என் இசைப் பயணம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

அப்துல் கையூம்


என் இசைப் பயணம்

அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி, கேலி, குசும்பு எதுக்குமே குறைச்சலில்லே.

“பசுமை நிறைந்த நினைவுகளே.. பாடித்திரிந்த பறவைகளே”ன்னு செட்டிநாட்டுக்காரரு பொருத்தமாத்தான் பாடி வச்சிட்டு போயிருக்காரு.

ஒருநாள் ஹாஸ்டலுக்கு கீழே இருந்த ஆஞ்சநேயா ஹோட்டல்லே காப்பி குடிச்சிக்கிட்டு இருந்தேனா, அப்ப “மாஞ்சோலை கிளிதானோ? மான்தானோ? வேப்பந்தோப்புக் குயிலும் நீ தானோ?” -ன்னு ‘நிற்பன’. ‘நடப்பன’, ‘பறப்பன’ எல்லாத்தையும் கூவிக் கூவி ஜெயச்சந்திரன் சத்தமா பாடிக்கிட்டிருந்தாரு.

மூளையிலே சட்டுன்னு ஏதோ ஒரு மின்னல் வெட்டுனுச்சு. “நம்மளும் இளையராஜா போல ஆனா என்னா?” இந்த பொல்லாத ஆசை எங்கேந்துதான் பொத்துக்கிட்டு வந்துச்சோ தெரியலே. சீரியஸா நானும் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அதுக்கு கொஞ்சமாச்சும் இசைஞானம் வேணுமே? எந்த வாத்தியத்தை கத்துக்கறதுன்னு மண்டையை போட்டு உடைச்சுக்கிட்டேன். பசங்கக்கிட்ட அட்வைஸ் கேட்டேன். ஆளாளுக்கு இஸ்டத்துக்கு ஒண்ணு சொன்னானுங்க.

“மச்சி ! உனக்கு மீசை தாடி வச்சு தலைப்பாவும் கட்டிப் பாத்தா அப்படியே சர்தார்ஜி மாதிரியே இருப்பே. பேசாம மோர்சிங் வாசிக்க கத்துக்கோயேன்.” நகுதாதான் சொன்னான்.

என் முகம் செவந்து போனதை பாத்துட்டு “சரி..சரி….. கோவிச்சுக்கிடாதே”ன்னு சமாதானம் படுத்திட்டு ஐடியாவும் கொடுத்தான். “மச்சி நீ எதுக்கும் கீழே 13-ஆம் நம்பரு ரூமுலே ரஃபிக்கிட்டே விசாரி. அவந்தான் வீணை நல்லா வாசிப்பான்.”

குஷியா கிளம்பி ரஃபிக்கிட்ட போயி விசாரிச்சேன். “வீணைன்னு நீ ஒரு பேப்பருலே எழுதிக் காண்பிச்சா அத நான் வாசிப்பேன்”னு சென்னான். வழக்கப்படி கொஞ்சம் லேட்டாகத்தான் புரிஞ்சுது நகுதா என்னை கழட்டி விட்டுருக்கான்னு.

எங்கே நான் ஒரு பெரிய மாஸ்ட்ரோவா ஆயிடுவேனோங்கிற பொறாமையிலே அவன் இப்படி பிடரல் காஸ்ட்ரோ மாதிரி வில்லத்தனமா நடந்துக்கிட்டான்னு நெனக்கிறேன்.

யோசிச்சுப் பார்த்தேன். வீணைக்கு எஸ். பாலசந்தர், ஷெனாய்க்கு பிஸ்மில்லாகான், புல்லாங்குழலுக்கு ரமணி, சாக்ஸபோனுக்கு கதரி கோபால்நாத், வயலினுக்கு குன்னக்குடி, தவிலுக்கு வளையப்பட்டி இப்படி இருக்க மாண்டலினுக்கு யாருமே இல்லியே? (அப்போ மாண்டலின் சிரினிவாஸ் பொடியனா இருந்த நேரம்)

“மாண்டலின் கற்றுக் கொள் அதில்தான் உனக்கு பெரிய போட்டி கிடையாது” – பாலச்சந்தர் படத்திலே வர்ற மாதிரி என்னோட மனசாட்சியே கிளம்பி வந்து எனக்கு ஐடியா கொடுத்துச்சு.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” அப்படின்னு யாரோ பாடி வச்சது வேற ப்ளாஷ் அடிச்சுச்சு.

மெயின்கார்ட் கேட்டுக்குப் போயி மாண்டலின் ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். வர்ற வழியிலே நகுதாவை பாத்தேன். “கிடார் வாங்குனதுதான் வாங்குனே கொஞ்சம் பெரிய சைஸா பாத்து வாங்குனா இன்னா? உன்னோட சைஸ்லேயே வாங்கிட்டு வந்திருக்கிறியே?-ன்னு கலாய்ச்சான்.

“மவனே இரு. உனக்கு ஒரு நாளிக்கு தனியா வச்சுக்குறேன்”-னு மனசுக்குள்ளே ரகசியமா சொல்லிக்கிட்டேன்.

கஷ்டப்பட்டு சுப்பிரமணியபுரத்துலே சுந்தர் சாரை இசை குருவா கண்டுபுடிச்சேன். A-B-C-D ன்னு சொல்லிக் கொடுக்கறதுக்கு பதிலா மனுஷன் E-A-D-G ன்னு சொல்லிக் கொடுத்தாரு.

ஆளு இங்கிலீஸ்லே கொஞ்சம் ‘வீக்’கோன்னு நெனச்சேன். அப்பறந்தான் புரிஞ்சுச்சு அவரு அந்த வாத்தியத்துலே இருக்குற நாலு ஜோடி கம்பியை பத்தி பாடம் நடத்துனாருன்னு.

முதல்லே அவரு கத்துக் கொடுத்தது A.M.ராஜாவோட “பாட்டுப் பாடவா- ங்கிற பாட்டு. “பாட்டுப் பாடவா?” ன்னு அவரு பாடுவாரு. நான் “டிங்..டிங்..டிங்” ன்னு வாசிக்கணும். அடுத்தாப்புலே “பாட்டு கேட்கவா?” -ன்னு அவரு பாட நான் “டிங்..டிங்…டிங்” -ன்னு வாசிக்கணும். ஈஸியாத்தான் இருந்துச்சு.

இதுதான் மொத நாளு பாடம். “அடுத்த வாரம் கிளாசுக்கு வர்றச்சே நன்னா பிராக்டிஸ் பண்ணிண்டு வந்துருங்கோ”. சுந்தர் சாரு வேட்டியை மடிச்சுகிட்டே அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு.

ஹாஸ்டலுக்கு திரும்பி வர்றப்ப சைக்கிளை வேகமா மிதிச்சிக்கிட்டு வந்தேன். இளைய ராஜா அன்னக்கிளி ஹிட்டான உடனே ஒரு பேட்டியிலே சொல்லியிருந்தாரு. மியுசிக் நம்மள சுத்தி இருக்குதாம். நாய் ‘லொள்’ளுன்னு குரைச்சாலும், கதவு ‘கிரீச்’சுன்னு சத்தம் போட்டாலும், பூனை ‘மியாவ்’ன்னு கத்துனாலும் அது மியுசிக்தானாம்.

சைக்கிள்ளே போவும் போது ரோட்டுலே யாருமே இல்லாத டயத்துலே கூட பித்துக்குளியாட்டம் (பித்துக்குளி முருகதாஸ் தயவு செஞ்சு கோவிச்சுக்க கூடாது) வழி நெடுக்கா ‘கிணிங்..கிணிங்’ன்னு சைக்கிள் பெல்லை அடிச்சுக்கிட்டே போனேன். அந்த சவுண்டுலேயும் ஏதோ ஒரு மியுசிக் இருக்கிற மாதிரியே ஒரு பீலிங். இசை உலகுலே நாமும் ஒரு அங்கமா சங்கமிச்சு விட்டதை நினைக்கிறப்ப பெருமையா இருந்துச்சு.

ஹாஸ்டல் வாசல்லே சைக்கிள்ளேந்து இறங்குனப்போ எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருந்துச்சு. கழுத்துலே மொத்தமான டென்னிஸ் ரேக்கட் மாதிரி என்னோட மாண்டலின் கம்பீரமா தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

நல்லவேளை வீணை கீணை கத்துக்கலே. இவ்வளவு பெருசா தோளுளே சுமந்துக்கிட்டு சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்தா ஹனுமாரு கதயை தூக்கிட்டு வந்த மாதிரி இருந்திருக்கும். பசங்க பாத்தாங்கன்னா ஆஞ்சனேயா ஹோட்டல்லேந்து வடையெல்லாம் வாங்கி வச்சு வடை மாலையை எனக்கு சாத்தியிருப்பானுங்க.

என் கெட்ட நேரம், யாரோட கண்ணுலே மாட்டக்கூடாதுன்னு நெனச்சேனோ அவன் கண்ணுலேயே மாட்டிக்கிட்டேன். நகுதா சொன்னான் “மச்சி.. இப்போ உன்ன பாக்க M.S.விஸ்வநாதன் மாதிரியே இருக்குதுடா”. நம்மள வச்சு காமடி கீமடி பண்றானா? எனக்கு ஒண்ணுமே புரியலே.

ரூமுக்கு போன உடனேயே பிராக்டீஸை ஆரம்பிச்சுட்டேன். “டிங்..டிங்..டிங்”……. டிங்..டிங்..டிங்”… ஓரளவுக்கு வந்துடுச்சு. அப்பாடா.. இசைத்துறையிலே பாதி கிணத்த தாண்டிட்ட மாதிரி ஒரு ஆத்மதிருப்தி.

ரூம்மேட் செய்யதலி A.M.ராஜா மாதிரியே பாடுவான். பாக்க சீனன் மாதிரி இருந்தாலும் தமில் பாட்டு நல்லாவே பாடுவான். அவந்தான் என்னோட இசை ஆர்வத்துக்கு சரியான சமயத்துலே கை கொடுத்தான்.

சீனன் பாட ஆரம்பிச்சான் “பாட்டு பாடவா…????”

“டேய் பாடாதே.. கொன்னுடுவேன்” – அடுத்த ரூமுலேந்து ஒரு அசரீரி

“பாட்டு கேட்கவா?”

“கேட்க மாட்டேன். என்னடா செய்வே?”

கத்துனது யாருன்னு சரியா ஞாபகமில்லே. அநேகமா அதுவும் நகுதாவாகத்தான் இருக்கணும்.

அன்னிக்கி முழுக்க எங்க ரூமிலே “பாட்டுப் பாடவா” தான். அவன் பாட, நான் வாசிக்க, நான் வாசிக்க, அவன் பாட, அடடடடா.. ஒரே ஜுகல்பந்திதான் போங்க. குலாம் அலியும், ரவிஷங்கரும் இணைஞ்ச மாதிரின்னு வச்சுக்குங்களேன்.

அடுத்த நாளு நகுதா நல்ல பிள்ளையாட்டம் என் ரூமுக்கு வந்தான். “ஆஹா.. திருந்திட்டான் போலிருக்கே”-ன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்.

“கன்கிராஜுலேஷன்…! உன் இசை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே. எங்கே உன் சுரைக்காய்? அதை எடுத்து ‘டொய்ங்… டொய்ங்’ன்னு வாசித்துக் காட்டு”-ன்னு டயலாக் எடுத்து விட்டான்.

பாட்டுப் படிச்சுக்கிட்டேதான் என்னால வாசிக்க முடியும். என் குரலு சுமாராத்தான் இருக்கும். பரவாயில்லையா? –ன்னு கேட்டேன். (இந்த நேரம் பாத்து சீனன் எங்கே போய் தொலஞ்சான்னு வேற தெரியல)

“மச்சான்.. பரவாயில்லை பாடு. எங்களோட இதயம், எதையும் தாங்கும் இதயம்” –ன்னு கோரஸ் பாடிக்கிட்டே நாலைஞ்சு பசங்க திபு..திபு-ன்னு உள்ளார புகுந்தானுங்க. நகுதாதான் செட்டப் பண்ணி கூட்டி வந்திருக்கனும். படுபாவி.

டேக்.. ஒன். ரெடி.. ஸ்டார்ட்.. கோ– சொன்னான் ஒருத்தன்,

“பாட்டுப் பாடவா?” – இது நான்.
“டிங்..டிங்..டிங்” – இது என் மியுசிக்.
பாட்டு கேட்கவா?” – நான்
டிங்..டிங்..டிங். – மியுசிக்
பாடம் சொல்லவா? …………….
பறந்து செல்லவா? ……………..
(நல்லவேளை கடைசி ரெண்டு வரிக்கு டிங்..டிங்..டிங்,, கிடையாது)

முடிச்சதும் கோரஸா ஒன்ஸ்மோர் கேட்டானுங்க பசங்க. அடேங்கப்பா,.. நமக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா? –ன்னு சொல்லிட்டு உற்சாகமா மறுபடியும் வாசிச்சேன். மறுபடியும் ஒன்ஸ்மோர் கேட்டானுங்க.

திடீருன்னு எப்போவோ படிச்ச பாகவதர் ஜோக் ‘ஸ்ட்ரைக்’ ஆச்சு. “ஆஹா,, நாம சரியா வாசிக்கிற வரைக்கும் நம்மள இவனுங்க விட மாட்டானுங்க போலிருக்கே” –ன்னு உஷாராயிட்டேன்.

வாத்தியத்தை எடுத்து பேக்-அப் பண்ணிட்டு “இன்னிக்கி இவ்வளவுத்தான்” ன்னு கச்சேரியை சிம்பிளா முடிச்சிக்கிட்டேன்.

போவும் போது நகுதா “மாப்ளே.. நாளிக்கி எத்தனை மணிக்கி நீ பிராக்டீஸ் ஆரம்பிப்பே?” -ன்னு கரிசனமா கேட்டான். “ஏண்டா கேக்குறே?” ன்னு கடுப்படிச்சேன். “நீ கரெக்ட் டைம் சொன்னா நாங்க அந்த நேரத்துலே ரூமை காலி பண்ணிக்கிட்டு வெளியே போயிடாம்லே அதனாலேதான்”-ன்னு இழுத்தான்.

மறுபடியும் நம்மள வச்சு காமெடி பண்ணுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு “போங்கடா வெளியே”ன்னு கதவை இழுத்து ‘படார்’ன்னு மூடிட்டேன்.

இவனுங்க கிண்டலுக்கெல்லாம் பயந்துக்கிட்டு நம்மளோட இசைப்பயணத்தே பாதியிலே நிறுத்திடக் கூடாதுன்னு அன்னிக்கி மங்கம்மா மாதிரி சபதம் எடுத்தேன்.

அடுத்தடுத்த கிளாஸ்லே சுந்தர்சார் ராகத்தோட பேரையெல்லாம் கத்துக் கொடுத்தாரு. தெரிஞ்ச சினிமா பாட்டையெல்லாம் ஞாபகப் படுத்தி இது என்னா ராகம்?, அது என்னா ராகம்?-ன்னு குடைஞ்சு மனப்பாடம் பண்ணி வச்சுக்கிட்டேன். பசங்க கேட்டா ‘டக்’குன்னு சொல்லலாம்லே?

சும்மா சொல்லக்கூடாது, ட்யூஷனுக்கு போனா சாரோட அம்மா நல்லாவே கவனிப்பாங்க. “அம்பி.. சூடா ஒரு பில்டர் காபி போட்டுத் தாரேன் ஷாப்ட்டு போப்பா”ன்னு உபசரிப்பாங்க.

ஒருநாளு ட்யூஷன் நடந்துக்கிட்டு இருக்கிறப்போ சுந்தர்சாரு ‘புசுக் புசுக்’குன்னு ரெண்டு மூணு தடவை பாத்ரூம் போயிட்டு போயிட்டு வந்தாரு. வவுத்தாலே போவுதுன்னாரு.

அந்த நேரம் பாத்து “சாரு வீட்டுலே இருக்காரா?”-ன்னு ஒரு பையன் தேடி வந்தான். சாரு உள்ளார “காம்பேதி” ராகம் பாடிக்கிட்டு இருக்காருன்னு சொல்லிப்புட்டேன். சார் காதுலே வாங்கிட்டாரோ என்னவோ. அன்னியிலேந்து ராகத்தோட பேரு கத்துக் கொடுக்கறதையே நிறுத்திப்புட்டாரு.

“நுதலும் தன் வாயால் கெடும்”ன்னு சொல்லுவாங்களே. அது இதுதான் போலிருக்கு.

ஒருநாளு ப்ரண்ட்ஸ்ங்களோட கிளாஸை கட்டடிச்சுட்டு ராதா கபேயிலே உக்காந்து காபி குடிச்சிக்கிட்டு இருந்தேன். பேக்கிரவுண்டுலே “மச்சானை பாத்தீங்களா.?” ன்னு ஜானகியம்மா குத்துப்பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க.

“பாவம் இந்தம்மாவும் தெனைக்கும் அவுக மச்சானை பாத்தியளா, மச்சானை பாத்தியளான்னு தேடிக்கிட்டு இருக்காக. எவனாச்சும் தேடி கொடுக்குறானா பாத்தியா..?” பின்னாள்லேந்து ஒரு கமெண்ட்.

எங்கேயோ கேட்ட குரலா இருக்கேன்னு திரும்பி பாத்தா நகுதா சைத்தான் நின்னுக்கிட்டு இருந்தான். “மச்சான் இந்தப் பாட்டு எந்த ராகத்துலே போட்டுருக்கானுங்க?” என்னைப் பாத்துத்தான் கேட்டான். இவன் நம்மள கூடு விடுறான்னு ஒரே டேக்குலேயே புரிஞ்சுப் போச்சு.

ஆஹா.. நாம ஒண்ணு ரெண்டு ராகத்தோட பேரை சாருக்கிட்டே கத்துக்கிட்டு வந்த நியூஸை எவனோ இவன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்குறதே கெஸ் பண்ணிட்டேன்.

“இது எந்த ராகம்? அது எந்த ராகம்?”-ன்னு நிறைய பாட்டோட குலம், கோத்திரத்தை தெரிஞ்சு வச்ச நான், இத மாத்திரம் கேக்காம உட்டுப்புட்டேன். இப்ப செமத்தியா இவங்கிட்டே மாட்டிக்கிட்டேன்.

“வாங்க.. வாங்க.. கிளாசுக்கு நேரமாயிடுச்சு”-ன்னு ப்ரண்ட்ஸ்ங்களை கூட்டிக்கிட்டு மெதுவா நழுவிட்டேன். அப்பாடா.. இன்னிக்கி ஒரு வழியா இந்த சைத்தான்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்ன்னு ஒரே சந்தோஷம்.

நானும் என் பங்குக்கு இவனுக்காக ஏதாவது வேட்டு வைக்கணுமே? இவனுக்கு ஏதாவது பட்டப்பெயர் வச்சாத்தான் சரிப்பட்டு வருவான்னு நெனச்சேன். நகுதா எப்பப் பார்த்தாலும் மூக்கை சிந்திக்கிட்டே இருப்பான். சுந்தர்சாருக்கிட்டே கத்துக்கிட்ட ராகத்தோட பேரு இப்ப எனக்கு கைக்கொடுத்திச்சு. என் ஆத்திரம் தீர அவ்னுக்கு “சிந்து பைரவி”ன்னு பட்டப்பெயர் வச்சிட்டேன். அது பேமஸ் ஆயிடுச்சு.

ஒரு நாள் D.J. சாரு கிளாஸ்லே இங்கிலீஷ் பாடம் நடத்திக்கிட்டு இருந்தப்போ “சார். இவன் மாண்டலின் நல்லா வாசிப்பான்”னு
குணசேகரன் போட்டு குட்டை உடைச்சுட்டான்.

“வெரிகுட்..வெரிகுட் நாளிக்கே வந்து ட்ரூப்லே சேர்ந்துடு”ன்னாரு. காலேஜ்லே மியுசிக்குக்கு D.J. தான் இன்சார்ஜ். படு ஜாலியான ஆசாமி.

காலேஜ்லே D.J. இங்கிலீஷ் கிளாஸ் நடத்தும்போது கூட தெனைக்கும் ஒரு திருக்குறள் போர்ட்டுலே எழுதிட்டுத்தான் ஆரம்பிப்பாரு. அவரோட இந்த பழக்கம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. ஆங்கில இலக்கியம் கத்துக் கொடுக்குற ஒரு வாத்தியாரு தமிழ் மேல இப்படி ஒரு பக்தி வச்சிருக்காருன்னா அத பாராட்டணும்தானே?

ஒருநாளு “உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு” – ன்னு எழுதி வச்சாரு.

ஒரு மாணவன் எழுந்திச்சு “சார் நாடா சார்…?” – ன்னு கேட்டான். “ ஆமாம் நாடுதாண்டா”ன்னு கூலா பதில் சொன்னாரு. மறுபடியும் எழுந்து “நாடா சார்….?”-ன்னு கேக்க கடுப்பாயிட்டாரு. “நாடு…. நாடு.. நாடு… எத்தனை தடவை சொல்லுறது?” அப்டின்னு சத்தம் போட்டாரு.

அப்பத்தான் நானும் கவனிச்சுப் பாத்தேன். அவரோட அண்டர்வேரோட ‘நாடா’ பேண்ட்டுக்கு வெளியே தொங்கிக்கிட்டு இருந்திருக்கு. அதத்தான் அவன் அப்பத்திலிந்து “நாடா சார்.. நாடா சார்”ன்னு உஷார் படுத்துயிருக்குறான். ரொம்ப நேரம் கழிச்சு புரிஞ்சுக்கிட்ட வாத்தியார் நாடாவை எடுத்து உள்ளே விட்டுக்கிட்டு தர்மசங்கடுத்துலே நெளிஞ்சு அப்பறம் ஒரு மாதிரியா சமாளிச்சிட்டாரு.

D.J. சாரு, சொன்னாமாதிரியே என்னை மியுசி ட்ரூப்லே சேத்துக்கிட்டாரு. போனதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சது மியுசிக்குலே கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்குன்னு. ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ன்னு சொல்லுவாங்களே அது ரொம்ப ரொம்ப கரெக்ட்டு.

மியுசிக் ரிகர்ஸல் நேரத்துலே நிறைய வேடிக்கையெல்லாம் நடந்திருக்கு. பாடகனா ஆவணும்னு நெறைய பேரு செலக்க்ஷன் ஆகுறதுக்காக வருவானுங்க. “சம்சாரம் என்பது வீணை”ங்குற பாட்டை ஒருத்தன் பாட ஆரம்பிச்சுட்டு “மணம், குணம்.. மணம், குணம்-ங்குற இடத்துலே திக்கிக்கிச்சு. அதுக்கு மேலே மேட்டரு வரல்லே. “காரம் மணம் குணம் நெறஞ்சது TVS மார்க் ரத்தினம் பட்டணம் பொடி”ன்னு D.J.சாரே முடிச்சு வச்சாரு.

இன்னொருத்தன் பந்தாவா வந்து ஆராதனா படத்துலே வர்ற “கோரா காகஸ்கா” –ங்கற பாட்டுலே வர்ற “ஆஹா.. ஏஹே.. ஓஹோ”-ன்னு தொகையறாவை இழுத்துட்டு சம்மந்தமே இல்லாம “ரூப் தேரா மஸ்தானா”–ங்குறா இன்னொரு பாட்டோட பல்லவியை ஆரம்பிச்சான் பாருங்க D.J. வாழ்க்கையே வெறுத்துட்டாரு.

காலேஜ் மியுசிக் ட்ரூப் ஒரு அருமையான டீமா அமைஞ்சிருந்துச்சு. பாட்டுப் பாட சுரேஷ். லீட் கிடாருக்கு சுரேஷ் பாபு, லீட் வயலினுக்கு ரமேஷ், பேஸ் கிடாருக்கு ராபர்ட் – இன்னும் ஆர்கன், ரிதம் கிடார், ட்ரம் செட், ரோட்டோ ட்ரம், காங்கோ, பேங்கோஸ், பெர்க்யூஷன்னு சொல்லிட்டு ஒரு முழு செட்டப்பே இருந்துச்சு. மாண்டலினுக்கு வேறு வழி இல்லாம என்னை போட்டிருந்தாங்க. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை”ம்பாங்களே அது மாதிரி.

“அடுத்தாத்து அம்புஜத்தே பாத்தேளா”-ங்குற பாட்டை கிடாருலே சுரேஷ் பாபு தனி ஆவர்த்தனம் பண்ணுவான் பாருங்க.. அப்பப்பா.. “என்னத்தெ செய்வே?” “அடக்கி வைப்பேன்”, “அதுக்கு மேலே..?” “பல்லை உடைப்பேன்” அத தொடர்ந்து ஒரு சிணுங்கலான அழுகை- இது எல்லாத்தையும் ஒண்ணு விடாம அப்படியே அவன் வாசிக்கும்போது ஆடியன்ஸ் பயங்கரமா கைத்தட்டுவாங்க.

“வான் நிலா, நிலா அல்ல” பாட்டுக்கு ரமேஷ் வயலின் வாசிச்சான்னா ஒரிஜினல் ரிகார்ட் பீஸை கேக்குற மாதிரியே இருக்கும்.

பாம்பே டூ கோவா -ங்குற படத்துலே வர்ற “தேகானா”, “எக் தின் பித் ஜாயேகா மாட்டீக்கே மோல்”-ங்குற முகேஷ் பாட்டு, ஷோலே படத்துலே “மெஹ்பூபா, மெஹ்பூபா” இதெல்லாம் பாடி செயின்ட் ஜோஸப் காலேஜ், தேவர் ஹால், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அங்கங்கே நடந்த அனைத்து கல்லூரி போட்டியிலே நாங்கத்தான் முதல் பரிசை தட்டிக்கிட்டு வருவோம்.

சில சமயத்துலே D.J. சாரே கெஸ்ட் ஆர்டிஸ்ட்டா மேடையிலே வந்து அக்கார்டின் வாசிப்பாரு. மனுஷன் போட்டு அசத்துவாரு.

ஒரு ஏழெட்டு பாட்டோட BGM பீஸ் துக்கடா துக்கடாவா தெரிஞ்சு வச்சிக்கிட்டு நானும் ஒரு பெரிய இசை கலைஞனாட்டம் மூணு வருஷத்தை எப்படியோ ஓட்டினேன்.

எங்க மியுசிக் ட்ரூப் நிறைய பரிசை தட்டிக்கிட்டு வந்ததைப் பாத்து நகுதா வாயடைச்சு போயிட்டான். நான் ‘கூட்டத்தோட கோவிந்தா’ போடுற சமாச்சாரம் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அவன் கண்ணுக்கு நான் மியுசிக்லே ஒரு பெரிய மேதாவி. என்னை பப்பி லஹ்ரி ரேஞ்சுக்கு புகழ ஆரம்பிச்சுட்டான். வித்தியாசம் என்னான்னா அவரு ஒரு அரை கிலோ வெயிட்டுலே செயின், டாலர், மோதிரம். பிரேஸ்லெட்டுன்னு மாட்டிக்கிட்டு அலைவாரு. நான் ஒண்ணுமே போடாம அலைஞ்சேன். (இருந்தாத்தானே போடுறதுக்கு?)

காலேஜ் லைப் முடிஞ்ச பிறகு அந்த மாண்டலினை தொட்டுக்கூட பாக்கலே. ஏன்னா கம்மி அறுந்துப் போனா மாட்டத் தெரியாது. ட்யூனிங் பண்ணக்கூட தெரியாது. என்னோட மாண்டலின், வீட்லே ஒரு மூலையிலே கம்பியெல்லாம் அறுந்து பரிதாபமா கெடந்துச்சு. ஒரு தடவை என் தங்கச்சி பர்வீன், கையிலே வச்சுக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதுக்கு அது உபயோகமா இருந்துச்சு. ஒரு நாளு என் பாட்டி குளிக்கறதுக்கு தண்ணி சுட வைக்கிறேன்னு சொல்லிட்டு விறகுக்கு பதிலா அத வச்சு எரிச்சுட்டாங்க.

அந்த விஷயம் கேள்விப்பட்டதுமே எனக்கு ரொம்ப வருத்தமா போயிடிச்சு. இன்னொரு பக்கம் சந்தோஷமா இருந்துச்சு, ட்யூனிக் ப்ண்ணுற டென்ஷன் ஒழிஞ்சுச்சேன்னு.

அதுக்கப்புறம் எத்தனையோ வருஷம் கழிச்சு நகுதாவை மெட்ராஸ்லே வச்சு சந்திச்சேன். ஒரு பேமஸ் காலேஜ்லே காமர்ஸ் புரோபஸரா வேலை பாக்குறதா சொன்னான்.

“மச்சான் காலேஜ்லே படிக்கும்போது உன்னைப் போட்டு பயங்கரமா கலாட்டா பண்ணுனேன். அந்த பாவமோ என்னமோ தெரியலே இப்ப என் ஸ்டூடண்ட்ஸ் என்னைப் போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறானுங்க. பேசாம சிங்கப்பூருக்கு ஓடிடலாமான்னு இருக்கேன்”னு சொன்னான். பாக்க பாவமா இருந்துச்சு. அவ்னுக்காக பரிதாபப்பட்டேன்.

கடைசியா “சரி மாப்ளே போயிட்டு வர்றேன்”னு சொல்லிட்டு கிளம்பினேன். போவும்போது, “மச்சி.. அந்த பாட்டு பாடவா பாட்டை ஒரு தடவை பாடி காண்பியேன். என்றான்.

“போடா….ங்..”

ஊஹும்…… இவன் இந்த ஜென்மத்திலே திருந்தவே போறதில்லேன்னு முடிவு செஞ்சிட்டேன்.

அப்துல் கையூம்


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்