இரவின் நுழைதலம்
ஏ.தேவராஜன்

இன்னும் இந்த இரவு
உலாத்திக்கொண்டுதானிருக்கிறது
சாமான்யனின்
நுழைவுகளுக்கப்பாற்பட்ட
துர்நாற்றம் வீசும் வெளிகளில்…
நாய் மலத்தின் பக்கமாய் உறங்கும்
பரதேசியின் நெருக்கத்தில்…
சுதி சேர்த்து
உடன் நடந்துவரும் காற்றும்
சன்னமாய் இரவுடன்
உஷ்ஷென்று பேச…
இரவு இன்னும் உலாத்த
வெளியெங்கும்
விரிந்து கிடக்கத்தான் செய்கிறது
இரவும் காற்றும்
காற்றும் இரவும்
உறக்கத்தையும்
ஊடாடும் கனவுகளையும்
நம்புவதாயில்லை…
வனப்பூக்களைவிட ஏனோ
அவை
வேறெங்காவது திரிந்திடத்தான்
அவை விரும்புகின்றன.
.