சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

அறிமுக விழா


வரும் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, விக்டோரியா ஸ்டிரீட்டில் அமைந்துள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சை.பீர்முகம்மதின் புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெறுகிறது. ‘பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்’ என்ற இந்த நூலை ஜோதி.மாணிக்கவாசகம் அறிமுகம் செய்கிறார்.

எழுத்தாளர் சை.பீர்முகம்மதோடு வாசகர்கள் கலந்துரையாடும் அங்கத்தை முனைவர் இரத்தின வேங்கடேசன் வழிநடத்துகிறார். ‘வாசிக்க, நேசிக்கத் தமிழ்’ என்ற தலைப்பில் மலேசிய வார இதழ் தென்றலின் ஆசிரியர் வித்யாசாகரின் சிறப்புரை இடம் பெறுகிறது. பிரபல மலேசிய எழுத்தாளர்கள் கோ.புண்ணியவான், கே.பாலமுருகன் உட்பட கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு தங்கமீன் பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கி வருபவர் சை.பீர்முகம்மது. 1942-ம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர், 1959 முதல் சிறுகதை, கவிதை, நாவல், பயணக்கட்டுரை என்று பலதளங்களிலும் பயணித்து வருகிறார்.

1984 -‘வெண்மணல்’ சிறுகதைகள், 1997-‘பெண்குதிரை’ நாவல், 1997-‘கைதிகள் கண்ட கண்டம்’ பயணக்கட்டுரை, 1998-‘மண்ணும், மனிதர்களும்’ வரலாற்றுப் பயணக் கட்டுரை, 2006-‘திசைகள் நோக்கிய பயணம்’ கட்டுரைகள் – இவை படைப்பிலக்கியத்திற்கு இவர் இதுவரை அளித்துள்ள பங்களிப்பு. தற்போது ‘அக்கினி வளையங்கள்’ என்ற நாவல் அச்சில் உள்ளது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஐம்பதாண்டுகாலச் சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். அது மலேசிய எழுத்துக்களுக்கு பரவலான உலகப் பார்வையைப் பெற்றுத் தந்தது. ‘மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் இவரால் வெளியிடப்பட்டது.

மலேசியா மட்டுமல்லாது, சிங்கப்பூர் உட்பட அயலகத் தமிழ்த் இலக்கியங்களை தொடர்ந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுவதன் மூலம், இந்த வட்டாரத்தில் இவரது பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு