This entry is in the series 20101024_Issue

இளங்கோ


*
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டறியாத
கதையொன்றை சொல்லும்படி
கெஞ்சினாள் சிறுமி

சொல்லப்படாத கதையைத் தேடி
மனக்காட்டுக்குள்
கிளை பிரியும் இருண்ட புதிர்பாதைகள் தோறும்
அலைந்து சலித்து உட்கார்ந்தேன்
ஒரு கதையின் மீது..

நினைவிலிச் சாளரங்கள்
தூறல் வீசும் எண்ணற்ற காட்சிகளை
பொத்தலிட்டு மடியில் கிடத்தியது

பட்டென்று காற்றில் திறந்த கதவின் ஊடே
பாய்ந்த வெளிச்சத்தில்
என் அறையிலிருந்தேன்

சுவர் முழுக்கப் பரவியிருந்த
வெயிலோடு உடைந்து கிடந்த
என் நிழல்
இதுவரை யாரும் சொல்லிக் கேட்டிராத
என்னைக் காட்டியது

காத்திருந்தேன் சிறுமிக்காக
அதன் பிறகு அவள் வரவேயில்லை

வந்தாலும்..

இதுவரை
யாரும் சொல்லிக் கேட்டிராத
அந்தக் கதையை சொல்லும்படி
கேட்கவுமில்லை..

******
–இளங்கோ

Series Navigation