ஈகைத் திருநாள்!

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்



ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
கூறிடுமின்பத் திருநாளில்
உள்ளத்தின் குதூகலம் ஒருபுறத்தில்
இருந்துமோர் வருத்தம் உள்மனத்தில்
ஒருமாத காலம் நோன்பு நோற்று
உறவினரை நண்பரை வீட்டுக்கழைத்து
ஒன்றாயமர்ந்துண்டு நோன்பு திறந்து
ஐவேளை தொழுகை தவறாது செய்து
தறாவே தஹ்ஜூத் கூடுதலாய் சேய்து
ஓய்வு நேரத்தில் ‘திருக்குரான்’ வாசித்து
ஏழை எளியோர்க்கு அள்ளிக் கொடுத்து
தீயதைத் துறந்து நல்லவையே நினைத்து
அறிந்தோ அறியாமையிலோ செய்திட்ட
தவறுகட்கு மன்னிப்பு வேண்டி
இரண்டரை சதவீத மார்க்கவரி முறையாயீந்து
தேவையிலிருப்போர்க்கு உதவிகள் செய்து
பன்மடங்கு புண்ணியம் ஈட்டித்தரும் ரமதான்
இதற்குள் முடிந்ததில் வருத்தமே! எம் இறைவா!
இல்லாமையில்லா நிலைவேண்டும்! -எல்லோரும்
ஈருலக கல்வி பெற்றிட வேண்டும்!
தவறுகள் செய்யா மன உறுதி வேண்டும்!
செய்திட்ட தவறுகட்கு மன்னிப்பு வேண்டும்!
ஏற்றத் தாழ்விலா நிலை எல்லோர்க்கும் வேண்டும்!
பகைமை மறந்து நட்பு மலர வேண்டும்!
நோயிலும் துன்பத்திலுமுள்ளோர் துயர் நீங்கிடவேண்டும்!
பொறாமை பூசல்கள் அழிந்திட வேண்டும்!
ஈகைசெய்திடும் உள்ளம் என்றென்றும் வேண்டும்!
ஈயாருமீந்திடும் மனம் பெற்றிட வேண்டும்!
எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே! எம் இறைவா!
இவ்வினிய நேரத்தில் நீதான் அருள்புரிய வேண்டும்!
ஈத் முபாரக்!!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


drimamgm@hotmail.com

Series Navigation

இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்