This entry is in the series 20090430_Issue

ஹெச்.ஜி.ரசூல்



அந்திச் சிவப்புச் சூடி
நாணப்பட்ட விரல்களுக்கு
உதடுகள் வருடித்தரும் முத்தம்
பல்லாங்குழி ஆட காத்திருக்கும்
குன்னிமுத்துகளின் தவிப்பு.
சுறுமா விழிகளும்
நெத்திச் சுட்டியும் எதிர் நின்று பேச
கூச்சமுற்ற இரவின் நீளம்
மணவறை பூந்திரைக்குள்
காற்றாகி நுழையும்

நெஞ்சின் தாள ஓசைகளில்
ஒன்றையொன்று நெருங்கி
உச்சிக் குளிர மோந்து
உயிரில் உயிர் கரையக் கரைய
கணந்தோறும் துளிர்க்கும்
ஒரு கொத்துக் கனவுகள்.
0
உயிரைப் பாதுகாத்து
எங்கோ ஒளித்து வைத்திருக்கும்
உடம்புக்கும் தெரியாது
மைலாஞ்சி பூக்களால்
மனசுக்குள் வரைந்த ஒவியம் பற்றி.
பற்ற வைத்த திரியின் வாசம் அறையெங்கும்
குறும்பு செய்து ஓடிமறையும்
பழக்கப்பட்ட சிறுமியின்
தலையாட்டலில் உதிர்ந்த பூக்கள்
ரைஹாலுக்கு அடியில்.


Series Navigation