பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

பா. சத்தியமோகன்.


2207.

அந்நகரத்தில் கொல்லிமழவன் என்பவன்

தான் பெற்ற அரிய அமுதம் போன்ற மென் சொல் கன்னியின்

இளமான் போன்ற அழகியின்

இளங்கொழுந்தின் ஒளி போன்ற மேனியிலே

முயலகன் எனும் பெரும் நோய் வருத்த உறவினர் வருந்தினார்

அவனும் உள்ளத்தளர்வு கொண்டான்

(“முயலகன்” ஒருபெரும் நோய்; அது வரப்பெற்றவர் உணர்வற்றும்,

வலிப்பு வரப்பெற்றும் வருந்துவர்)

2208.

அதனை வேறொரு வழியாலும் நீக்க இயலவில்லை

மான்கன்று உடைய கையை உடைய சிவபெருமான் திருவடி பற்றி

வழிவரும் மரபில் வந்த தன்மையின் ஆதலால்

துன்பம் தீர்வதற்காக

பொன் வளையல் அணிந்த பெண்ணைக் கொண்டு வந்து

போர்க்கோலம் கொண்ட வீரராய் திரிபுரங்கள் மூன்றும் எரித்த

இறைவரின் திருக்கோயிலில்

அவரது திருமுன்பு இட்டு வைத்தான்.

2209.

அப்போது ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளி

அருகில் எய்தினார்

“செம்மை தரும் மெய்ஞானம் உணர்ந்த திருஞானசம்பந்தர் வந்தார்” என்று

எவ்வுலகும் துயர் நீங்குமாறு ஒலித்தன

திருக்காளம் முதலிய வாத்திய ஓசை

அதைக்கேட்டு உயிர்த்தான் கொல்லிமழவன்

மென்மையான இயலை உடைய அப்பெண்ணை அங்கே விட்டு

பிள்ளையாரை எதிர்கொண்டு விரைந்து செல்ல-

(கொல்லிமழவன் – கொல்லி நாட்டு சிற்றரசன்)

2210.

“மாநகரை அலங்கரியுங்கள்! மகர தோரணம் நாட்டுங்கள்!

மணிகளை இட்ட மனநீர் நிறைந்த குடங்களை

ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் தூபங்களுடன் ஏந்துங்கள்!

இன்றும்

மற்ற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள்” என ஏவினான் மழவன் பிறகு

தானும் வானவர் நாயகர் மகன் திருமுன்பு தொழுதான் மழவர் கோமான்.

(வானவர் நாயகர் மகன் – சிவபெருமான் மகன்)

[உமை அம்மையிடம் பால் உண்டதால் ஞானசம்பந்தர்

சிவபெருமானின் மகன் எனப்பட்டார்]

2211.

“பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன்” என

ஆனந்தம் பெருக காதல் பெருக

வெள்ளமென நீரைக் கண் பொழிய

முத்துச்சிவிகையின் முன்பு வீழ்ந்தான் மழவர்கோமான்

அப்போது வள்ளலார் “எழுக” என திருவாக்கால் மலர்வித்தார்

அவன்–

மலர்க்கைகளை தலைமீது குவித்து எழுந்து மகிழ்ந்து

அவருடன் சென்று மழமையான அந்தப்பதியின் திருவீதி வழியே

அழைத்துக் கொண்டு வந்து நகரத்துள் புகுந்தான்.

2212.

மங்கல ஒலியான வாத்தியங்கள் முழங்க

அந்த மணிவீதி கடந்து சென்று

பிறைமதி சூடிய சடையார் கோவிலின்

பொங்கு சுடர் கோபுரத்தின் அருகில்

முத்து புனைந்த சிவிகையில் இறங்கினார் பிள்ளையார்

அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து

தம் இறைவரின் கோவிலை வலம் வந்து

திருமுன்பு வணங்குவதற்காக செல்லும் போது –

2213.

இளங்கொடியான கன்னிப்பெண்

உணர்வின்றி நிலத்தில் இருப்பதைக் கண்டு நோக்கினார்

என்ன இது என்று அருளினார் பிள்ளையார்

அவரை

எதிரே வணங்கிய மழவன்-

“அடியேன் பெற்ற பொன் ஆகிய இவளை

முயலகன் எனும் பிணி தொற்றியதால்

இறைவரின் திருக்கோவில் முன் சேருமாறு

இவ்விதம் கொணர்வித்தேன்” என்று மொழிந்து நின்றான்.

2214.

சீகாழிப்பதித் தலைவரான சண்பைநாதரான பிள்ளையார்

அக்கொல்லிமழவன் சொன்னதை அருளுடன் கேட்டு –

பாம்பு வளர் செஞ்சடையுடைய

திருப்பாச்சிலில் பொருந்திய

பரம் பொருளானவரைப் பணிந்து

“மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு”

எனத் தொடங்கினார்

தீர்ப்பதற்கு அரிய நோய் தீர்க்கும் திருப்பதிகமான

குளிர்ந்த தமிழ் பாடினார்.

2215.

புகழப்படும் தமிழ்மறையாம் திருப்பதிகம் பாடி

திருக்கடைக்காப்பும் சாத்தி

நிலைத்த புகழுடைய

கவுணியர் தலைவரான சம்பந்தர் துதித்து நின்றார்

மழவன் பெற்ற மழலையான மென் சொல் கொண்ட அக்கன்னி

பிணி நீங்கப் பெற்று

நிலத்தினில் எழுந்து பொன்கொடிபோல் நடந்து வந்து

போரில் வலிய தந்தையின் பக்கம் நின்றாள்.

2216.

வன்மையுடைய பிணி நீங்கிய மகளைக் கண்டான்

மழவன் பெருகும் மகிழ்ச்சி பொங்கினான்

தனது ஒப்பிலாத மகளுடன் ,தானும்

சண்பையர் காவலர் கால்களில் வீழ்ந்தான்

நின்ற அருமறை பிள்ளையாரும்

கங்கை நீர் அணிந்த குற்றமற்ற இறைவரின் திருவடிகளை

ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார்

தேவதேவரான இறைவரின் அடியார்கள் ஆர்ப்பரித்தனர்

2217.

நீடிய புகழ் மிக்க திருவாசிராமம் வாழும்

நேரிழை பாகத்தராகிய சிவனாரின் தாள் வணங்கினார்

அருள் கூடுமாறு அங்கு தங்கியிருந்து

கும்பிடும் கொள்கை மேற்கொண்டு

பிறகு

ஆடல் பயிலும் இறைவரின் பிற பதிகளுக்கும் அணைந்தார்

பணிந்தார் போற்றி ஏகினார்

அறிவால் சிறந்தவர்கள் உறைகின்ற

திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை வணங்கச் சென்றார்.

(பாச்சில்- ஊர்பெயர்; ஆச்சிராமம்- கோயில்)

2218.

பண்கள் பயில்கின்ற

வண்டினம் பாடுகின்ற சோலைகள் இருக்கின்ற

திருப்பைஞ்ஞீலியில் இறைவர் கழல் பணிந்தார்

உலகினர் துதிக்கும் தமிழ் மாலையான

திருப்பதிகம் பாடி வணங்கி மகிழ்ந்து புறப்பட்டார்

திண்ணிய பெரும் தெய்வத்தன்மை வாய்ந்த

திருக்கயிலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று

வளம் தரும் சீகாழிப் படியின் தலைவரான பிள்ளையார்

பிறகு திருவீங்கோய் மலையைச் சார்ந்தார்.

2219.

சிவந்த கண்களையுடைய குறவரைத்

தேவர்கள் வணங்க இடமான

திருஈங்கோய் மலையிலிருக்கும் கங்கைச் சடையார் கழல் பணிந்தார்

இசை கலந்த திருப்பதிகம் பாடினார்

பொங்கு சோலைகளும் சூழ்ந்த

மலைகளும் அயலில் உள்ள இடங்களெல்லாம் போற்றினார்

கொங்கு நாட்டின் மேல் பகுதியில்

குற்றம் இல்லாத மெய்ஞானக் கொழுந்தைப் போன்ற

ஆளுடைய பிள்ளையார் போய்ச் சேர்ந்தார்.

2220.

அப்பக்கங்களில் உள்ள அண்டர்பிரான் ஆலயங்கள் யாவும் பணிந்தார்

தெளிவான அலைகளுடைய நீர் கொண்ட காவிரியில்

தென்கரையில் உள்ள கொங்கு நாட்டில்

வண்டுகள் அலைவதற்கு இடமாகின்ற

நீர்ச்சடையார் மகிழ்ந்து வாழுமிடங்கள் தொழுதார் துதித்தார்

மேகம் வந்து வாழ்கின்ற நீண்ட மதில் உடைய மாடங்கள் கொண்ட

செங்குன்றூர் அடைந்தார் பிள்ளையார்.

(செங்குன்று- திருச்செங்கோடு)

2221.

அந்நகரில் வாழ்பவர்களும் சிவனாடியார்களும் மனம் மகிழ்ந்து

பல நீண்ட தோரணங்கள் முதலிய அலங்காரங்கள் பல அமைத்து

முன்னால் வந்து எதிர்கொண்டு வணங்கி ஏத்தி

குவித்த கைகள் தலைமீது பொருந்த ஏற்றி

சினமுடைய காளையூர்தியினரான இறைவர்

எழுந்தருளிய கோவிலில்

ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றனர்.

2222.

தம் இறைவர் கோவிலுக்குள்

எழுந்தருளிய தமிழ் வல்ல சம்பந்தர்

இறைவரின் திருமுன்பு தாழ்ந்து வணங்கி

இம்மண்ணுலகினரும் விண்ணுலகினரும் போற்றுமாறு

இனிய இசை உடைய தமிழ்பதிகம் பாடினார்

மேலும் கும்பிடும் ஆவலால்

அந்நகரில் இனிதாய்த் தங்கியிருந்தார்.

(“வெந்த வெண்ணீறிலிருந்து” எனத் தொடங்கும் பதிகம்.)

2223.

அப்பகுதியில்

மேற்குத் திக்கில்

கங்கை ஆறு அணிந்த இறைவர் அமரும் கோவில்களை

எல்லா இடங்களும் சென்று வணங்கினார்

“திருநணா” எனும் பவானித் திருத்தலம் அடைந்து வணங்கி

பாம்பினைப் அணைந்த இறைவரைப் பரவி

முன்பு தாம் தங்க எண்ணிய

திருச்செங்குன்றூரில் தங்கியிருந்தார்.

(“ பந்தார் விரல் மடவாள்” எனத் தொடங்கும் பதிகம் இங்கு பாடப்பட்டது)

2224.

ஆங்கே பிள்ளையார் தங்கியிருந்த நாட்களில்

பொழியும் துளி கொண்ட மேகக்கூட்டங்கள்

மழை பொய்த்தபோது

பெருகிய ஒலியுடைய நீரால் சூழ்ந்த உலகம்

வெயில் பெறாததால்

அந்த விருப்பம் மேலிட

மலைகளும் குளிர்ச்சியடையும்படியாக முன் பனிப்பருவம் அடைந்தது.

2225.

வண்டின் குலங்கள் அகன்று போகுமாறு

தாமரைகள் முகம் வாடுமாறு

பளிங்கு மணியை மரகதமணியில் கோர்த்ததுபோல்

மெல்லிய அறுகம்புல் நுனியில்

பனித்துளிகள் தொடுக்கப்பட்டு அசைந்தன

சூழ்ந்த பனியால் குளிர் குடையப்பட்ட குன்றுகள்

வெண்மையான போர்வை போர்த்ததுபோல் விளங்கின.

2226.

மொய்க்கின்ற பனியின்

கூர்மையான குளிர்கொண்ட வாடைக்காற்று

முழுதாக உலவுகின்ற காலமானதால்

கொய்யப்படும் தளிர்கள் தழைத்த மென்சோலைகளும்

குளிரால் குலைக்கப்பட்டன

கதிரவனும் குளிருக்கு ஒதுங்கிக் கொண்டு

கதிர்களை முழுதும் விரிக்கமாட்டாதவனைப் போல்

சிறிது வெயில் விரிக்கிறான் , சிறிது அடங்குகிறான் எனும் நிலை
அடைந்தான்.

2227.

பழமையால் நீண்ட அந்தத் தலங்களிலெல்லாம்

எங்கும் வரிசையாக உள்ள மாடங்களின் திறைகள்தோறும்

பவளம் போல் கால்கள் கொண்ட புறாக்கள்

தன் பேடையுடன் ஒடுங்கியிருக்கும்

சிறு சண்பகமலர் இதழ்கள் விரிவதற்கு இடமான

மென்மையான கூந்தலுடைய

தம் பெண்களின் துணையான

கலசம் போன்ற வெம்முலைகளினுள்

ஆடவர்களின் பருத்த தோள்களும் மணிமார்பும் அடங்கும்.

2228.

விரியும் மென்மலர்கள் கொண்ட

குறிஞ்சியின் பக்கங்களிலெல்லாம்

மஞ்சளும் குங்குமமும் சேர அரைத்து வைப்பார்கள்

பக்க இடங்கள் எங்கும்

பெரிய அகில் துண்டுகள் பிளந்து புகை எழுப்புவர்

இடை இடை இடங்களில் தோணிவடிவில் அமைந்த

இரும்புச் சட்டியைக் குளிர்காய்வதற்கென தம் அருகில் இழுத்துக் கொள்வர்.

2229.

அந்நாட்களில்

கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில் தங்கியிருந்த

மெய்ஞானப் பிள்ளையான ஞானசம்பந்தருடன்

மேவும் பரிவாரங்கள் பலநாட்களாய் அங்கு தங்கியிருந்ததால்

நடுக்கம் கொள்ளக் காரணமான

குளிர்வந்து வருத்தியது

மலைச்சுரம் வந்து அடர்வதுபோல.

(மலைச்சுரம்- மலேரியா)

2230.

அந்த நிலைமையை

ஆளுடைய பிள்ளையாரிடம்

பரிவாரமெல்லாம் முன் நின்று அறிவித்தன இறைஞ்சின

முதல்வனாராகிய இறைவரின் அருள் தொழுது

ஞானசம்பந்த பிள்ளையார்

“இது இந்த நிலத்திற்கு இயல்பான ஒன்றுதான்

இதன் கொடுமைகள் நமக்கு எய்தாது” எனப் பொருள்படும்

திருப்பதிகம் பாடினார் சென்னிமதி அணிந்தாரை.

2231.

“அவ்வினைக்கு இவ்வினை” எனும் திருப்பதிகம் தொடங்கினார்

“இறைவர் உண்ட கொடிய நஞ்சைத் தடுத்து

எம்துன்பங்களெல்லாம் வாராமல் காத்தது

அவரது திருநீலகண்டமே ஆகும்” எனும் கருத்தினை வைத்து

“செய்வினை எம்மைத் தீண்டப் பெறா!

இது திருநீலகண்டத்தின் மீது ஆணை” எனச் செப்பினார்.

2232.

அருட்குறிப்புடன் கூடிய திருஆணை நிகழும்படி செய்யும்

தூய திருப்பதிகம் பாடிய பின்

திருக்கடைக்காப்பும் தொகுத்தார்

இறைவர் அணிந்தருளியதும்

பொருந்திய அத்தலத்தில் வாழ்பவர் மட்டுமன்றி

நாடு முழுதும் தூய பனிச்சுரம் நீங்கியது அக்கணமே

2233.

அத்தலத்தில் தங்கியிருந்து–

சிலநாளில் அத்தலம் விட்டு அகன்றார்

பவளம் போன்ற சிவந்த சடை உடைய இறைவரின்

இடங்கள் பலவற்றுக்கும் சென்றார் தொழுதார்

சொல்வதற்கரிய சிறப்புடைய

“திருப்பாண்டிக் கொடுமுடியை” முனிவருடன் போய் அடைந்தார்–

மான்தோலுடன் கூடிய முப்புரிநூல் அணிந்த மார்புடைய பிள்ளையார்.

2234.

பருவம் தவறா நீரை உடைய

காவிரிக் கரையில் உள்ள

திருப்பாண்டிக் கொடுமுடி இறைவர் பாதம் மருவினார் வணங்கினார்

வளர்தமிழ் மாலையான திருப்பதிகம் மகிழ்ந்து சாத்தினார்

விரிசுடர் மாளிகை உடைய சிவபெருமானின்

ஒப்பற்ற தலங்கள் பலவும் வணங்கி

“வெஞ்சமாக்கூடல்” எனும் திருப்பதிகம் பாடி

கிழக்குத் திக்கு நோக்கில் செல்பவராகி-

2235.

செல்வம் பொருந்திய கருவூரில்

திருவானிலை எனும் கோவில் சென்றார் இறைஞ்சினார்

நல் இசையுடன்

வளமான தமிழ்ச்சொல் தொடையான திருப்பதிகம் பாடினார்

கொங்கு நாடான அதைவிட்டு அகன்று

மாணிக்கமலை எனும் “திருவாட்போக்கி”யை முதலில் வணங்கி

அலைகள் பெருகும் காவிரியின்

தென்கரைப் பதிகள் பலவும் வணங்கினார்.

(“தொன்டெலாமலர்” எனத்துவங்கும் பதிகம் திருவானிலையில் பாடி அருளியது)

2236.

பலநெடிய குன்றுகளிலும்

படர்ந்த பெரும் காடுகளிலும்

அங்கங்கு பல தலங்களிலும்

நிலையாக இறை வீற்றிருக்கும் கோவில்களெல்லாம்

விருப்புடன் வணங்கினார்

நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய

வேத உண்மையை நிலைநாட்டும் மறையவரான பிள்ளையார்

பிறகு

பொன்போன்ற சடையுடைய தூயவரான சிவபெருமான் வீற்றிருக்கும்

திருப்பராய்த்துறை என்ற தலத்துள் புகுந்தார்.

2237.

நீடும் திருப்பராய்த்துறை எனும் தலத்தில் வீற்றிருக்கும்

நெற்றித்தனிக்கண்ணர் கோவில் அடைந்தார்

ஒன்றுப்பட்டுக் கூடும் கருத்தோடு கும்பிட்டார்

குற்றமிலா தமிழ்மாலைப் பதிகம் பாடுகின்ற

கவுணியர் குலத்தலைவரான பிள்ளையார் கண்களிலிருந்து

நீர் மழை சொரிய

கைகளைத் தலைமீது அஞ்சலியாய்க் கூப்பினார் தொழுது நின்றார்.

(“நீறு சேர்வதோர்” எனத் தொடங்கும் பதிகம்

திருப்பராய்த்துறையில் பாடி அருளினார்)

–இறையருளால்
தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்