கோடை

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

– எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி – வார்த்தை இதழ் – ஆகஸ்ட்,2009
mrishanshareef@gmail.com

Series Navigation

கோடை

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

ஸ்ரீமங்கை


—-

தேனீர்க்கடை பெஞ்சுகளை
நனைத்துச் சொட்டி, சாலையோரம்
சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர்
அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில்
சகதியாய்ச் சிதறிப் பயணிக்க,

நாக்கில் நீர்சொட்டி,
நக்கிக் குடிக்கவந்த
கறுப்பு நாய்
தொங்கிய முலைகள்
கோபமாய் ஊசலாட,
பேருந்தின் பின்னோடி
எழுப்பிய குரைப்புகள்.

மின்வெட்டில் தயங்கி நின்ற
மின்விசிறிகளின்
அழுத்திய மொளனத்தில்
மூடிய கதவுகளினின்றும்
மிதந்து நீளும்
வியர்வைப்
பெருமூச்சுகள்..

இவைபோதும்
கோடைவந்ததென்று
அறிவிக்க.
சூரிய உதயங்களின் அவசியமேயின்றி.

அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

Series Navigation