வயோதிகக் குழந்தை
தீபம் கோபி, சிங்கப்பூர்

காண்பதனைத்தும் தனதென்று
கவலையின்றி இன்புற்று
இனித்திருந்த மழலை!
வாலிபத்தின் வசந்தத்தில்
கனவுகளில் திளைத்து
களித்திருந்த இளமை!
பொறுப்புகள் சுமந்து
கனவுகள் நிறைவேற
உழைத்துக் களைத்து
துளிர்த்த வியர்வைத்துளி
மறையுமுன்…
வெள்ளிநரை முகம் காட்ட
வாழ்க்கையின் சுவடுகள்
சுருக்கங்களாய்…
நடை தளர்ந்து
தள்ளாடும் வேளையில்..
கைவிரல் பிடித்து
வளர்ந்த உறவுகள்
தோள் கொடுத்து
விழுதுகளாய் தாங்கி நிற்க!
கற்றுணர்ந்த அனுபவங்கள்
தலைமுறைக்கு
ஒளிவிளக்காய் வழிகாட்ட..
நிஜங்களைத் தேடும்
நெடியதொரு பயணத்தின்
கடைசி வாசலில்
எண்ணங்கள் பின்னோக்க
இதயத்தின் இசைமழையில்
குதூகலித்துக் கொண்டாடும்
‘வயோதிகக் குழந்தை ‘!
– –
(dewwinds@yahoo.com)