நடுநிசி
Published September 25, 2008 • By
ஒளியவன்
ஒளியவன்
மழையின் குளிரில்
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது
வெள்ளிநிலா மறைத்த மேகம்
சில நாய்களின் சத்தம்
சில்வண்டுகளின் இரைச்சலோடு
கூடிச் சேர்ந்து மேலும்
குரூரமாக்கிக் கொண்டிருந்தது
கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு
யாருமில்லை எனினும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்
ஆந்தையின் இரைச்சலும்
வரதட்சணைக் கொடுமையால்
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்
அப்பா வரக்கூடும் அதிகாலையில்
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ…..
– ஒளியவன்