This entry is in the series 20101107_Issue

இளங்கோ


*
எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
உன்னை நோக்கி நீள்கிறது

நீ உனது கருணையற்ற பார்வையால்
எனது இரவின் அகாலத்தைக் கொளுத்திப் போடுகிறாய்

என் கனவுகள் பசித்திருப்பதை ரட்சிக்கிறாய்
மீட்சியற்ற வனத்தின் கானல் குட்டையில்
சிவந்து மூழ்கும் மௌனங்களென நெளிகிறாய்

ஒவ்வொன்றாக அடுக்கி பின்
குலையும் சந்திப்புகளை
ஒரு விசிறியைப் போல் விரித்து
கையில் கொடுத்துச் செல்கிறாய்

எங்கிருந்தாவது என்னைத் தொடங்கு
என்பதாகத் தான் எனது பிரார்த்தனை
தனித்து உட்கார்ந்திருக்கிறது
உன்
ஆலயத்தின் நீளமான படிக்கட்டுகளில்

*****
— இளங்கோ

Series Navigation