பலா

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

பவளமணி பிரகாசம்


கடு கடுவென்று முகமிருக்கு,
சிடு சிடுவென்று பேச்சிருக்கு.
உப்புப் போட கவனமிருக்கு,
சூடாக காப்பி போட்டிருக்கு.

கொலுசில் இளமை ஒலிக்குது,
கொஞ்சல் மட்டும் விலக்குது.
பாட்டில் சரச சங்கேதம் புரியுது,
பார்த்தால் கழுத்தை நொடிக்குது.

சினிமா பார்க்க கூப்பிட்டால்,
வெளியே உண்ண விரும்பினால்,
வேண்டா வெறுப்பாய் கிளம்புது,
வேப்பங் காயாய் கசக்குது.

நாட்டு நடப்பில் நாட்டமாய்
நானாய் கருத்து கூறினால்,
வாதம் ரொம்ப வளருது,
வம்புச் சண்டை போடுது.

வலிய நானும் பேசினால்
வாயை மூடிக் கொள்ளுது;
உப்புப் பெறாத சங்கதியும்
வீண் விவகாரமாய் மாறுது.

பழைய பகையை நினைக்குது-
வார்த்தையெல்லாம் சாட்டை.
வயது ஏறிப் போனாலும்
வீம்பு ரொம்ப காட்டுது.

கருத்தில் புதுமை மிளிருது,
கடுப்பாய் எனைத் தவிர்க்குது.
தாசனாகத் தண்டனிட்டேன்,
தாமரை இலை நீராய் நழுவுது.

கணிணியில் பொழுதைக் கழிக்குது,
கதைகள் கூடிப் பேச மறுக்குது.
தனியறையில் படுத்துறங்குது,
தவிப்பை ரசித்து களிக்குது.

ஏளனமாய் நகைக்கையிலே,
அந்த வலி கூட இதமாயிருக்கு.
முகத்தைத் திருப்பிக் கொண்டாலும்,
கரையில் மோதும் அலையானேன்.

கள்ளாய் மனசும் கிறங்குதே,
கள்ளம் புரிஞ்சி போனதே.
முள் மூடிய பலாச் சுளை இதுவோ ?
முழுதாய் பகிர்ந்த உணர்விதுவோ!

சூரியனைச் சுற்றும் பூமி,
பூமியைச் சுற்றும் நிலவு-
மாறாத இயற்கை நியதி,
அதுவும் ஒரு யந்திர கதி.

உற்றார் உறவினர் ஆசி கூற,
ஆசையாக கலியாணம் முடிச்சோம்,
பிள்ளைகளைப் பெத்து வளத்தோம்,
ஆளாக்கி அனுப்பியும் வச்சோம்.

திரும்பத் திரும்பத் தனி வீட்டிலே,
நினச்சி நினச்சித் திகட்டலியே!
வாழ்நாளும் வீணாய் போகுதே,
விருந்து இன்னும் முடியலியே!

பொத்திப் பொத்தி வச்சாலும்
பூவின் வாசம் வீசாதோ ?
பாறை இறுகிக் கிடந்தாலும்
அடியினில் சுனை ஊறாதோ ?

அலங்கார வல்லியே! அல்லியே!
அரக்கி போல் ஆடுறியே!
ஊனும், உயிரும் உருகிடுதே!
உலையில் போட்டு அவிக்காதே!

ஏதுக்கடி இந்த வீராப்பு ?
இன்னும் என்ன பொல்லாப்பு ?
எட்டி எட்டிச் செல்லும் என் கிழவியே!
உன் தடந்தான் என்றும் என் வழியே!

***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்