திண்ணைக்கு ஒரு கவிதை வைரமுத்துக்களின் வானம் – 10

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

ருத்ரா


===================================
ஆளுக்கொரு
கோப்பை நீட்டிய
கோமானே!
கோப்பைக்குள்
இப்படியொரு
கோட்டையை
எப்படிக்கட்டினாய் ?
குடித்தது
அல்லது
குடிக்கப்போவது
அல்லது
குடித்துக்கொண்டிருப்பதாக
நீ நினைத்துக்கொண்டிருப்பது
தேநீர் தானா ?
‘க்ரேசியன் அர்ன் ‘
அதாவது
‘ஒரு கிரேக்கத்திய
அகல் கிண்ணம் ‘
என்ற கவிதையில்
ஆங்கிலக் கவிஞன்
ஜான் கீட்ஸ்
கற்பனையை
உருட்டி உருட்டி
அந்த கிண்ண விளிம்போடு
கிளர்ச்சித்தீ மூட்டி
வெறுமையைக் கூட
சுடச் சுட
சுவைத்து தந்தானே
அந்த கவிதை தான்
கண்முன் வருகிறது.
எங்கிருந்து
குமிழியிடுகிறது
உனக்கு
இந்தக் கும்மாளம் ?
கள்ளிக்காட்டு மைந்தனே!
தேயிலைக்
கொழுந்துகளின் ஊடே
இந்த
‘பாப்பி மலர்கள் ‘
எப்படி உன்னை
ஊடுருவிப்பார்த்தது ?
‘மேத்யூ ஆர்னால்ட் ‘
என்ற இன்னொரு கவிஞன்
ஜிப்ஸி எனும்
மலைவாழ்குடிகளின்
மனங்களுக்குள்
புகுந்து பார்க்க
கம்பளிப் போர்வையாய்
மடிந்து மடிந்து
கிடக்கும்
அந்த ரம்மியமான
‘கம்னர் ‘ மலையிடுக்குகள்
எல்லாம்
திரிந்து கொண்டிருக்கிறான்.
தூங்கிகொண்டிருப்பது போல்
கிடந்தாலும்
பசும்புல்விரிப்பில்
கற்பனையின் தீக்கங்குகளை
கண்மறைவாய் புதைத்திருக்கும்
அந்த ‘ஆக்ஸ்போர்டு ‘
நகரத்தை
ஆலிங்கனம் செய்துகொண்டு
கிடக்கும்
மலைவரிசைமேல்
மொய்க்கும் மேகங்களை
ஒரு கவிதைக்கூட்டமாய்
‘ஜிப்சி ஸ்காலர் ‘
என்ற பெயரில்
அற்புதமாய் படைத்திருக்கிறான்.
அவனும் அப்படித்தான்.
அடர்ந்த
பச்சைப்பயிர்களிடையே
தன்னை அந்த
‘கிளர்சிவப்பு பாப்பிப்பூக்கள்
எட்டிப்பார்த்தன ‘
(ஸ்கேர்லெட் பாப்பீஸ் பீப்)
என்கிறான்.
சீமைக்கருவேலங்காட்டு
ஊறல் சுவையை
ஊற்றிக்கொடுத்தது போல்
அல்லவா
தேநீர்க் கோப்பை
நீட்டுகிறாய்.
உறிஞ்ச உறிஞ்ச..
அப்பப்பா..
அந்த வார்த்தைகளின் ரசம்
நாக்குகளையெல்லாம்
தாண்டிய நாத ரசம்.
மண்டைக்குள்
மகரயாழ் மீட்டுகின்றாய்.
அந்த கோப்பையின்
விளிம்போடு நீ
ஒரு ‘இச் ‘ கொடுத்தவுடன்
மனைவியின் வாசனை
மறந்து போய்
புதுக்காதலி தேடி
புறப்பட்டு விட்டாயே!
அதனால் தான் கேட்கிறேன்
நீ நீட்டுவது தேநீரா என்று ?
சபலத்துக்கஞ்சா நெஞ்சர்களை
சபலத்துக் ‘கஞ்சா ‘ நெஞ்சர்களாக
மாற்றப்பார்க்கும்
இந்த புதுக்கவிதைக்கள்ளை
எந்த பனைமரத்திலிருந்து
இறக்கினாய் ?
சினிமாப் பணமரம்
ஏறி இறங்கியவன் அல்லவா நீ !
இதிலிருந்து தெரிகிறது
ஆண்களுக்கு மட்டுமே
இந்த கிண்ணத்தை நீ
உயர்த்திப்பிடித்திருக்கிறாய் என்று.
ஒரு குமுதம் இதழில்
பெண்களின்
மூன்று முகத்தில்
கண்ணாடி பார்த்து
தலை சீவி
சிங்காரித்த நீ
இப்போது ஆண்களுக்கு
கூவி கூவிக் கொடுத்தாய்
இந்த கூவத்து நீரை.
நரம்பு மண்டலத்தில்
நந்த வனம்
நட்டுவைக்க
உன் கவிதையின்
நட்டுவாங்கம்
நடத்துகின்ற கூத்தில்
நாங்களும்
தள்ளாடித் தடுமாறுகின்றோம்.
அந்த வியாபாரம்
சூடு பிடிக்க
இதுவும் கூட
குமுதம் பாணியில் வந்த
அற்புத விளம்பரம் தான்.
கோப்பைக்குள் குடியிருந்த
கவிஞனை
இந்த தேசமே அறியும்.
ஆனால்
கோப்பையைச்சுற்றி
தேநீரை
வெள்ளமாக்கி விட்டு
உள்ளே நீ
உறிஞ்சிக்கொண்டிருக்கும்
நிழல்களின்
பிரமைகளின்
கனவுகளின்
அந்த வானத்து
ஏழுவர்ண விஸ்கியை
எழுச்சியுடன்
எங்களுக்கு தருகின்ற
கவிச்சக்கரவர்த்தியே !
அச்சு கோர்த்த
எழுத்துகளை
அச்சு வெல்லம் ஆக்கி
எங்களுக்கு
ருசிப்பதற்கு தந்த
சுவைச்சக்கரவர்த்தி நீ.
=========================================
(குமுதம்-10.11.03)

Series Navigation

ருத்ரா

ருத்ரா