திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பனி

This entry is in the series 20021201_Issue

ராஜி


திவ்விய மாயுறை பனியும் தூவுகிறது,
ஒவ்வொரு துளியில் உன்முகம் தெரிகிறது!

பஞ்செனப் புத்தம் புதுப்பனி பொழிகிறது,
சஞ்சலமாய்க் கிளைகள் செடியில் அசைகிறது!
இஇலைகள் மரத்தில் உதிர்ந்தன சீராய் ,
தொலைவில் அமைதித் தன்மையைப் பாராய்! (திவ்விய…)

மாறும் பருவம் மங்கு நிறம்,
ஆறுதல் தந்த ஆற்று நிதம்!
தேங்காய் துருவலாய் தாவரம் விழிக்கிறது,
ஆங்கோர் உழுதிடும் இயந்திரம் ஒடுகிறது! (திவ்விய…)

பெண்களும் விளையாடும் பனிப் பந்தால்,
வெண்மை நிலையாய் விழும் பனியால்!
கிண்டியில் கொதித்திடும் ‘கோகோ-சீனி ‘
வண்டியில் எப்போழுது வருவாயோ நீ ? (திவ்விய…)

***
r2iyer@ryerson.ca

Series Navigation

About ராஜி

ராஜி

View all 11 articles →

பனி

This entry is in the series 20020210_Issue

அனந்த்


மேகப் பொதியல் மெதுவே பிரிந்து
…..மேலே யிருந்து விழுவதுவோ ?

நாகம் அணிவோன் உறையும் மலையின்
…..நலமே உரைக்கப் பொழிவதுவோ ?

தாகம் தணித்த மழைபின் புவிக்குச்
…..சாதம் கொடுக்க வருவதுவோ ?

காகம் தனக்கும் கருமை நீக்கிக்
…..கடிதே வெளுப்புத் தருவதுவோ ?

ஓடிக் களைத்த ஓடை நதிக்கும்
…..ஓய்வைக் கொடுக்க உதவிடுதோ ?

வாடித் தளர்ந்து வெறுமே கிடந்த
…..மரத்திற்(கு) ஆடை வனைந்திடுதோ ?

சாடிக் குதித்துச் சிறுவர் மகிழத்
…..தரையில் படிந்து குவிந்திடுதோ ?

பாடிக் களித்துப் புலவன் மகிழப்
…..பனியே! தொடர்ந்து பொழிந்திடுவாய்!

Series Navigation

About அனந்த்

அனந்த்

View all 61 articles →