This entry is in the series 20090219_Issue

கே.பாலமுருகன்


பற்பல மரணங்களை
ஓட்டிக் கொண்டு
வருகிறான்
ஒர் ஆட்டுக்காரன்

அவனது காலுக்கடியில்
ஊர்ந்து கரைகிறது
மரணம்

ஒவ்வொரு ஊரிலும்
ஒரு மரணத்தை
விற்றுவிட்டு
மீதமிருக்கும் அப்பாவி
மரணங்களோடு
அடுத்த ஊருக்கு
நகர்கிறான்

அவ்வளவு காலம்
வளர்த்த ஆடுகளுக்கும்
தெரிய போவதில்லை
கொலைக்காரன் வேறெங்கிலுமில்லை
தன்னை மேய்த்துக்
கொண்டிருக்கிறான் என்று

வேலிகள் உடைத்து
முனியாண்டிக்குப் பலியாகவிருந்த
நாட்டு கெடாக்கள்
கதறிக் கொண்டு
சாலையில் மரணமாக
ஓடுகின்றன
ஆட்டுக்காரனின் கொலையுணர்வைப்
பிதற்றிக் கொண்டே!


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation