கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

இப்னு பஷீர்


கீதைக்கு விளக்கம் சொல்ல வந்த ஜெயமோகன், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விமர்சனங்களை எதிர் கொள்ள தெரியாமல், அல்லது முடியாமல், விவாதத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாக குர்ஆனை சண்டைக்கு இழுத்திருக்கிறார். அவரது அறியாமையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். பாராட்டுக்கள்!

“போரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால், முதலில் முற்றாக நிராகரிக்க வேண்டிய நூல் குர் ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப் பற்றியவையே! நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான்.” – இவை ஜெயமோகனின் வரிகள். இவை எந்த அளவுக்கு அபத்தமானவை என்று பார்ப்போம்.

மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் தேவையான வழ்ிகாட்டுதல்களை தரும் குர்ஆன், ஒரு நிர்மாணிக்கப்பட்ட ஆட்சியில் இருப்பவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களாலேயே நடத்தப்படும் போரில், நடந்து கொள்ள வேண்டிய விதி முறைகளையும் சொல்லித்தருகிறது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் சொற்ப வசனங்களே போரைப்பற்றி பேசுகிறது. ஜெயமோகன் சொல்வது போல் ஏராளமான வரிகள் அல்ல. ஏனெனில் குர்ஆன் வசனங்கள் போர்க்களத்தில் செய்யப்பட்ட உபதேசங்கள் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்க முடியாமல் முழு வீச்சுடன் போரில் பங்கேற்றது மூன்றே மூன்று முறைகள்தான். பத்ரு, உஹது, ஹுனைன் என்ற மூன்று பெரும் யுத்தங்கள்தான் தற்காப்பின் பொருட்டு தவிர்க்க இயலாதபடி நிகழ்ந்தன. முஸ்லிம்களை வேண்டுமென்றே எதிர்த்தவர்கள்தான் இந்த போர்களுக்கும் காரணமாக இருந்துள்ளார்கள்.

இந்த போர்கள் ஒவ்வொன்றுமே பாதி நாளைக்கு மேல் நீடிக்கவில்லை. பகல் பொழுதில் தொடங்கும் யுத்தம் சூரியன் அஸ்தமனமாகும்போது முடிந்து விடும். இதை விட ஆச்சரியம் என்னவெனில், இந்த மூன்று போர்களிலுமாக சேர்த்து ஒட்டு மொத்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்ில் கலந்து கொண்ட போர்களின் கால அளவு அரை நாள்தான். அதாவது தனது ஒட்டு மொத்த வாழ்நாளிலேயும் அவர்கள் அரை நாளுக்கு மேல் யுத்தம் நிகழ்த்தவில்லை. இறைத்தூதராக அவர்கள் வாழ்ந்த 23 ஆண்டு கால வாழ்க்கை முழுவதும் பெருமானார் அமைதி வழியையும் சமாதானத்தையும்தான் செயல் படுத்தி இருக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் ஒரு அரை நாளைத்தவிர!

ஜெயமோகன் இஸ்லாத்தைப் பற்றி விமரிசனம் செய்யுமுன் அதைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளட்டும். அதன் பிறகு விமரிசனங்களை, பொத்தாம் பொதுவாக இல்லாமல், குறிப்பிட்டு சொல்லட்டும். அதுதான் அறிவுடையோர் செயல். அவருடைய நியாயமான சந்தேகங்களை தீர்த்து வைக்க இஸ்லாம் தயாராக உள்ளது.

குர்ஆனுக்கு முஸ்லிம்கள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அது உலகப் பொதுமறை. அதன் வசனங்களை ஜெயமோகன் கேட்க நேர்ந்தால் யாரும் அவர் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற மாட்டார்கள். அதன் கருத்துக்களை அவர் பேசினால் அவரின் நாவை அறுக்க வேண்டும் என்று இந்த வேதம் சொல்லவில்லை. மேலும் குர்ஆன், போதுமான விளக்கங்களுடன் தமிழிலேயே இணையத்தில் கிடைக்கிறது. நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற புத்தகம் இஸ்லாத்தை பற்றிய பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது. ஜெயமோகன் போதுமான அவகாசம் எடுத்துக் கொண்டு, இஸ்லாத்தை நன்கு புரிந்து கொண்டு, பின் அவரது விமரிசனங்களை முன் வைக்கட்டும். நாம் காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ்.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்