்றைக்கும் மனிதனுக்கு மட்டுமே உறவு.
கதைக்காக மட்டும்தான் அவன் அவன் என்று இங்கே வருகிறது. மற்றபடி அவர் என்றால் தான் அது சரி.. .

‘—————————————————————. .

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி