This entry is in the series 20090430_Issue

கோ.புண்ணியவான்.


என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள்
அதன் பிஞ்சுபிடுங்களில்
கை மாறியது
ஒரு பென்சிலும்
அதன் வசமானது.
கால் பரப்பி மெத்தென்றமர்ந்து
சிரமப்பட்டு ஒருங்கிணைந்தன
அதன் விரல்களில் சிக்கிய பென்சிலும்
அசுரக்கிறுக்களுக்கு ளானது தாள்

என்ன வரஞ்ச?
ப்பூ என்றது
அது உறுதியாய் பூ அல்ல
வண்ணப்பென்சிலால்
புழுக்களைத்தேடிப்பிராயும்
குஞ்சுக்கால்கால் நகங்களாய்
மேலும் திசை மறந்த கோடுகள்.

இப்ப என்ன வரஞ்ச?
ப்பூ என்றது தயங்காமல்
என் முகம் பாராத
கூர்ந்த குவிமையத்தில்
அது உறுதியாய்
பூ அல்ல

ஒருநாள் மாலை வேளையில்
விருந்தினர் அறைச்சுவரில்
அந்தக்கிறுக்கள்
பிரேமில் தொங்கியது
வீடே மணக்க
என் கவிதையை வென்றவாறு!


Ko.punniavan@gmail.com

Series Navigation